வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை இழந்தது கூட்டமைப்பு

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியதிகாரத்தை இழந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரு தடவைகள் தோல்வியடைந்தது. இதனையடுத்து, புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான தேர்தல் வவுனியா வடக்கு பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்றது.

தமிழ் கூட்டமைப்பு சார்பில் சோ.சத்தியேந்திரனும் சுதந்திரக் கட்சியின் த.பார்தீபனும் தலைவர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

இன்றைய தினம் வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில், இருவரும் தலா 12 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். இதனையடுத்து திருவுளச்சீட்டு மூலம் தவிசாளர் தெரிவு செய்யப்பட்டார்.

சபையின் 26 உறுப்பினர்களில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் பிரசன்னமாகவில்லை.

Posted in Uncategorized

13 ஐ நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணத்தில் தமிழ் பேசும் தரப்பு இணக்க நிலை ஏற்பட்டுள்ளது

தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்த கோரிக்கையை விடுக்கும் விதமாக வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் கட்சிகள் இன்று கொழும்பில் சந்தித்து கடிதம் ஒன்றை இந்திய பிரதமருக்கு அனுப்புவது தொடர்பான முன் முயற்சியில் தமிழ் பேசும் தரப்புக்களின் தலைவர்களிடையே ஓர் இணக்க நிலை ஏற்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆவண வடிவம் தொடர்பில் பூர்வாங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

கொழும்பு வெள்ளவத்தை குலோபல் டவர் ஹோட்டல் அரங்கத்தில் இன்று நடைபெற்ற தமிழ்ப் பேசும் தரப்புக்களின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த பூர்வாங்க இணக்கம் ஏற்பட்டது.

குறிப்பாக தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் வரையில் தற்போதைய ஒற்றையாட்சிக்குள் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க இந்தியாவின் தலையீடுகளை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது தமிழ் பேசும் மக்களின் அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியிருந்ததுடன், 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணமொன்றை சகல தமிழர் தரப்பும் கைச்சாத்திட்டு இந்தியாவிடம் ஒப்படைக்க தீர்மானத்திருப்பதாகவும் கூறியிருந்தனர்.

அழைக்கப்பட்ட எல்லா தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் இன்றைய கூட்டத்தில் பங்குபற்றியமை சிறப்பம்சம்.

புளாட் சார்பில் சித்தார்த்தன் தமக்குப் பதிலாக ஆர்.ராகவனை அனுப்பியிருந்தார். இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தமது சார்பில் அமீர் அலியை அனுப்பியிருந்தார்,சி.வி விக்னேஸ்வரன்,பழனி திகாம்பரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பரும் பங்குபற்றினார்.

கூட்டத்துக்கு தமிழ் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமை வகித்தார்.

தமிழரசு தரப்பினால் ஒரு நகல் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மற்றைய நகலின் சில விடயங்களை இந்த நகலில் சேர்த்துக் கொள்வதற்கான இணக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் வயதில் மூத்த தலைவர்கள், கூட்டத்திலிருந்து வெளியேற எஞ்சியோர் ஒன்றிணைந்து தொடர் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டனர்.

அதனடிப்படையில் இரண்டு ஆவணங்களையும் ஒன்றிணைத்து புதிய நகல் வடிவத்தை தயாரிப்பதில் நேற்று மாலை முழுவதும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தனர்.

மனோ கணேசன், நிஸாம் காரியப்பர், செல்வம் அடைக்கலநாதன், என்.ஸ்ரீகாந்தா, குருசாமி சுரேந்திரன்,சுரேஸ் பிரேமசந்திரன்,மாவை,ஜனா,சுமந்திரன், ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணி அளவில் நகல் வடிவதற்கான பூர்வாங்க இணக்கம் எட்டப்பட்டது. தமிழ் மக்களின் எரியும் பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எட்டு விடயங்களையும், அத்தோடு இன்றைய கூட்டத்தில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களையும் ஒன்றிணைத்து, புதிய நகல் ஆவண வடிவம் தயாரிக்கப்பட்டது.

ரெலோ ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் அதனை அவர் எல்லா கட்சிகளுக்கும் அனுப்பி வைப்பார். அவையும் அவற்றை ஆராய்ந்து சம்மதித்த பின்னர், அது பகிரங்கப்படுத்தப் படுவதோடு, இந்த சந்திப்பில் இந்தியாவின் உள்ளீட்டை கோரிய ஆவணத்தை இறுதிப்படுத்தி அதில் சகல தமிழ் பேசும் கட்சிகளின் கையொப்பத்தை பெற்றுக்கொண்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கவுள்ளதாக இந்த செயற்பாடுகளின் ஏற்பாட்டாளரான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செம்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்தியாவை நாடும் தமிழ் கட்சிகளின் முடிவு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு !

இலங்கையின் மீது தேவையற்ற வகையில் ஆதிக்கம் செலுத்த எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான எழுத்து மூலமான வரைவினை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில் இது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ஒவ்வொரு சமூகத்திற்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க உரிமை உள்ளது என்றும் போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமை, அதை அரசாங்கம் மதிக்கிறது என கூறினார்.

அத்தோடு இலங்கை ஒரு சர்வாதிகார நாடு அல்ல என தெரிவித்த அவர் இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட நாடு என்பதனால் வேறு நாடுகளினால் இங்கு ஆதிக்கம் செலுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் என்பதோடு பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையில் ஆரோக்கியமான உறவு காணப்படுவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டம் கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது

வரலாற்றில் முதல் தடவையாக மிக முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டம் சம்பந்தன் தலைமையில் இன்று செவ்வாய் கிழமை(21/12/2021) காலை 11.00 மணிக்கு குளோபல் டவர் ஹோட்டலில் ரெலோவின் முன்னெடுப்பில் சிறப்புடன் ஆரம்பமாகியுள்ளது.

நவம்பர் 2 திண்ணையில் நடந்த சந்திப்பு மற்றும் கொழும்பில் குளோபல் டவர் ஹோட்டலில் நடந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவும் இக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

அரசியல் அமைப்பில் உள்ள 13 வது திருத்தத்தை முழுதாக நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்கள் விரைவில் நடாத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்த இந்திய அரசிடம் கோரிக்கை சமர்ப்பிக்கும் வரைபை இறுதி செய்யும் முயற்சியில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

Posted in Uncategorized

நிபந்தனையின் அடிப்படையிலேயே 6.7 மில்லியன் டொலரை சீனாவுக்கு வழங்குகிறோம் – அரசாங்கம்

நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு இலங்கைக்கு மீண்டும் உரிய தரத்திலான உரத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே குறித்த தொகையை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

நாட்டில் பெரும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் யாருடைய தவறின் காரணமாக சீன உரக்கப்பலுக்கு 6.7 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டி ஏற்பட்டது? என்று நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமையவே சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அமைய சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட தெளிவுபடுத்தல் மற்றும் வழிகாட்டலுக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் இரு தரப்பினரதும் நிலைப்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இலங்கையின் தரத்திற்கு ஏற்ப மீண்டும் உரத்தை வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே 6.7 மில்லியன் டொலரை செலுத்த தீர்மானிக்கப்பட்டது.

குறித்த உர நிறுவனத்தினால் ஏற்கனவே 5 மில்லியன் டொலர் பிணைமுறி வைப்பிடப்பட்டுள்ளது. அந்த பிணைமுறி விடுவிக்கப்படவில்லை.

இலங்கைக்கு மீண்டும் உரிய தரத்துடனான உரம் வழங்கப்பட்ட பின்னரே அந்த தொகை விடுவிக்கப்படும். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கமையவே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனவே எதிர்காலத்தில் உரிய தரத்துடனான உரம் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். அதுவரையில் உர நிறுவனத்தினால் வைப்பிடப்பட்ட 5 மில்லியன் டொலர் வைப்பிலிருக்கும் என்று தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் 2வது முறையும் தோல்வி

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

காரைநகர் பிரதேச சபை அமர்வு இன்று (21) தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் இடம்பெற்றது.

11 உறுப்பினர்களைக்கொண்ட காரைநகர் பிரதேச சபையில், குறித்த வரவு செலவுத் திட்டத்திற்கு சுயேட்சை குழுவின் 3 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 5 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள அதேவேளை,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் என 6 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

அதனடிப்படையில், வரவு செலவுத் திட்டம் 1 மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தடவைகள் காரைநகர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதால், தவிசாளரும் தனது பதவியை இழந்துள்ளார்.

இன்றிலிருந்து 14 நாட்களுக்குள் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த காரைநகர் பிரதேச சபையின் ஆட்சியை அப்போதைய தவிசாளர் உயிரிழந்ததால், கடந்த மாதம் 10 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவியுடன் சுயேட்சைக் குழு வசமானது.

பின்னர் புதிய தவிசாளரால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த 8 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தோற்கடிக்கப்பட்டிருந்தது.

வரவு செலவுத் திட்டம் தேற்கடிக்கப்பட்டமையினால், திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக இலங்கையை மாற்றுவதற்கு உதவி

இலங்கையை பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்ப கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை இலங்கையில் நிறுவுவதன் மூலம் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக அன்ட்ரூஸ் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தொழில் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 12 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஆகும்.

இலங்கையில் தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய உற்பத்திகளை இலங்கைக்கு கொண்டுவந்து பெறுமதி சேர்த்து, மீள் ஏற்றுமதி செய்வதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக கெரன் அன்ட்ரூஸ் தெரிவித்தார்.

பசுமை விவசாயம் தொடர்பான இலங்கையின் கொள்கையைப் பாராட்டிய அமைச்சர், அவுஸ்திரேலியாவும் நிலைபேறான விவசாயத்தில் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 2022ஆம் ஆண்டில், 75 வருடங்கள் நிறைவடைகின்றன. அந்த நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த நடவடிக்கைகளை அன்ட்ரூஸ் பாராட்டினார்.

11.7 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் உதவியை இலங்கையில் கொவிட் தடுப்புச் செயல்முறைக்கு வழங்கியதை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.

ஜனாதிபதி பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது, மனித கடத்தலை நிறுத்துவதற்கு அப்போதைய அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுடன் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமராக ஸ்கொட் மொரிசன் செயற்படுவதையிட்டு தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த ஜனாதிபதி, போதைப்பொருள் வியாபாரம், கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான வலுவான பொறிமுறையை இரு நாடுகளும் மேலும் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான பணிகளுக்கு தனது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும், பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் ஆண்ட்ரூஸ் கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் புரிந்துணர்வுடன் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழ்க்கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்துக்கு ரிஷாத்துக்கும் அழைப்பு

தமிழ்பேசும் தரப்புகளின் ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டிலான பொது ஆவணம் ஒன்றைத் தயாரித்து இந்தியப் பிரதமருக்கு அனுப்பும் நோக்கில் ரெலோ அமைப்பால் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்தப்படவிருக்கும் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்.பிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பிலும், அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டங்களில் முஸ்லிம்கள் தரப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்.

இப்போது ஆவணத்தை இறுதி செய்து ஒப்பமிடவிருக்கும் நிலையில் கடைசிச் சந்தர்ப்பத்தில் ரிஷாத்தும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக ஜுலி சங் : அங்கீகரித்தது அமெரிக்க செனெட் சபை

இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக ஜுலி சங்கை நியமிப்பதற்கு ஜனாதிபதி ஜோபைடனால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை அமெரிக்க செனெட் சபை அங்கீகரித்துள்ளது.

ஜோ பைடனால் பரிந்துரை செய்யப்பட்ட இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

ஜுலி சங் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தில் மேற்கு ஹெமிஸ்பியர் விவகாரப் பணியகத்தின் பதில் உதவிச்செயலாளராகப் பணியாற்றியிருப்பதுடன் இராஜாங்கத்திணைக்களத்தில் ஜப்பானிய விவகார அலுவலகத்தின் பணிப்பாளராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் கம்போடியாவின் ஃபோம் பென்னில் அமைந்துள்ள அமெரிக்கத்தூதரக விவகாரங்களுக்கான பிரதி தலைவராகவும் தாய்லாந்தின் பாங்கொக்கில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் ஜுலி சங் செயற்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள அமெரிக்கத்தூதரகங்களிலும் சீனாவிலுள்ள அமெரிக்க கொன்சியூலர் அலுவலகத்திலும் அவர் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

ஜுலி சாங் கலிபோர்னியா – சான்டியேகோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டத்தையும் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான கொலம்பிய பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை மாயம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை குமார கோவிலில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறை குமார கோவில் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காலப்பகுதியில் கோயில் வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து , குமார கோவில் புனரமைக்கப்பட்டு , ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த 09ஆம் திகதி இரவு ஆலயத்தில் இருந்த விநாயகர் சிலை இருப்பிடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.