புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்-அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் கருத்து

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக் கூடிய புதிய அரசாங்கம் வழிவகுக்கும் என எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தனது ட்விட்டர் செய்தியில்,ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுடன் கூடிய அனைவரும் அடங்கிய அரசாங்கத்தை அமைக்க இது வழிவகுக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்துள்ளது.

இலங்கைக்கு வேகமான பொருளாதார மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. அத்துடன் தனிநபர் சுதந்திரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பாதுகாத்தலும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய ஜனாதிபதியானார் பழங்குடியின பெண்

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவாகியுள்ளார்.

மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் அவர் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் இந்தியா தனது இரண்டாவது பெண் மற்றும் முதல் பழங்குடி இன பெண் ஜனாதிபதியை தெரிவுசெய்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு ஜூலை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்தநிலையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரௌபதி முர்மு போட்டியிட்டார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார்.

Posted in Uncategorized

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இராஜினாமா

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

இந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனால் 2022 ஜூலை 21ஆம் திகதி முதல் அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாகவும்  ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் தனக்கு அறிவித்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 66 (இ) உறுப்புரையின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில், உறுப்பாண்மையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதனால் 1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) பிரிவின் கீழ் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழில் இரு தமிழ் அமைச்சர்கள்! ரணிலின் அதிரடி முடிவுகள் –

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கீழ் வடக்கில் இம்முறை டக்ளஸ் தேவானந்தா, சி.வி விக்னேஸ்வரன் ஆகிய இரு தமிழர்களும் அமைச்சு பதவிகளை பெற வாய்ப்புள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசை அமைப்பதற்கான முயற்சியில் தற்போது ரணில் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில்,முஸ்லிம் தரப்பினருக்கும்,தமிழர் தரப்பினருக்கும் அமைச்சு பதவி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
அதாவது,மொட்டுக்கட்சியை உடைத்து இரண்டாக பிரித்து ஒரு தரப்பினை புறம்தள்ளி சிரேஸ்ட தலைவர்களை மாத்திரம் ரணிலின் கட்சியின் கீழ் உள்வாங்கப்பட்டால் மொட்டுக்கட்சி இருந்த இடமே அடையாளம் தெரியாமல் காணாமல்போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நிலவும் பட்சத்தில் மீண்டும் சஜித் பிரேமதாசவின் கட்சிக்கும்,கூட்டமைப்பிற்கும் இடையில் யார் எதிர்க்கட்சியினர் என்ற மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஜனாதிபதி செயலம் – பிரித்தானியா வெளியிட்ட தகவல்

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்ட களத்திற்குள் இராணுவத்தினர் நுழைந்து போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்கதல் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுவும் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹோல்டன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் காலிமுகத்திடல் போராட்டப் பகுதியில் இடம்பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைதிப் போராட்டத்திற்கான மக்களின் உரிமை தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் புதியதாக ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதாக அவர் நேற்று அறிவித்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அழைப்பு விடுத்தால் பிரதமர் பதவி தொடர்பில் ஆராய தயார் என்கிறது சஜித் தரப்பு!

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டால், அது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் பட்சத்தில், அரசாங்கத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

பிரதமர் பதவிக்கான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், கட்சியின் செயற்குழு கூடி அது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் முன்னேற்றம் குறித்து சிந்திக்காது, நாடு தொடர்பில் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

“கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா – ஜனாதிபதி ரணில்

பாராளுமன்றம், புது ஆரம்பத்துக்காக 24மணி நேரம் ஒத்தி வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
கட்சி தலைவர்களுடன் நடத்திய விசேட சந்திப்பில் கூறினார்.

பாராளுமன்றம் 24 மணித்தியாலம் ஒத்தி வைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்படுவதன் மூலம் தனது அரசாங்கத்தின் கொள்கை உரையை ஆற்ற ஜனாதிபதி விரும்புவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை போராட்டக்காரர்கள் தமது “கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமது நல்லாட்சி காலகட்ட அசல் 19ம் திருத்த ஆவணம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அரசியலமைப்புக்குள் கொண்டு வர விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தையும், பாராளுமன்றத்தையும், எம்பீக்களை கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் கூறினார்.

போராட்டம் எனும் போர்வையில் ஜனாதிபதி, பிரதமர் செயலகத்தை கைப்பற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

போராட்டம் எனும் போர்வையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நேற்று(20) தெரிவு செய்யப்பட்டார். 

பாராளுமன்றத்தில் நேற்று(20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுர குமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 

ரணில் ஜனாதிபதியாக தெரிவு- தீவிரமடையும் காலிமுகத்திடல் போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,  ரணில் புதிய ஜனாதிபதியாக தெரிவானதை  தொடர்ந்து தமது போராட்டத்தை  தீவரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக உள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.