பிரித்தானிய அமைச்சரும் உயர்ஸ்தானிகரும் யாழ்ப்பாணம் விஜயம்

பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் லார்ட் தாரிக் அஹமட் இன்று காலை யாழ். வலி வடக்கு மயிலிட்டித்துறை கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton கலந்து கொண்டிருந்தார்.

மீள் குடியேற்றம் செய்யப்பட்ட குறித்த பகுதிக்கு பிரித்தானிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார்.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட இளைஞர் ஒருவருக்கு தச்சு வேலைக்கான இயந்திரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பிரித்தானிய பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் லார்ட் தாரிக் அஹமட் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது முதலீடு, புலம்பெயர் மக்கள், கல்வி உள்ளிட் பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையைத் தரமிறக்கியமை தொடர்பில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் மீண்டும் விளக்கம்

சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் குறிகாட்டியைப் பொறுத்தமட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழல் கட்டுப்பாடு ஆகியவற்றில் இலங்கை 5 புள்ளிகளைப் பெற்றிருப்பதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இக்குறிகாட்டியில் இலங்கை ஐம்பதை விடவும் குறைவான நிலையிலிருப்பது நாட்டின் கடன் நிலைவரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இம்மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடையும் பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை 19 ஆம் திகதி புதன்கிழமை செலுத்தியிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் இயங்கும் மூன்று முக்கிய கடன் தரப்படுத்தல் நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் ‘ஃபிட்ச் ரேட்டிங்’ தரப்படுத்தல் முகவர் நிறுவனம் இலங்கையை ‘சிசிசி’ நிலையிலிருந்து ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்குவதாகக் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அறிவித்தது.

நாட்டின் கையிருப்பில் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, வெளியகக் கடன்களை மீளச்செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல், எதிர்பார்க்கப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளடங்கலாகப் பல்வேறு காரணங்களால் இலங்கையை ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்குவதாக ஃபிட்ச் ரேட்டிங் விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனமானது இலங்கை தொடர்பில் ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்புடன் மேலும் சில காரணிகளை இணைத்து, திருத்தப்பட்ட புதிய அறிவிப்பை நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிட்டிருக்கின்றது.

அதேவேளை சர்வதேச பிணைமுறிகளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை நேற்றைய தினத்திற்குள் (18 ஆம் திகதி) செலுத்தவேண்டியிருந்த நிலையில், அக்கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அப்பதிவில் ஆளுநர் இலங்கையைத் தரமிறக்கம் செய்திருக்கக்கூடிய மூன்று முக்கிய சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்களான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், மூடியின் முதலீட்டாளர் சேவை மற்றும் ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ் ஆகிய நிறுவனங்களின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குகளையும் இணைத்திருக்கின்றார்.

எனினும் வெளிநாட்டுக்கையிருப்பின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நாடு பாரிய டொலர் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில், மருந்துப்பொருட்கள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப்பொருட்களைக்கூட இறக்குமதி செய்யமுடியாத நிலையேற்பட்டுள்ளது.

எனவே மத்திய வங்கியினால் கடந்த 2021 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் கையிருப்பில் உள்ள 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதிக்காகப் பயன்படுத்துமாறும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்துவதற்கு அதனைப் பயன்படுத்தவேண்டாம் என்றும் பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோள்!

அரசியல் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக ஒருபுறம் வைத்து உங்கள் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் உங்களது ஆதரவினை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, வடக்கு – கிழக்கு மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

9 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை நேற்று ஆரம்பித்து வைத்து அரச கொள்கை விளக்க உரையை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

அதன்போது ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தத்தினால் காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பொதுவானதல்ல. அனைவருக்கும் எம்மால் முடிந்தளவில் நீதி, நியாயம் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர் சிலருக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய நான் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுத்திருந்தேன். அதேபோன்று 1978ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில் அதற்கான திருத்தங்களை கொண்டு வர நாங்கள் தயாராகவிருக்கின்றோம்.

யுத்தத்தினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பே முக்கிய தேவையாகவுள்ளது. சிறுவர்களுக்கு சிறந்த கல்வி, இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள், சுய தொழில்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்புக்கள், மக்களுக்கு சுத்தமான குடிநீர், விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசன வசதிகள், வாழ்வதற்குத் தேவையான வீடுகள், வைத்தியசாலைகள், நெடுஞ்சாலைகள் உட்பட மேலும் பல அடிப்படை வசதிகள் அவர்களுக்குத் தேவையாகவிருந்தது. அனைத்து சமூகத்தினருக்கும் எத்தகைய பராபட்சமுமின்றி தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவது நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக அமையும் என்பது அரசின் கொள்கையாகும்.

இதனால் இந்தப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளிடம் நான் ஓர் வேண்டுகோளை விடுகின்றேன். பல்வேறுபட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக ஒருபுறம் வைத்து உங்கள் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் உங்களது ஆதரவினை வழங்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் உரை வெறும் குப்பை ; கடும் சீற்றத்தை வெளிப்படுத்திய சம்பந்தன்

இன நெருக்கஎக்கான அரசியல் தீர்வு குறித்தோ அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தனது உரையில் எதுவும் தெரிவிக்காமையால் சீற்றமடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பஸில் ராஜபக்ஷவிடம் தமது கடுமையான ஆட்சேபனைனையை பாராளுமன்றத்தில் வைத்தே தெரியப்படுத்தினார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வழங்கிய தேநீர் விருந்துபசாரத்தையும் கூட்டமைப்பு பகிஷ்கரித்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த உரை வெறும் குப்பை. அதில் ஒன்றுமே இல்லை. இதை அப்படியே போய் ஜனாதிபதியிடம் கூறுங்கள்’என ஜனாதிபதியின் சகோதரரும் நிதிஅமைச்சருமான பஸில் ராஜபக்ஷவிடம் நேரில் கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.

ஜனாதிபதியின் பேச்சை செவிமடுத்த கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் கடும் சீற்றமடைந்தார். உரை முடிந்த கையோடு எழுந்து பகிரங்கமாகத் தம் எதிர்ப்பை பதிவு செய்ய அவர் விரும்பினார். எனினும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறி நடக்கக் கூடாது என்பதற்காக அப்படி கருத்து தெரிவிப்பதைத்தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நாடாளுமன்றை விட்டு வெளியே வரும்போது முன்னால் எதிர்ப்பட்ட நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் தமது கோபத்தை அவர் காட்டினார். ‘இந்தப் பேச்சு வெறும் குப்பை. உருப்படியாக இதில் எதுவும் இல்லை. இதைப்போய் அவரிடம் சொல்லுங்கள். நான் தேநீர் உபசாரத்திற்கு வரவில்லை. வந்தால் இதை நானே அவருக்கு நேரடியாகக் கூற வேண்டியிருக்கும்.

அப்படிவேண்டாம் என்பதற்காகத்தான் தேநீர் உபசாரத்தையே தவிர்த்துக் கொண்டிருக்கிறேன். எங்களுடைய நாட்டின் தேசிய பிரச்சினை குறித்து ஏதும் இந்தப் பேச்சில் சொல்லப்படவில்லை. இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உருப்படவே மாட்டீர்கள் என்பதை அவரிடம் போய்ச் சொல்லுங்கள்என்று சம்பந்தன் சீற்றத்துடன் கூறினார் என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி அரசியல் தீர்வு பேச்சுக்கு அழைப்பு விடுப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது

“அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக ஒருசில ஆங்கில, தமிழ், சிங்கள ஊடகங்களிலும், ஒருசில தமிழ் அரசியல் தரப்புகளாலும் வெளியிடப்பட்ட ஊகங்கள்  பொய்த்தன.

ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அடுத்த மூன்று வருடங்களுக்கான தனது அரசாங்கத்தின் கொள்கை நோக்கை விளக்கி பாராளுமன்றத்தில் ஆற்றிய நீண்ட உரையில், தேசிய இனப்பிரச்சினையை, பொருளாதார பிரச்சினையாக மட்டுமே பார்க்கும் தனது கொள்கை மாறவில்லை என்பதை தெளிவாக கோடிட்டு காட்டினார்.

ஜனாதிபதியின் உரை நிறைவு பெற்ற பின், முன்னாள் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் எம்பி மிகவும் சலிப்புடனும், ஏமாற்றத்துடனும் இருந்ததை, அவருக்கு சமீபத்தில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன். அது எனக்கு மிகுந்த மனக்கவலையை தந்தது.

“ஜனாதிபதி இனப்பிரச்சினையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்க திட்டமிடும் டிஜிடல் தொழில்நுட்ப கேபிள்களை பற்றி அதிகம் பேசினார். உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” என அவ்வேளை என்னுடன் உரையாடிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேலியாக தெரிவித்தார், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் சிம்மாசன உரையை அடுத்து கருத்து கூறிய  மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

“அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி இன்று தன் கொள்கை உரையில் அறிவிப்பார் என்று கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட ஊகங்கள் பொய்த்தன. கொழும்பின் ராஜதந்திர சமூகம் தவறாமல் வாசிக்கும் பிரபல வார இறுதி ஆங்கில பத்திரிக்கையின் அரசியல் ஆரூடம் பொய்த்தது.

அப்பத்திரிக்கை தனது ஏற்புடைமையை இழந்தது என்றும், அதை நம்பிய ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும் ஏமாந்தனர் என்றும், சற்று முன் என்னுடன் உரையாடிய பிரபல மேற்கு நாட்டு ராஜதந்திரி சொன்னார்.

“தேசிய இனப்பிரச்சினை” இருப்பதாக ஏற்க ஜனாதிபதி தன் உரையில் தெளிவாக மறுக்கிறார். இந்நாட்டில் நிலவும் பிரச்சினைகளை “பொருளாதார” பிரச்சினையாக மட்டுமே அவர் இருக்கமாக பார்க்கிறார். மக்களுக்கு குடிநீர், நீர்பாசனம், வீடுகள், நெடுஞ்சாலைகள் ஆகிய வசதிகளை வழங்குவதே, நல்லிணக்கத்துக்கு அடிப்படை என்பதுவே தனது அரசாங்கத்தின் நல்லிணக்க கொள்கை  என ஜனாதிபதி கூறி முடித்தார்.

மலையக தமிழர்கள், முஸ்லிம் ஆகிய இலங்கையின் சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் விசேட பிரச்சினைகள் பற்றிய தீர்வுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அடுத்த மூன்றாண்டுக்கான கொள்கை உரையில் எதுவும் கூறப்படவில்லை.

அதிகார பரவலாக்கல், 13ம் திருத்தம் ஆகிய விவகாரங்கள் பற்றி ஜனாதிபதி ஒரு வார்த்தையும் கூறாமல் இந்நாட்டு தமிழ் பேசும் மக்களை ஏமாற்றி உள்ளார் என நான் நினைக்கிறேன்.  வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தனது அரசினால் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு வடகிழக்கு பிரதேசங்களில் இருந்து  மக்களால் தெரிவு செய்யப்பட்ட  எம்பீக்கள் “ஒத்துழைப்பு” வழங்க வேண்டும் என்பதுவே அவரது அதிகபட்ச கோரிக்கையாக இருந்தது.

ஜனாதிபதியின் உரை நிறைவு பெற்ற பின், முன்னாள் எதிர்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் எம்பி மிகவும் சலிப்புடனும், ஏமாற்றத்துடனும் இருந்ததை, அவருக்கு சமீபத்தில் அமர்ந்திருந்த நான் அவருடன் சற்று உரையாடிய போது அவதானித்தேன். அது எனக்கு மிகுந்த மனக்கவலையை தந்தது.

“ஜனாதிபதி இனப்பிரச்சினையை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்க திட்டமிடும் டிஜிடல் தொழில்நுட்ப கேபிள்களை பற்றி அதிகம் பேசினார். உங்கள் இனப்பிரச்சினையையும் அங்கே கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ” என அவ்வேளை என்னுடன் உரையாடிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேலியாக தெரிவித்தார்.

அதேவேளை தான் நியமித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத குழுவினால் எழுதப்படும் புதிய அரசியலமைப்பிற்கான வரைபை தனது அமைச்சரவையில் சமர்பித்து, அதன்பின் பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச கூறினார். இந்த புதிய  அரசியலமைப்பு வரைபில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பது கானல் நீராகவே இருக்கும் என்பதை ஜனாதிபதியின் உரை கோடிட்டு காட்டுவதாகவே நான் நினைக்கிறன். ” என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கோட்டாவின் உரையில் ஏமாற்றம் : தேநீர் விருந்துபசார நிகழ்வினை புறக்கணித்த கூட்டமைப்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் நேற்று வழங்கப்பட்ட சம்பிரதாயபூர்வமான தேநீர் விருந்துபசார நிகழ்வினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.

நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சனை, தீர்வு விடயம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அத்தோடு தற்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து எவ்வித அறிவிப்பையும் ஜனாதிபதி வழங்கவில்லை.

இந்நிலையில் குறித்த தேநீர் விருந்துபசார நிகழ்வினை கூட்டமைப்பு புறக்கணித்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

Posted in Uncategorized

வெள்ளியன்றும் விவாதம் இடம்பெறும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனம் தொடர்பிலான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தினை வெள்ளிக்கிழமையும் நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தலைமையில் இன்று (18) முற்பகல் ஆரம்பமாகியது.

ஜனாதிபதியால் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து  2022ஆம் ஆண்டின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூட்டம் பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற குழு அறை 01இல் இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனம் தொடர்பிலான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தினை ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய இரு தினங்கள் நடத்துவதற்குசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலர் விவாதத்தின் போது கருத்து தெரிவிக்க தயாராகவிருப்பதால் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமையையும் விவாதத்திற்காக ஒதுக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்கள் இதன்போதுபிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய சபாநாயகருக்கு எடுத்துரைத்து 21ஆம் திகதி வெள்ளிக்கிழமையையும் விவாதத்திற்காக ஒதுக்கிக் கொள்ளுமாறு பிரதமர் ஆலோசனை வழங்கினார்.

‘எண்ணெய் தாங்கிகள் மீண்டும் நாட்டிற்கு’ எனும் தொனிப்பொருளில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான ஒப்பந்தம் குறித்து வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெளிவுபடுத்தினார்.

குறித்த கூட்டத்தில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பசில் ராஜபக்ஷ, ஜீ.எல்.பீரிஸ், நிமல் சிறிபால த சில்வா, விமல் வீரவங்ச, மஹிந்த அமரவீர உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் ஷானிகா கொபல்லவ, பிரதமரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

மின் விநியோகம் துண்டிக்கப்படலாம் – அமைச்சர் காமினி லொகுகே

மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மின்சாரத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனல் மின்நிலையத்தில் 300 மெகாவாட் மின் உற்பத்தி இழக்கப்பட்டுள்ளதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனல் மின்நிலையததில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறினை எதிர்வரும் 24 ஆம் திகதி சீர் செய்ய முடியும் என மின்சாரசபை பொறியியலாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் சபுகஸ்கந்த,களனிதிஸ்ஸ மற்றும் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் உள்ள மிதக்கும் மின் நிலையத்திற்கு டீசல் மற்றும் உராய்வு எண்ணெயை விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மின்நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 1500 மெற்றிக் தொன் உராய்வு எரிபொருள் அவசியமாகவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கிய 3000 ஆயிரம் மெற்றிக்தொன் உராய்வு எண்ணெய் இன்று மாலையுடன் நிறைடைந்தது.

இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து தற்காலிகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிப்பெறவில்லை.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பலை விடுவிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு மத்திய வங்கியிடமும், நிதியமைச்சிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்கவே எதிர்பார்த்துள்ளோம். மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படும்.

மின்விநியோகத்தை துண்டிப்பது தொடர்பில் மின்பாவனையாளர்களுக்கு முன்கூட்டியதாக அறிவிக்கும் வகையில் மின்துண்டிப்பு செய்யப்படும் நேரம் குறித்து அட்டவணை தயாரிக்குமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Posted in Uncategorized

கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் தளமாக மாறிவிடுமா?

கொழும்பு நகரின் கடற் பகுதியில் பளபளப்பாக எழும்பியிருக்கும் துறைமுக நகரை “பொருளாதார மாற்றத்துக்கான காரணி” என்று அதிகாரிகள் வர்ணிக்கிறார்கள்.

பரந்த மணல் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் சர்வதேச நிதி மையம், குடியிருப்பு பகுதிகள் மற்றும் ஒரு மெரினா ஆகியவை உருவாகப் போகின்றன. அதன் உருவாக்கத்துக்கு பிறகு இது ஒரு துபாய், மொனாக்கோ அல்லது ஹாங்காங் உடன் ஒப்பிடும் அளவிற்கு இருக்கும்.

“இந்தப் பகுதியால் இலங்கை வரைபடம் மீண்டும் வரையப்படலாம். உலகத்தரம் வாய்ந்த தகுதியை அடையும், உதாரணமாக துபாய் அல்லது சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் ஒப்பிடப்படலாம்” என்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர் சாலிய விக்ரமசூரிய பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால், உண்மையில் இலங்கைக்கு இது எந்தளவுக்கு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

665 ஏக்கர் (2.6 சதுர கிமீ) புதிய நிலப்பரப்பு உருவாக்குவதற்கு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது சீன துறைமுக பொறியியல் நிறுவனம் ( China Harbour Engineering Company – CHEC). இதற்காக இலங்கை அந்த நிறுவனத்திற்கு 43 சதவீத பகுதியை 99 ஆண்டிற்கு குத்தகைக்கு வழங்க உள்ளது.

பல ஆண்டுகளாக இந்த கட்டமைப்பு பணிகள் இங்கு நடந்து வருகிறது. தற்போது இது வேகமடைந்து புதிய நகர வடிவம் பெற்று வருகிறது.

சீன பொறியாளர்களால் கண்காணிக்கப்படும் இந்த இடத்தில் பெரிய கிரேன்கள் கான்கிரீட் அடுக்குகளை நகர்த்துகின்றன, மறுபக்கம் மண் அள்ளுபவர்கள் லாரிகளில் டன் கணக்கில் மணலை நிரப்பி வருகின்றனர். புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நிலப்பரப்பு வழியாக செல்லும் ஒரு நதி உள்ளது. அது தற்போது முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு சிறு படகுகள் அதில் சென்று வருகின்றன.

தெற்காசியாவிலேயே முதல் முறையாக இம்மாதிரியான திட்டம் இங்குதான் நடைபெறுகிறது. இந்த திட்டம் முழுமையாக நிறைவு பெற சுமார் 25 ஆண்டுகள் ஆகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் புதிய பகுதியும் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பகுதிகளும் பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்படும் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இங்கு வரக்கூடிய நிறுவனங்களின் வருவாயில் ஒரு பகுதியையும் இலங்கை அரசாங்கம் கட்டணமாக கேட்கலாம் என்றும் சொல்லப்படுகிறது .

புதிதாக உருவாக உள்ள நகரத்தில் சுமார் 80,000 பேர் வசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அங்கு முதலீடு செய்து வணிகம் செய்பவர்களுக்கு வரி விலக்கும் அளிக்கப்படும். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சம்பளம் உட்பட அனைத்து பரிவர்த்தனைகளும் அமெரிக்க டாலர்களில் இருக்குமாம்.

ஆசியா மற்றும் ஐரோப்பா இடையிலான வர்த்தக மேம்பாட்டிற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கால் சாலை, ரயில் மற்றும் கடல் போக்குவரத்து திட்டம் தொடங்கிய அதே காலக்கட்டத்தில் 2014-ல் அவர் கொழும்பு வந்திருந்த போது இலங்கையில் இந்த துறைமுக நகரத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கத்திய நாடுகள் கவலை தெரிவித்திருந்த அதேவேளையில், 2009-இல் போர் முடிவுக்கு வந்த பிறகு மீண்டும் இலங்கையை சீரமைக்க சீனாவிடம் அன்றைக்கு இலங்கை உதவிகேட்டிருந்தது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையின் போது, ​​மகிந்த ராஜபக்ச இலங்கையின் அதிபராக இருந்தார், ஆனால் அவர் அந்த ஆண்டின் பிற்பகுதியில் தேர்தலில் தோல்வியடைந்தார். சீனாவிடம் இருந்து அதிக அளவில் இலங்கை வாங்கிய கடனாக தெற்கில் அம்பாந்தோட்டை துறைமுகம் கடன் பார்க்கப்பட்டது. இது அன்றைக்கு தேர்தலில் வாக்களிக்க இருந்த இலங்கை வாக்காளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜபக்ச இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார், அவரது இளைய சகோதரர் கோட்டாபய அதிபராக உள்ளார்.

ஆனால் அம்பாந்தோட்டை துறைமுகம் தற்போது இலங்கையின் கையில் இல்லை. கடந்த 2017 ஆம் ஆண்டு அப்போது இருந்த இலங்கை அரசாங்கத்தின் கீழ், சீனாவிடம் இருந்து வாங்கிய கடனுக்கு துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைத்து விட்டது.

இலங்கையில் புதிதாக உருவாகவுள்ள துறைமுக நகரம் ஒரு தரப்பினரை மகிழ்ச்சி அடைய செய்தாலும் மற்றொரு தரப்பினர் அதற்கு கவலை தெரிவித்துள்ளதற்கான காரணம், கடந்த காலத்தில் சீனாவுக்கு செலுத்தவேண்டிய கடனுக்காக ஒரு துறைமுகத்தை கொடுத்துவிட்டோம், தற்போது அது போல் சீனாவின் ஆளுகைக்குள் தான் இந்தத் திட்டம் நடைபெறுகிறது என்ற அச்சம் தான்.

இத்திட்டத்தின் மீது வேறு சில கவலைகளும் உள்ளன எனவும், அதில் இந்தத் திட்டத்தால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பும் அடங்கும் என்றும் கூறுகிறார்கள். மேலும் இந்தத் திட்டத்தினால் இலங்கைக்கு பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அப்படியான முன்னேற்றம் இருக்காது என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

இந்தத் திட்டம் சம்பந்தமாக பொருளாதார நிபுணர் தேஷால் டி மெல் கூறுகையில், “இந்த துறைமுக நகரத்துக்கு என பிரத்தியேகமாக ஒரு சட்டத்தை நிறைவேற்றி உள்ளனர். அந்த சட்டத்தின்படி இங்கு முதலீடு செய்பவர்களுக்கு 40 வருடம் வரை வரிச் சலுகை அளிக்கப்படும் என்று சொல்கின்றனர். இதனால் இலங்கை நாட்டிற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும்” என்கிறார்.

இது சம்பந்தமாக அமெரிக்கா கூறுகையில், குறைந்த அளவிலான வரிகளை அறிவிப்பதன் மூலம் கருப்புப் பணத்தின் புழக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்துள்ளது.

இலங்கையின் நீதி அமைச்சர் மொஹம்மத் அலி சப்ரி இதை முழுமையாக மறுக்கிறார்.

“சாதாரண குற்றவியல் சட்டம் இங்கு பொருந்தும் என்பதால் அது நடக்க வாய்ப்பில்லை. எங்களிடம் பணமோசடிச் சட்டம் உள்ளது, எங்களிடம் எங்கள் நிதிப் புலனாய்வுப் பிரிவு உள்ளது. எனவே, யாரும் கருப்பு பணம் போன்ற வேலைகளை செய்தால் தப்பமுடியாது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

உலக அளவில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரக் கூடிய சூழலில் இலங்கையில் சீனா அமைக்கும் துறைமுக நகரத்தால் முதலீட்டாளர்களை இழக்க நேரிடும் என்று இந்தியா கவலைப்படுகிறது.

இது சம்பந்தமாக இந்தியா மட்டுமல்ல இலங்கையும் கொஞ்சம் கவலைப்படவேண்டும். காரணம், 2020 ஆம் ஆண்டில், சீனா மற்றும் லாவோஸ் ரயில்வே பாதை இணைக்கும் ஒரு திட்டத்தை தொடங்கினர். இந்தத் திட்டத்தில் லாவோஸ் நாடு பெரிய கடன் சுமைக்கு ஆளானது. அப்போது லாவோஸின் எரிசக்தி அமைப்பின் ஒரு பகுதியை சீனாவிற்கு விற்றதன் மூலம் மட்டுமே லாவோஸ் கடன் சுமையில் இருந்து தப்பிக்க முடிந்தது.

“இலங்கையில் தமிழ், சிங்களத்துக்கு குறையும் மவுசு – சீன மொழி ஆதிக்கம் ஓங்குகிறதா?”

கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டாபய வைத்த கோரிக்கை

இந்தியாவுடன் நெருங்கும் இலங்கை: அவசரப் பயணம் மேற்கொள்ளும் சீன வெளியுறவு அமைச்சர்

லாவோஸுக்கு மட்டும் அல்ல இலங்கைக்கும் இதற்கு முன்னால் இத்தகைய அனுபவம் உண்டு. வருங்காலத்தில் இந்த புதிய துறைமுக நகரத்தையும் சீனாவிடம் விற்க நேரிடலாம்.

இலங்கை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன பிபிசியிடம் கூறுகையில் “இந்த அரசாங்கம் சீனர்களுக்கு இணங்கிய நேரத்தில், துறைமுக நகரத்தில் உள்ள அனைத்தையும் சீனா கையகப்படுத்தியுள்ளது,” என்று தெரிவித்தார்.

சீன கல்வியாளர் ஜௌ போ இதை முற்றிலும் மறுத்து, “இரு நாடுகளும் பயனடைவதே இந்த திட்டத்தின் நோக்கம்” என்று கூறினார்.

“சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி ஒரு தொண்டு அல்ல. நாங்கள் பரஸ்பரமாகப் பயனடைய விரும்புகிறோம். அதாவது எங்களது முதலீடுகள் பொருளாதார ரீதியில் லாபம் ஈட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மியின் மூத்த கர்னல் சௌ பிபிசியிடம் தெரிவித்தார்.

இலங்கை அதிகாரிகளும் இதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள். “துறைமுக நகரத்தின் முழுப் பகுதியும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ரோந்து, காவல்துறை, குடிவரவு மற்றும் பிற தேசிய பாதுகாப்பு கடமைகள் இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது” என்று துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உறுப்பினர் சாலிய விக்ரமசூரிய தெரிவித்தார்.

ஆனால், இலங்கை தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றால் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் முழுமையாக இழந்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சியடைகிறது.

தற்போது இலங்கை நாட்டின் வெளிநாட்டுக் கடன்கள் 45 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. அதில் சீனாவுக்கு மட்டும் சுமார் 8 பில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டியுள்ளது.

இந்த சூழலில் சீனாவிடம் மொத்தக் கடனில் சிலவற்றை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுள்ளது இலங்கை. ஆனால் அதற்கான பதில் இன்னும் இலங்கைக்கு எதுவும் கிடைக்கவில்லை. மறுபுறத்தில் கொழும்புவால் தனியாக பன்னாட்டு முதலாளிகளை ஈர்க்க முடியாத சூழல் உள்ளது.

இதனால் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக மீள்வதற்கு சீனாவை தவிர வேறு எந்த வழியும் இல்லை.

இந்த புதிய துறைமுக நகரம் வெற்றிகரமாக அமைந்தாலும் தெற்காசியாவில் தனது ஆதிக்கத்தைத் தக்க வைக்க இந்த நகரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் என்றே பலரும் நம்புகின்றனர்.

BBC

500 மில். டொலர் கடன் வழங்கியது இந்தியா

பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் டொலர் கடனை இந்தியா வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது.

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கருக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (15) இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையிலேயே மேற்குறிப்பிட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த மெய்நிகர் கலந்துரையாடலில், அத்தியாவசிய பொருட்களுக்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதி மற்றும் எரிபொருள் வாங்குவதற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கடிதம் வழங்குவது குறித்தும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.