‘டேர்மினேட்டர்’ கோட்டாபய உங்கள் நகரத்திற்கு வருகிறார்!! ஸ்கொட்லன்ட் பத்திரிகையில் விளம்பரம்!

காலநிலை மாற்றம் தொடர்பாக எதிர்வரும் 31ம் திகதி ஸ்கொட்லன்ட் தலைநகர் கிளாசோவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் (United Nations Climate Change Conference) கலந்துகொள்வதற்காக வருகைதர இருக்கும் சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பாரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று பிரபல ஸ்கொட்லாந்து ஆங்கில பத்திகை ஒன்றில் சிறிலங்கா அரச அதிபரின் வருகை பற்றிய ஒரு விளம்பரச் செய்தி பிரசுரமாகியிருந்தது.

ஸ்காட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான, ‘த ஹெரால்’ (The Herald) என்ற பத்திரிகை, ‘இனப்படுகொலையாளி உங்கள் நகரத்திற்கு வருகிறார்’ என்ற செய்தியை முழுப் பக்கத்தில் பிரசுரித்துள்ளது. ஒரு இனத்தின் விடுதலையை நசுக்கிய இனப் படுகொலையாளி என்றும், ‘டேர்மினேட்டர்’ என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஸ்கொட்லன்ட் வருகைதரும் கோட்டாபாயவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஆர்பாட்டங்கள் உட்பட பல செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்புக்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மன்னார் விஜயம்!

இந்தியாவின் கோடீஸ்வரரும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவர் இங்கு வருகை தந்துள்ளார்.

கெளதம் அதானியும் அவரின் குடும்பத்தின் சிலரும், இரண்டு தனியார் விமானங்களில் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கௌதம் அதானியின் மகன், Adani Ports and Special Economic Zone பிரதம நிறைவேற்றதிகாரி, அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி போர்ப்ஸ் சஞ்சிகை வௌியிட்ட இந்தியாவின் செல்வந்த வர்த்தகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி உள்ளார்.

துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் இன்று மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் D.V.சானக்க, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

West Container International Terminal எனும் புதிய கூட்டு நிறுவனமொன்றினூடாக, இந்த மேற்கு முனையத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கு முன்னர், இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்ததுடன், தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.

இதனிடையே, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (Japan International Cooperation Agency) நிறுவனம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து அபிவிருத்தி செய்யும் கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலின் முதலாவது கான்கிரீட் பாலத்தை பொருத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

புதிய களனி பாலத்திலிருந்து காலி முகத்திடல் வரை தூண்களில் நிர்மாணிக்கப்படும் இந்த வீதியில், முன்னரே பொருத்தப்பட்ட கான்கிரீட் பாலத்தின் 3,279 பகுதிகள் பொருத்தப்படவுள்ளன.

நான்கு வழிச்சாலைகளையும், 5.3 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்டதாக இது அமையவுள்ளது.

துறைமுக நுழைவாயிலின் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தினால் துறைமுக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட கட்டடங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒதுக்கீட்டில் 17 மாடிகளைக் கொண்ட கடல்சார் வசதி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சீனா நிறைவேற்றியுள்ள புதிய எல்லை பாதுகாப்பு சட்டம்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் எல்லை தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், சீனா நேற்று முன்தினம் புதிய எல்லைகளுடன் சம்பந்தப்பட்ட நிலங்கள் தொடர்பான பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது என சீனா அறிவித்துள்ளது.

இந்த புதிய சட்டத்தின் படி பிராந்திய இறையாண்மை மற்றும் தனது நாட்டின் எல்லைகளை குறைத்து மதிப்பிடும் எந்த செயற்பாடாக இருந்தாலும் அதனை சீனா எதிர்க்கும் என கூறப்பட்டுள்ளது.

எல்லையை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவோர் மீது பதில் தாக்குதல் நடத்த இந்த சட்டத்தின் மூலம் சீனப் படையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எல்லைகளில் நடைபெறும் ஆக்கிரமிப்பு, படையெடுப்புகள் போன்ற நடவடிக்கைகளை சீனா உறுதியுடன் எதிர்க்கும். அத்துடன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பான கட்டமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

ஏற்கனவே இந்திய எல்லை கிராமங்களில் சீனா, தனது பொதுவசதிகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி வரும் நிலையில், அதனை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை நீடித்து வருவதுடன் லடாக் பகுதியில் இந்திய – சீன இராணுவத்தினர் இடையில் மோதல் நடைபெற்ற வரும் சூழ்நிலையில் இந்தப் பிரிவு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை தவிர அயல் நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளுக்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும் எனவும் இந்த சீனா நிறைவேற்றியுள்ள சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கனடியத் தூதரக அதிகாரிகள் யாழ் பல்கலைக்கு விஜயம்

கனடியத் தூதரக அதிகாரிகள் இன்று (25) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராய்வதற்காகவே கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் ப்றவ்ணல் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். விஜயலட்சுமி, திட்ட ஆலோசகர் ஆகியோரே கனடியத் தூதரகத்தின் சார்பில் விஜயம் செய்தனர் .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி கலாநிதி கே. சுதாகர், மொழிபெயர்ப்புகள் கற்றல் துறையின் தலைவர் எஸ். கண்ணதாஸ் ஆகியோரை கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் சந்தித்து திட்ட மேம்பாடு குறித்து கேட்டறிந்தனர்.

Posted in Uncategorized

அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை விடுத்த நீதிபதி, முறைப்பாட்டின் சாட்சியாளர்களை அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தலை அனுப்புவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் சாட்சிப் பொருளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இறுவெட்டையும் அன்றைய தினம் மன்றில் சமர்ப்பிக்குமாறு அது குறித்து விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இறுவெட்டை பகிரங்க நீதிமன்றத்தில் ஔிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி அமல் ரணராஜா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Posted in Uncategorized

திரவ உர இறக்குமதி: விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு

இந்தியாவிலிருந்து திரவ உர இறக்குமதியின் போது, தனியார் நிறுவனமொன்றுக்கு பணம் செலுத்திய விடயம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்ற விசாரணை திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்தனர்.

இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் இறக்குமதிக்காக 29 கோடி ரூபா பணம் தனியார் நிறுவனமொன்றினால் கடந்த 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டிருந்தார்.

அந்த பணத்தில், 09 கோடியே 20 இலட்சம் ரூபா மாத்திரம் உர இறக்குமதிக்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் மீதி பணம் அந்த கணக்கிலேயே வைப்பிலுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே முறைப்பாடு

அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆட்சேபித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வௌியிட்டுள்ளதுடன், அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் எந்தவொரு நிலைமையின் கீழும் எந்தவொரு தினத்திலும் சஹரான் ஹாசிம் அல்லது அவருடைய வழியை பின்பற்றியவர்களுடன் தொடர்புகளை பேணவில்லை என அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தனது முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் – இராதாகிருஷ்ணன்

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

எனவே, விரைவில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவோம். அதுவரை ஓயமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக இராகலை நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்து கொண்ட ஒரு அரசாங்கம் என்றால் அது இந்த அரசாங்கமே. இன்று எதை கேட்டாலும் விலையேற்றம், தட்டுப்பாடு என்ற வார்த்தைகளே வெளிவருகின்றது.

இந்த தீபாவளி தமிழர்களுக்கு ஒரு கறுப்பு தீபாவளியைாக அமைய போகின்றது. பொருட்களின் விலையேற்றம்,வேலைக்கான உரிய சம்பளமின்மை, தொடர்ச்சியான மக்களின் போராட்டம் போன்ற காரணங்களால் இந்த தீபாவளியை மக்கள் கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசேடமாக கொண்டாடும் தீபாவளி தினத்தை துக்க தினமாக கொண்டாட வேண்டிய சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் 50 ரூபாய் சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது என்று எங்களை பார்த்து கை நீட்டியவர்கள் இன்று என்ன செய்துக்கொண்டிருக்கின்றார்கள்.

வாய் மூடி மௌனிகளாக அரசாங்கத்தை வக்காளத்து வாங்கி கொண்டிருக்கின்றார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க முடியாமல் இருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு நிலையில் நல்லாட்சியை குறை சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் கணிசமான சம்பள உயர்வை வழங்கியதோடு, எந்த காரணத்திற்காகவும் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கபடவில்லை.

எனவே, மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் தொடரும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தமிழர்களுக்கு கிடைக்குமா தனி ஈழம்? தென்னிலங்கையில் ஆதரவுக் குரல்

தமிழர்களுக்கு தனி ஈழம் வழங்க வேண்டும் என்கிறார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன.

இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும், திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும், கெரவலபிட்டி மின் நிலையத்தை அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் – தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும்.

பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமிழர்களுக்கு ஈழம் வழங்கப்பட வேண்டும். அது சர்வதேச அங்கீகாரதிற்கு வழியேற்படுத்தும் என்று விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

அத்தோடு, தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லூரின் 11ஆவது நிர்வாக அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார்.

அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் காலம் ஆரம்பமானது.

இந்த நிலையில் இன்றைய தினம் குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் 1964 டிசம்பர் 15 முதல் கடந்த 09ஆம் திகதி அவர் இறைபாதமடையும் வரை அவரே நிர்வாக அதிகாரியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.