மாகாண பயணத் தடை – தனியார் பஸ்கள் சுற்றிவளைப்பு

பயணத் தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் 2 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரியநீலாவணை இராணுவ காவலரனில் வைத்து புதன்கிழமை (6) இரவு 10 மணி அளவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன்போது குறித்த இரு வேறு பஸ் வண்டிகளிலும் சுமார் 100 க்கும் அதிகமான பயணிகள் இருந்ததுடன் அவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சாந்த விஜயகோன் சுகாதார தரப்பு அதிகாரிகளினால் பயணிகள் அனைவரும் அறிவுறுத்தபட்டு மீண்டும் குறித்த பஸ்களில் அழைத்து செல்லப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் சிறுது நேரம் தடுத்து வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பஸ் வண்டிகளின் சாரதி நடத்துனர்களிடம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மாகாணத்தில் உள்வரும், வெளியேறும் பல நுழை வாயில்களில் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவதாகவும் அவ்வாறு கட்டுப் பாடுகளை மீறி பயணம் செய்பவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி அம்பாறை மாவட்டத்தில் இருந்து இரவு வேளைகளில் குளிருட்டப்பட்ட பல தனியார் பஸ்கள் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

Posted in Uncategorized

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் அரச சேவையின் ஏனைய துறைகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியது அனைத்து அரசாங்கங்களுக்கும் உரிய பொறுப்பாகும் என கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நேற்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் இந்த பிரச்சினைக்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பல கட்டங்களில் தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் அல்ல. 1994 ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவை யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்டது அதன் பின்னர் இடம்பெற்ற அரச சேவை சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக பெரேரா சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவையின் சம்பளம் தொடர்பான சிக்கலை புறந்தள்ளி அரச சேவையின் முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவைக்கும் ஏனைய அரச சேவைகளுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பள முரண்பாடு தொடர்ந்து 24 வருடங்களாக நிலவியதாக ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம் – ஜனக பண்டார தென்னகோன்

மாகாணசபை தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை, வாய்மூல  விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹான பண்டார இது குறித்து கேள்வி எழுப்பினார்.

தேர்தல் நடத்தப்படும் என்றால் புதிய முறையில் நடக்குமா அல்லது பழைய முறைமையில் நடத்தப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என கூறினார்.

கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (பதன்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டமூலமே இவ்வாறு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுயாதீன கட்டுப்பாட்டு அதிகாரங்களுடன் இலங்கை கனியவள அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிப்பதே இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களை மீளவும் நாட்டுக்கு அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி!

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன்வைத்த யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின், குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டுமென்பது, இரு தரப்பினதும் கருத்தாக அமைந்திருந்தது.

யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி, காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக எடுத்துரைத்தார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிடம் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகதத் தனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சீனாவுடனான தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஜனாதிபதி, அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

Pandora Papers – விசாரணைகள் ஆரம்பம்!

விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அந்த பரிவர்த்தனைகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதை அடுத்து இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று பண்டோரா வௌிப்படுத்தல் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையம் திறப்பு

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் கருத்திட்டத்திலான தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வறுமைக் குறைப்பிற்கான ஜப்பான் நாட்டு நிதியுதவியில் மின்சார விநியோகத்தை அதிகரிக்கும் உதவித் திட்டத்தின் கீழ் நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கு நன்னீர் குடிநீரை வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று யாழ் நயினாதீவில் உள்ள 07 வட்டராத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரைநீக்கத்தினை செய்து வைத்து திறந்துவைத்தார்.

இவ் நிகழ்வில் பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவர் மாவட்ட பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சரத்பத்துல,மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,உள்ளிட்ட அதிகாரிகள் கொண்டகுழுவினர்கள் கலந்துகொண்டனர்..

இவ் குடிநீர்த் திட்டத்தில் 150 கன மீற்றர் குடிநீராக்கும் நிலையமாக காணப்படுகின்றது.. இதற்காக 187 மில்லியன் ரூபா செலவில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக 5,000 குடும்பங்கள் நன்மைபெறவுள்ளனர். இந்த குடிநீரை 120 ரூபா செலவில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் அவற்றினை ஒரு யூனிட் 10 ரூபாவாக அறவிட்டு நன்னீரை பெற்றுக் கொள்ள முடியும். என நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது..

Posted in Uncategorized

ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவின் இலங்கைக்கான விஜயம் பூர்த்தி

(GSP+) தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய, 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிடடுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு…

கொழும்பு , 06 ஒக்டோபர் 2021- Generalised System of Preferences Plus (GSP+) தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய, 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு 2021 செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சூழல் மற்றும் காலநிலை மற்றும் நல்லாட்சிக் கொள்கைகள் போன்றன இவற்றில் அடங்கியுள்ளன. இலங்கையில் இந்தக் குழு தங்கியிருந்த பத்து நாட்கள் வரையான காலப்பகுதியில், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச , வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச போன்ற அரசாங்க பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

எதிர்கட்சி , சிவில் சமூக அமைப்புகளான மனித உரிமை காப்புச் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுடனும் இந்த அதிகாரிகள் சந்திப்புகளை முன்னெடுத்தனர். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகளின் பிரதான அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

மனித உரிமைகள் மற்றும் சட்ட விதிமுறை, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மற்றும் தொழிலாளர் உறவுகள் போன்றவற்றில் தாக்கம் செலுத்தியிருந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருந்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) தொடர்பிலும் விஜயம் செய்திருந்த அதிகாரிகள் கலந்துரையாடியிருந்ததுடன், 2017 ஆம் ஆண்டு GSP+ திட்டத்தில் இலங்கையை மீள உள்வாங்கிய போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது என்பது பிரதான உறுதியளிப்பாக அமைந்திருந்தது.

தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு கேட்டறிந்ததுடன், அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு புதிய சட்ட வரைபு தயாராகின்றமை தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தது.

இலங்கையிலுள்ள சகல சமூகங்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது மற்றும் பாகுபாடு இன்றிய செயற்பாடுகள் தொடர்பிலும், இந்த விடயம் தொடர்பில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

போதைப்பொருள் கொள்கை, சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் இந்தச் சந்திப்புகளின் போது மீளாய்வு செய்யப்பட்டிருந்ததுடன், ஊழல் மோசடி பற்றியும் ஆராயப்பட்டிருந்தது. GSP+ பயன்பாடு மற்றும் எதிர்கால வர்த்தக உறவுகள் என்பது இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெபினாரின் தலைப்பாக அமைந்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஷைபி கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச அர்ப்பணிப்புகளின் வினைத்திறன் வாய்ந்த நடைமுறைப்படுத்தல் என்பதனூடாக இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையை முன்னுரிமைச் சலுகை அடிப்படையில் அணுகுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துகின்றது.

சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துடன் நாம் இணைந்து பணியாற்றுவதுடன், தொடர்ச்சியான ஈடுபாட்டை வரவேற்கின்றோம். கண்காணிப்பு மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் ஈடுபாட்டை பேணுவது என்பது, ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் சம்மேளனத்தின் அமைச்சர்களுக்கு அடிக்கடி அறிக்கைகள் சமர்ப்பிப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.

நாம் தொடரந்தும்முன்னிறுத்தும் அரசியல் நடைமுறையை வலியுறுத்தியுள்ள இந்தியா – ரெலோ ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன்

13வது அரசியல் அமைப்பின் முக்கியத்துவம் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடும்இ ஒன்றுபட்ட குரலின் அவசியமும் நேற்று 04-10-2021 இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு ஷிரிங்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடமும் மற்றைய தமிழ் கட்சிகளிடமும் இந்த விடயங்களை உறுதிபடத் தெரிவிப்பு.

13 வது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுதாக நிறைவேற்றுவதை ஆகக் குறைந்த நல்லிணக்க கோரிக்கையாக இலங்கை அரசிடம் தமிழர் தரப்பு முன்வைப்பது ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழியாகும் என நாம் கூறியபோது பல விமர்சனங்களை சில ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் இன்று இந்தியா அதை வலியுறுத்தியுள்ளதன் மூலம் தமிழருக்கான எதிர்கால எலக்குகளை எட்டும் அரசியல் பாதை இது தான் என்பதை உணர்த்தியுள்ளது.
கடந்தகால கோரிக்கைகளின் மீள்பதிவு நினைவு படுத்தலுக்காக இணைக்கப் பட்டுள்ளன.

” மாகாண சபை முறைமையை அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற முழுவீச்சோடு பேரினவாத அரசாங்கங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டமையால் இந்தியாவினுடைய நேரடி அழுத்தத்தின் காரணமாக 13ம் திருத்தம் காப்பாற்றப் பட்டு வருகிறது. இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அல்லது முடியாமல்இ அதே நேரம் தமது முயற்சியும் கைகூடாமல் அரசு கைகட்டி நிற்கிறது. இழுத்தடிப்பு செய்தாவது நடைமுறைப் படுத்தாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பயனற்றுப் போக வைக்கும் செயலாகவே இதை நாம் கருதுகிறோம்.
எமது தேசிய இனத்தின் கோரிக்கைகளுக்கு தீர்வாக இந்த மாகாண சபை முறைமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் போராட்ட அமைப்புகளின் தியாகத்திலும் இந்தியாவினுடைய முயற்சியாலும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினூடாக உள்வாங்கப்பட்ட முக்கிய அரசியல் அம்சமாக இது கருதப்படுகிறது. வடக்கு கிழக்கை எமது பூர்வீக பிரதேசமாகவும் தமிழை தேசிய மொழியாக ஆட்சி மொழியாக அங்கீகரித்த இந்த ஏற்பாட்டை தமிழ் மக்கள் இழந்து விடமுடியாது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையான தற்காலிக தளமாக இது பேணப் படவேண்டும்.

காலாகாலமாக வந்த அரசுகளுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. அதே போல இப்பொழுது அரசு முன்வைத்திருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திற்கான நிபுணர்கள் குழுவிடம் பல்வேறு அரசியல் தீர்வினை தமிழர் தரப்புகள் முன்வைத்திருக்கிறன. ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக எந்த அரசுகளும் நிறைவேற்றாத நிலையில்இ அரசியல் தீர்விற்கான ஆலோசனைகள் நிறைவேற்றப்படுமா அல்லது கருத்தில் கொள்ளப்படுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அப்படியான தீர்வினை எட்டும் வரைக்கும் இ ஆகக் குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும்இ தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும்இ
விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்.”

“ஆகக் குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றுமுழுதாக நிறைவேற்றி மகாணசபைகளுக்கான அதிகாரங்களை நிரந்தரமாக்குவதன் மூலமே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைக்கு வழி கோல முடியும் என்று ரெலோ கருதுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும் அரசியல் யாப்பில் ஏற்படுத்தக்கூடிய சிறிய திருத்தங்களின் மூலமும் இதை அரசு நிறைவேற்ற முடியும். அதற்கான சகல தகுதிகளுடனும் பலத்துடனும் இன்று அரசு இருக்கிறது. சாதாரண பெரும்பான்மையே போதுமானது. இதற்கு இதயசுத்தியுடன் அரசு செயல்பட வேண்டியதே தேவையானது.

இந்த செயல்பாடு நல்லெண்ண நடவடிக்கையாக அரசு மேற்கொள்ளுமானால் பேச்சுவார்த்தைக்கான சாதகமான சூழ்நிலையை அது ஏற்படுத்தும். இது புதிய விடயமே அல்ல. ஏற்கனவே அரசியல் யாப்பில் இருக்கக்கூடிய எமது உரிமையை தான் நிறைவேற்ற நாங்கள் கோருகிறோம். “

இதனடிப்படையில் தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்றும் அவசியம் எனத்தின் நலனுக்கான வரலாற்றுத் தேவையாக உள்ளது என்பதை உணர வேண்டும்

Posted in Uncategorized

நினைவேந்தலுக்கு எதிரான தடைகளுக்கும் எம்.பி கைதுக்கும் வலி. கிழக்கு பிரதேச சபை அமர்வில் கண்டனம்

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் அஞ்சலி செலுத்த முற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தனது கண்டனத் தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது.

வெள்ளிக்கிழமை   வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான   தியாகராஜா நிரோஷ்  தலைமையில் நடைபெற்றது.

அதில் பிரதேச சபை உறுப்பினர் ஞனகுனேஸ்வரி கமலச்செல்வம் தவிசாளரின் அனுமதியுடன் விசேட பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

அப் பிரேரனையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தியாகி திலிபனுக்கு நினைவேந்தலை மேற்கொள்ள முயற்சித்தபோது அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமைகளை மீறி கைது செய்யப்பட்டுள்ளார். அதனை இந்த கௌரவ அவை கண்டிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

அமர்வில்யின் மீது கருத்துரைத்த தவிசாளார், அடிப்படையில் நினைவு கூர்வதற்கான உரிமை எமக்கு உள்ளது. அதனை யாரும் தடுக்கக் கூடாது. மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட விதம் கண்டிக்கத்தக்கது. நினைவேந்தலை மறுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை பயன்படுத்தி பொலிசார் கைது செய்துள்ளனர். இந் நிலையில் நினைவேந்தல்களுக்கு விதிக்கப்படும் தடைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களின் கைதுகள் தொடர்பிலும் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றோம் என்றார்.

அதனை சபையில் இருந்தவர்கள் ஏற்றுக்கொண்டது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறியதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார்.