ஜெனீவா மனித உரிமை ஆணைய உயர் அதிகாரிகளுடனான இணையவழி சந்திப்பு தமிழ் தேசிய கட்சி தலைவர்களுடன் நடைபெற்றது

ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணையத்தின் உயர் அதிகாரிகளுடனான முக்கிய இணையவழி சந்திப்பு ஒன்று ஐந்து தமிழ் தேசிய கட்சி தலைவர்களுடன் 1- 03- 2022 அன்று இலங்கை நேரம் இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு 25 பெப்ரவரி 2022 திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் பின்னர் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அலுவலக உயரதிகாரிகள் தமிழ்தேசிய கட்சித் தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொண்டிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இலங்கை மீதான 46/1 பிரேரணை கொண்டுவரப்பட்டு அதன் மீதான ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் மார்ச் 3ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட இருக்கும் வேளையிலே நடந்த இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இலங்கை சார்பில் வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ் தலைமையில் ஒரு குழுவினர் ஐநாவுக்கு நேரடியாக பயணம் செய்திருந்த வேளையில் இலங்கை தமிழ் மக்கள் சார்பில் ஐநா உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற முக்கிய சந்திப்பு இதுவே ஆகும்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான நீதியரசர் திரு விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் ஈபிஆர்எல்எஃப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடல்நிலை காரணமாக திரு ஸ்ரீகாந்தா அவர்கள் இறுதி நேரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.

ஆக்கபூர்வமான இந்த சந்திப்பு கலந்துரையாடல் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் வரை நீடித்தது.

இதில் யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறலுக்கான நீதிப் பொறிமுறை, தண்டனையின்மை நீடிப்பு, காணி அபகரிப்பு, குடிப்பரம்பல் சிதைப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம், பயங்கரவாதத் தடைச் சட்டம், அரசியல் கைதிகள், மற்றும் அரசுக்கு தேவையானவர்களுடைய விடுவிப்பு காணாமல் ஆக்கப்பட்டோர், அக்குடும்பங்களுக்கான நீதி, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக செயற்பாடுகள், மற்றும் புதிய ஏற்பாட்டில் சாட்சியங்கள், ஆதாரங்களைத் திரட்டுதல் என்பன பற்றி தமிழ் கட்சி பிரதிநிதிகளால் ஐநா உயர் அதிகாரிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அரசாங்கம் தனது தரப்பில் பலரை ஐநா அமர்வுக்கு அனுப்பி வைத்திருக்கும் இவ்வேளையில் தமிழர் தரப்பு பிரதிகளை ஐநா அலுவலர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் வெற்றிகரமான நடைபெற்றது தமிழர் தரப்பின் மிகவும் முக்கியமான நகர்வாக கருதப்படுகிறது.

மேலும் கடந்த செப்டெம்பர் மாதம் 2020 ஆம் ஆண்டு ஐந்து கட்சிகளினால் கையொப்பம் இடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் இம்முறை ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டு இருப்பதும் சுட்டிக் காட்டப் பட்டது.

Posted in Uncategorized

பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி- 5 தமிழ்க் கட்சிகள் ஐ.நாவுக்கு கடிதம்

பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி- 5 தமிழ்க் கட்சிகள் ஐ.நாவுக்கு கடிதம்: ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியனவும், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகியனவற்றின் தலைவர்கள் கையெழுத்திட்ட ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2022 பெப்ரவரி 25ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ள மேற்படிக் கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்நிலையில், “இலங்கையில் நீடித்து வரும் நெறிமுறை முரண்பாட்டிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டு வருவது இனப்படுகொலைக்கு சமமாகும்” என தமிழ் கட்சிகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் “இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொது மக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் கடித தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட்டுள்ளது

பிப்ரவரி 25, 2022
மதிப்பிற்குரிய மிசேல் பச்லெட்
ஐ. நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்
ஜெனிவா

அன்புள்ள உயர்ஸ்தானிகர் அம்மையார்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எழுத்துமூலம் அறிவிப்பை வெளியிட நீங்கள் தயாராகி வரும் நிலையில், ஐ.நா தீர்மானம் 46/1, மார்ச் 2021 இல் இயற்றப்பட்டதில் இருந்து தமிழர்களின் நிலை குறித்த மதிப்பீட்டை இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

ஜனவரி 12, 2021 அன்று பொறுப்புக்கூறலைக் குறிப்பிடும் உங்கள் கீழ்க்காணும் அறிக்கைக்கு நாங்கள் எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறோம்:
“குற்றவியல் பொறுப்புக்கூறலை முன்னெடுத்துச் செல்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் உறுப்பு நாடுகளுக்கு பல தெரிவுகள் உள்ளன. இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேலதிகமாக, இலங்கையில் அனைத்து தரப்பினரும் செய்த குற்றங்களுக்கு எதிராக உறுப்பு நாடுகள் சர்வதேச விசாரணை தீவிரமாக, வேற்று நாடுகள் அல்லது உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்ட கொள்கைகளுக்கு ஏற்ப தங்கள் சொந்த தேசிய நீதிமன்றங்களுக்கு முன்பாக பாரப்படுத்த முடியும். உயர் ஸ்தானிகர் உறுப்பு நாடுகளை மனித உரிமை ஆணையரின் அலுவலகத்தோடு பணியாற்ற, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் பிரதிநிதிகள் உட்பட பொறுப்புக்கூறலுக்கான இவ்வாறான முறைமைகளை ஊக்குவிக்க, சாத்தியமான சர்வதேச குற்றங்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பித்தல் மற்றும் இதில் முன்னேறுவதற்கான அர்ப்பணிப்பு திறனுக்கு ஆதரவு வழங்க ஊக்குவிக்கிறார். இந்த முயற்சிகள் உறுப்பு நாடுகள், நம்பத்தகுந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் அல்லது துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அரசு அதிகாரிகள் மற்றும் பங்கேற்றவர்களுக்கும் எதிரான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற இலக்குத் தடைகளையும் விண்ணப்பிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நடைமுறை சாத்தியமான நன்மைகளை வழங்கவும் அத்துடன் அதற்கான முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்குங்கள்”.

பிப்ரவரி 18, 2021 அன்று 20 முன்னாள் உயர்மட்ட ஐ.நா அதிகாரிகளின் பகிரங்க கடிதத்தையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம். கையொப்பமிட்டவர்களில் நான்கு முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்களும் அடங்குவர் – ஐ.நா.வின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள், இலங்கைக்கு விஜயம் செய்து அறிக்கைகளை எழுதியிருந்த ஒன்பது முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள், மேலும், செயலாளர் நாயகத்தின் இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழுவின் மூன்று உறுப்பினர்களும் அடங்குவர்.
கையொப்பமிட்டவர்கள் குறிப்பிட்டது போல், ” இலங்கை தொடர்பாக சமீபத்தில் மனித உரிமைகள் ஐ.நா. உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மீண்டும், நீதித்துறை மற்றும் பொறுப்பு கூறலில் நாட்டின் முன்னேற்றம் இன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்
பகுப்பாய்வின் அடிப்படையில் காணப்படும் போக்குகளின் நீடித்த தேடலின் மையக் கூறுகளின் படி இலங்கையில் அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் மற்றும் உரிமை மீறல்கள் மற்றும் மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது வெகுஜன மனித உரிமைகளுக்கான நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான தீர்க்கமான சர்வதேச நடவடிக்கைக்கான கட்டாய தேவையை உருவாக்குகிறது.” முடிவில், ” அனைவரின் மனித உரிமைகளையும் அர்த்தமுள்ள முறையில் நிலைநிறுத்த இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான தயக்கமானது தீர்க்கமான, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதற்கான சர்வதேச நடவடிக்கை மட்டுமே இலங்கையின் வன்முறை சுழற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும்”.

கடந்த ஆறு மாதங்களில், 2009 இல் முடிவடைந்த போரின் போது மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமல் தொடர்ந்து இருந்தது மற்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களை அரசாங்கம் மீண்டும் மீண்டும் புறக்கணித்தது. இதனால், நீதி ஸ்தம்பித்து, தண்டனையின்மை நீடித்தது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் இலங்கை அதிகாரிகளால் அதிகளவில் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இலங்கையின் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் அதிகரித்த பயன்பாடு அமைதியான போராட்டங்களுக்கான சந்தர்பங்களை கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படுவது தொடர்கிறது.

“அபிவிருத்தித் திட்டங்கள்” என்ற போர்வையில், மக்கள் தொகையை மாற்றவும், வடகிழக்கு தமிழ் பேசும் பகுதிகளின் தொடர்பை சீர்குலைக்கவும், தமிழ் மக்களுக்கு அவர்களின் நிலங்கள் அணுகலை மறுக்கவும், அரசாங்கத்தால் இயக்கப்படும் சிங்கள – பௌத்த குடியிருப்புக்கள் (குடியேற்றங்கள்) பாரம்பரிய தமிழர் பகுதிகளில் வளர்ந்து வருகின்றன.. மகாவலி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம், வன திணைக்களம் மற்றும் வனவிலங்கு திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய சிங்கள – பௌத்த நபர்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவத்தின் பெருமளவிலான பிரசன்னத்தினால் இந்த அத்துமீறல் எளிதாக்கப்படுகிறது. தற்போதைய இனவாத அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் சனத்தொகை நிலையை சீர்குலைத்து, தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களுக்குள் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் குறியாக உள்ளது. சிங்கள – பௌத்தர்களை கொண்ட பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களில் இணைத்து, அதன் மூலம் தமிழ் பிரதேசங்களில் சிங்கள – பௌத்த சனத்தொகையை அதிகரிக்கும் வகையில் பிரதேச எல்லைகளை வரையறுக்கும் வேலைத்திட்டத்தில் இலங்கை அரசாங்கமும் ஈடுபட்டு வருகின்றது என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் தமது வாழ்வில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) பிப்ரவரி 2017 இல், தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” அடைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ “கற்பழிப்பு முகாம்கள்” பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது. மேலும், ஏப்ரல் 2013 இல் இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக அறிக்கையின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் உள்ளனர். குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு 2020 ஆம் ஆண்டில் உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையில் இருந்து வருவதாகக் கூறியது. தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களம் (TID), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் பிற அரசாங்க புலனாய்வு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகின்றனர் மற்றும் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்த குடும்பங்களின் அமைதியான போராட்டங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பல முறையீடுகள் மற்றும் தீர்மானங்கள் இருந்தபோதிலும், இலங்கை தொடர்ந்து கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்துகிறது. பல தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டப்படாமலோ அல்லது விசாரணையின்றி வருடக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டும் அல்லது நியாயமற்ற விசாரணைகளின் பின்னர் தண்டனை பெற்ற போதும், இலங்கைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கூட தமிழர்களுக்கு எதிரான அட்டூழியக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை. தற்போதைய அரசாங்கத்தினால் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் தங்களின் தண்டனை அல்லது குற்றச் சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நீடித்து வரும் நெறிமுறை முரண்பாட்டிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டு வருவது இனப்படுகொலைக்கு சமம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும், அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

தமிழ் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குடியேற்றங்களை நிறுத்துவதற்கும், சிங்கள – பௌத்த பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களுக்குள் இணைத்து பிரதேச எல்லைகளை நிர்ணயிப்பதை நிறுத்துவதற்கும், போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் தமிழர் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் அபரிமிதமான பிரசன்னத்தை குறைப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களை தடுப்பதற்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் அன்பான கவனத்திற்கும், பரிசீலனைக்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காகவும், இலங்கையின் தமிழ் மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த உண்மைகளை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.

நன்றி, அன்புடன்

நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் பா.உ, தலைவர் . தமிழ் மக்கள் கூட்டணி
அ. அடைக்கலனதன் பா.உ, தலைவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
த. சித்தர்த்தன் பா.உ, தலைவர், தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம்
க. பிரேமசந்திரன் தலைவர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
ந. சிறிகாந்தா, தலைவர், தமிழ் தேசியக் கட்சி

“ஒரு நாடு, ஒரே சட்டம்” செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (28) வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நிறுவப்பட்ட ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்தது.

நாட்டின் சகல மாகாணங்களையும் உள்ளடக்கிய பொது மக்கள் மற்றும் நிபுணர்கள் குழுவின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதாலேயே ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

மியன்மார் அரிசி இறக்குமதி ஒப்பந்தத்தில் இலங்கைக்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பு!

மியன்மார் மற்ற நாடுகளுக்கு அரிசி விற்கும் விலையை விட இலங்கைக்கு 305 மில்லியனுக்கும் அதிக விலைக்கு அரசியியை விற்பனைசெய்துள்ளதாக ‘அருணா’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

மியன்மாரிடமிருந்து ஒரு மெட்ரிக் தொன் அரிசியை இலங்கை 440 டொலர் மற்றும் 450 டொலர்களுக்கு இடைப்பட்ட விலையில் கொள்வனவு செய்யும் என இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஆனால் சமீபத்தில் மியான்மர் மற்ற நாடுகளுக்கு ஒரு மெட்ரிக் டன் அரிசியை 340 டொலர் முதல் 350 டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக மியான்மரின் முன்னணி நாளிதழான Global New Light Of Myanmar செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, மியன்மாரிலிருந்து இலங்கை கொள்வனவு செய்த ஒரு மெட்ரிக் தொன் அரிசிக்கான மேலதிக கொடுப்பனவு 100 டொலர்கள் ஆகும். இது இலங்கை மதிப்பில் 20,300 ரூபாய்க்கு அதிகம் ஆகும்.இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கை இறக்குமதி செய்யவுள்ள அரிசியின் அளவு 150,000 மெற்றிக் தொன் என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் ஒரு டன் ஒன்றுக்கு 450 அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்யும் அதேவேளை ஏனைய நாடுகள் அதனை ஒரு டன் 350 டொலர்களுக்கு கொள்வனவு செய்வதாகவும், அரிசியின் தரத்தை அவர்கள் பொருட்படுத்துவதில்லை எனவும் மியான்மர் அரிசி வர்த்தக சங்கத்தின் செயலாளர் அண்மையில் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கையுடனான அரிசி ஒப்பந்தம் மிகவும் இலாபகரமானதாக உள்ளது என்றும் செய்தித்தாள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசாங்கத்துடன் தொடர்புடைய ஒரு அதிகார பலம்மிக்க நபர் அரிசி தொன் ஒன்றுக்கு 100 டொலர் தரகு பணமாக வசூலிப்பதாகவும் இந்த இற்குமதிக்கு மட்டும் இரண்டு வருடங்களில் 30 மில்லியன் டாலர் தரகு பணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் இலங்கை அபிவிருத்தி நிர்வாகத்தின் (SLIDA) மூத்த ஆலோசகர் ஐ.எஸ். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாட்டுக்கு 15 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொடுக்கும் மியன்மார் அரிசி ஒப்பந்தம் சந்தேகத்திற்குரியது எனவும் குறிப்பிட்டார்.

இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த இராஜதந்திரியை கொழும்பிற்கு அனுப்புகிறது அமெரிக்கா

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார். இவரது விஜயமானது மார்ச் மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சி ஏற்பின் பின்னர் இலங்கை குறித்த அமெரிக்காவின் பார்வை மற்றும் அணுகுமுறை என்பவற்றில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.

இதனடிப்படையிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மூத்த இராஜதந்திரியான விக்டோரியா நுலாண்ட் கொழும்பு வருகிறார்.

இவரது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சியினரையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வொஷிங்டன் தளமாகக் கொண்ட உலகளாவிய மூலோபாய ஆலோசனை மற்றும் வணிக இராஜதந்திர நிறுவனத்தின் மூத்த ஆலோசகரா பணியாற்றியுள்ளார்.

32 ஆண்டுகளாக அமெரிக்க இராஜதந்திர தூதவராக பணியாற்றியுள்ள விக்டோரியா நுலாண்ட் , ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் செயலாளர் ஜோன் கெரியின் கீழ் 2013 – 2017 வரை ஐரோப்பிய மற்றும் யூரேசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளராக பணியாற்றினார்.

செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் பதவிக்காலத்தில் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளராகவும், 2005 – 2008 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் இரண்டாவது பதவிக் காலத்தில் நேட்டோவுக்கான அமெரிக்க தூதராகவும் செயற்பட்டுள்ளார்.

மேலும் 2010 – 2011 வரை ஐரோப்பாவில் மரபு ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தத்தில் சிறப்புத் தூதுவராகவும் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் இருந்துள்ளார்.

2003 – 2005 வரை துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நுலாண்ட் பணியாற்றியுள்ளார். அத்துடன் அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பல்வேறு திட்டங்களில் ரஷ்யா, சீனா மற்றும் மங்கோலியாவில் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு மூத்த இராஜதந்திர அதிகாரியை அமெரிக்கா இலங்கைக்கு அனுப்புகின்றது.

ஜனாதிபதி ஜோ பைடனின் முக்கிய செய்தியுடனேயே விக்டோரியா நுலாண்ட் இலங்கை வருவதாக கொழும்பு இராஜதந்திர தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலர் விக்டோரியா நுலாண்ட் வருகை இரு நாட்டு ஒத்துழைப்புகளை மேலும் விரிவுப்படுத்தும் என இவரது விஜயம் குறித்து அரசாங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மகா சிவராத்திரி விரதம் இன்று(01)

இந்துக்கள் சிவபெருமானுக்காக அனுஷ்டிக்கும் மகா சிவராத்திரி விரதம் இன்றாகும்(01).

வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த நாளின் சிறப்பு குறித்து கந்தபுராணம் மற்றும் அக்னி புராணம் உள்ளிட்ட பல நூல்களில் குறிப்பிப்பட்டுள்ளது.

சிவராத்திரி அன்று சிவனை வழிபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.

சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

24 வருடங்கள் சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள் என்பதுடன், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதி பெற்று முத்தியை அடையலாம் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

Posted in Uncategorized

இலங்கைக் கடற்படைக்கு பயிற்சிகளை வழங்க திருகோணமலைக்கு வந்தது இந்திய ‘நிரீக்ஷக்’ கப்பல்

இலங்கைக் கடற்படையினருக்கு ‘கலப்பு வாயு’ பயிற்சிகளை வழங்குவதற்காக இந்தியக்கடற்படைக்குச் சொந்தமான ‘நிரீக்ஷக்’ கப்பல் நேற்று திங்கட்கிழமை திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.

டைவிங் பயிற்சி வழங்கலுக்கு ஏதுவான இந்தக் கப்பல், கடற்படையின் பாரம்பரியத்திற்கு அமைவாக இலங்கைக் கடற்படையினரால் வரவேற்கப்பட்டது.

இலங்கையை வந்தடைந்ததைத் தொடர்ந்து இந்தியக்கப்பலின் கட்டளை அதிகாரி, இலங்கையின் கிழக்குக் கடற்பிராந்தியத் தளபதி ரியர் அட்மிரல் பி.டி.எஸ்.டயஸை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தியக்கப்பல் இலங்கையில் தரித்துநிற்கவுள்ள எதிர்வரும் 10 நாட்களில் வழங்கத்தக்க டைவிங் பயிற்சிகள் தொடர்பில் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தியக்கடற்படைக்குச் சொந்தமான மேற்படி ‘நிரீக்ஷக்’ கப்பல், ஆறுபேருக்கு ஏதுவான கப்பல் தளங்கள் இரண்டையும் மூவருக்கான டைவிங் வசதி ஒன்றையும் கொண்டமைந்திருக்கின்றது. அதுமாத்திரமன்றி வசதியான மீட்பு வசதிகளையும் இக்கப்பல் உள்ளடக்கியிருக்கின்றது.

இலங்கைக் கடற்படையினருக்கு இதனைப்போன்ற பயிற்சிகளை வழங்குவதற்காக இக்கப்பல் ஏற்கனவே கடந்த 2019 ஆம் அண்டு திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகைதந்திருந்தது.

இவ்வாறு இலங்கைக் கடற்படையுடனான தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவது இந்தியாவின் ‘அயல்நாட்டிற்கு முதலிடம்’ கொள்கையின் ஓரங்கமாகும் என்று இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நீதி வேண்டிப் போராடும் பேராயர் மல்கம் ரஞ்சித் பாப்பரசருடன் நேரில் சந்திப்பு

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை திருத்தந்தை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்பு வத்திக்கான் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் இன்று (28) நடைபெற்றது.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, திருத்தந்தை பரிசுத்த பாப்பரசருக்கு இதன்போது தெளிவுபடுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக பிரேரணை கொண்டு வந்தால் ஆதரிப்பேன் – திஸ்ஸ விதாரண

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் யோசனையினை கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்குவேன் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தக்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது.யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்த நிலைமையிலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பது முறையற்றதாகும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டு நீண்டநாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் பலர் கடந்த காலங்களில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு சார்பாக அமையும் என்ற காரணத்தினார் சர்வதேச நாடுகள் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்துகின்றன.

உலகில் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நாடுகளி;ல் பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் நடைமுறையில் இல்லை.

இளம் தலைமுறையினர் மத்தியில் தீவிரவாத கொள்கைகள் ஏதும் கிடையாது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் கொண்டு வரும் அனைத்து யோசனைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் -கோவிந்தன் கருணாகரம்

‘தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ)த்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்த்துள்ளார்.

தமிழரசு கட்சி வடக்கு கிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதும் முன்னெடுத்துவரும் கையெழுத்துப்போராட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாத தடைச்சட்டமானது தமிழர்களை அடக்கி ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமாகும். 1979ஆம் ஆண்டு பாராளுமன்றத்திலே தற்காலிகமாக பயங்கரவாத தடைச்சட்டமானது கொண்டுவரப்பட்டாலும் 1977ஆம் ஆண்டு தேர்தலிலே தமிழீழத்திற்கான ஆணையைக் கேட்டு வென்று பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்; மக்கள் பிரதிநிதிகள்கூட இந்தச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்ற விமர்சனம் தற்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.

அந்த வகையில் நாங்கள் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டுமென்று போராடுவது இந்த நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் இருக்கக்கூடாது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக கணிக்கப்பட்டுக்கொண்டு வந்தார்கள்.

எமது தலைவர்கள் அகிம்சைப் போராட்டம் நடத்தி அடிஉதை பட்டார்கள். எமது இளைஞர்கள் வீறுகொண்டு எழுந்த நேரம் அவர்களை அடக்கி ஒடுக்கலாம் என்ற நோக்கத்தில் கொண்வரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டமானது இன்றும் இந்த நாட்டிலே இருந்துகொண்டிருக்கின்றது.

ஒருகாலத்தில் தமிழ் மக்கள் மாத்திரம் தான் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் கடந்த சில வருடங்களாக குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்பு பெரும்பாலான முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எமது நாட்டில் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கும் எம்மை அடக்கி ஒடுக்கும் ஒரு சட்டமாகவே நான் இதனை பார்க்கின்றேன்.

அந்த வகையில் இந்தச் சட்டமானது இந்த நாட்டின் அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும். நாங்கள் மாத்திரமல்ல ஐரோப்பிய ஒன்றியம் ஏகமனதாக இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் அதாவது இன்னொரு இனத்தை அடக்கி ஒடுக்கும் சட்டமாக இது இருக்கக்கூடாது கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கின்றது என்றும் கூறலாம். ஏனென்றால் இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை நாங்கள் மீள்பரிசீலணை செய்வோம் என்று கூறியிருக்கின்றார்கள். ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாமல் போனால் இலங்கையின் பொருளாதாரம் மிகமோசமான நிலைக்குச் செல்லும் என்பது இந்த அரசுக்குத் தெரியும்.

அந்த வகையில் இந்த அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றியமைப்பதற்காக அதாவது சிறுசிறு மாற்றங்களை கொண்டுவருவதற்காக முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றது. தமிழ் பேசும் மக்களை பொறுத்தமட்டில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் எந்தவித காரணங்களும் கூறாமல் அகற்றப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்றார்.

Posted in Uncategorized