ஈஸ்டர் தாக்குதல் விசாரணை : மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ல்  நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த தலைமையிலான மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பாயம்  அமைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி தமித் தொடவத்த தலைமையிலான இந்த குழாத்தில் நீதிபதிகள் அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 25 முஸ்லிம் மௌவிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அவசரகால நிலை பிரகடனத்துக்கு த. தே. கூ. கண்டனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அத்தியவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தியதை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“நாட்டிலே உணவு விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துவதற்காக இதனை செய்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பிற்கு ஆபத்து இருந்தால் அதனோடு சம்பந்தப்பட்ட விவாதங்களைத் தான் இந்தச் சட்டத்தின் மூலம் பாவிக்க முடியும்” என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றுத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“இதனாலேயே, பொது சுகாதார அவசர கால நிலைமைக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம். அதற்கான தனி நபர் சட்டமூலத்தையும் பாராளுமன்றில் பிரேரித்துள்ளேன். அதனை சட்டமாக நிறைவேற்றுவதாக அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது. ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்ற தோரணையில் இப்போது அவரசகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

“இதிலுள்ள ஆபத்து என்னவென்றால், முற்று முழுதாக ஜனாதிபதி ஆட்யே நடைபெறும். ஜனாதிபதி தான் விரும்பிய அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும். அத்துடன் சட்டமாக்கும் அதிகாரமும் ஜனாதிபதியின் கைக்குச் சென்றடையும். எனவே இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்” எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனவர்கள் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும்! – அலி சப்ரி

காணாமல் போனவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த அரசாங்கத்தை போலல்லாது காணாமல் போனோர் அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் தொடர்பாக கண்காணித்து, இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதாக அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணாமற்போனவர்கள் எந்த காரணத்திற்காக காணாமல்போனார்கள் என்பதை பற்றி விசாரிக்கத் தேவையில்லையென ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் அனைவரும் இலங்கை பிரஜை என்பதை மனதில் வைத்து, இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுத்திப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டினார்.

யுத்தம் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்தபோதிலும் இன்னும் காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பது, நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணமென அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஒருவர் எத்தகைய சூழலில் காணாமல் போனார் எனபதை பார்க்காது, காணாமற்போனோரை அடையாளம் கண்டு இழப்பீட்டை வழங்குவோமென அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.

Posted in Uncategorized

ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம்

வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் இலங்கையிலும் ஏனைய உலகநாடுகளிலும் தமது அன்பிற்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்குத் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமான நேற்று திங்கட்கிழமை, பாதிக்கப்பட்டவர்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருந்த பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இன்று (நேற்று) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாகும். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியாமலிருக்கும் நிலையில், இது அவர்களை நினைவுகூருவதற்கான தினமாக விளங்குகின்றது.

இலங்கையிலும் ஏனைய உலகநாடுகளிலும் தமது அன்பிற்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியய தருணம் இதுவாகும் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் ii ஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகப் பதுக்குதல், அதிக விலை அறவிடுவதன் மூலம் நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் சந்தை முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக, அரசாங்கத்தின் உத்தரவாத விலைக்கு அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையை அடிப்படையாகக் கொண்டு நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாகக் கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலைக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் மூலம் மொத்தமாகக் கொள்வனவு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கடன், கடன் பெற்றுக்கொண்டவர்களிடம் இருந்து அறவிடப்படக்கூடிய வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

சாதாரண பொதுமக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலையில் பேணுவதற்குத் தேவையான நெல், அரிசி, சீனி உள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களை விநியோகிப்பதை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரியளவில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதற்கமைய மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 204.89 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை நிராகரித்தது ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கம்

சம்பள பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவையின் தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆசிரியர் – அதிபர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்க அமைச்சரவை அங்கீகாரம் அளிப்பதாக இன்று (31) அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்காக 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன், சம்பள அதிகரிப்பை வரவு செலவுத்திட்டத்தினூடாக கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

Posted in Uncategorized

இரண்டு தினங்களுக்கு மாத்திரம் பாராளுமன்றம்!

கொவிட் தொற்று தீவிரமாக பரவும் நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை தொடர்ந்து நடத்துவது ஆபத்தானது என சுகாதார பிரிவினர் பாராளுமன்றபிரதானிகளுக்கு அறிவித்திருக்கின்றனர். அதன் பிரகாரம் பாராளுமன்றத்தை அடுத்த வாரம் இரண்டு தினங்களுக்கு மாத்திரம் வரையறுத்துக்கொள்ளநடவடிக்கை எடுக்கக்கூடும் என பாராளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற அடுத்த நடவடிக்கை தொடர்பில் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 2 ஆம் திகதிவியாழக்கிழமை இடம்பெற இருக்கின்றது. இதன்போது இதுதொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த வாரம் பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும்போது, எதிர்வரும் 6 ஆம் திகதிவரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. நிலையியற்கட்டளையின் பிரகாரம் குறிப்பிட்ட திகதி பாராளுமன்றம் குறுகிய நேரத்துக்கேனும் கூடவேண்டும்.

அதன் பிரகாரம் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடுகிறது. அன்றைய தினத்தை உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கானகேள்விகளுக்கு ஒதுக்குவதற்கு கட்சி தலைவர்கள் ஏற்கனவே தீர்மானித்திருந்தனர்.

அத்துடன் பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற ஊழியர்கள் பலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்குள்ளாகி இருப்பதுடன்பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களும் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். அத்துடன் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகிஇருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்தமொரகொட

இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு, ஒரு வருடத்தின் பின்னரே அவர் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

மிலிந்த மொரகொட அமைச்சரவை அந்தஸ்துள்ள உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிலிந்த மொரகொட மற்றும் அவரது மனைவி ஜெனிபர் மொரகொட ஆகியோரை இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள்வரவேற்றுள்ளனர்.

இலங்கையின் நலன்களை முன்னெடுப்பதற்தும் இலங்கைஇந்திய இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒன்றிணைந்துசெயற்படுவதன் அவசியம் குறித்து பதவியேற்பு நிகழ்வில் மிலிந்த மொரகொட உரையாற்றியுள்ளார்.

ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத்தர தமிழக அரசு  முயற்சிக்க வேண்டும் – கி. வீரமணி

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர தமிழக அரசும் எம்.பி.க்களும் முயற்சி செய்ய வேண்டும் என திராவிடர்கழகத் தலைவர் கி. வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்களின் குடியுரிமை தொடர்பில் வீரமணி அறிக்கை வாயிலாக இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தர, தமிழக அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம்தருவது, மனிதாபிமான அடிப்படையில் மிக மிக முக்கியமானதாகும்.

தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களில் தங்குமிடம் சரியான பராமரிப்பின்றி, அவர்களுக்குப் போதிய வசதி வாய்ப்புகளைஅளிக்காது, முன்னைய ஆட்சியில் அவர்கள் எப்படியோ வாழ்ந்த நிலையை மாற்றுபவர் தமிழக முதல்வர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக சட்ட மன்றத்தில் ஈழத்தமிழர்கள் அநாதைகள் அல்ல என்று உரத்த குரலில் முழங்கியது நம்பிக்கையை ஊட்டிஇருப்பதாக அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் நலன்களைப் பேணிக் காத்திட 317.40 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதற்கு வீரமணி வரவேற்புதெரிவித்திருக்கிறார்.

அகதிகள் முகாம் என்பதை மாற்றி மறுவாழ்வு விடுதிகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதன்மூலம் முதல்வர் இலங்கைத் தமிழர்களுடனான நமது தொப்புள் கொடி உறவு என்றும் அறுக்கப்படக் கூடாத உறவு என்பதைஉறுதிப்படுத்தி உலகத்துக்கு அறிவித்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.