இலங்கை மீதான பயணத் தடையை நீக்கியது ஜப்பான்

கொவிட் அபாயம் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்க ஜப்பானிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாளை (20) முதல் இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

டெல்டா கொவிட் திரிபு அவதானத்தை கருத்திற் கொண்டு கடந்த ஜூன் மாதம் ஜப்பானிய அரசால் இவ்வாறு தடை விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் கொவிட் பரிசோதனைக்கு மேலதிகமாக மூன்று நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று நோய்க்கான சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க பிரிட்டன் கடந்த தினம் தீர்மானித்திருந்தது.

எதிர்வரும் 22 ம் திகதி முதல் இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

பால்மா விலையையும் அதிகரிக்க பச்சைக் கொடி காட்டியது நிதியமைச்சு?

நாட்டில் தற்போது பால்மாவிற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அதிகரித்த விலை மற்றும் இறக்குமதி செலவு அதிகரிப்பு இலங்கை ரூபாவின் வீழ்ச்சி என பல்வேறு காரணங்களால் பால்மா நிறுவனங்கள் விலை அதிகரிப்பை கோரியிருந்தன.

எனினும் அரசாங்கம் விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்காத நிலையில் நாட்டில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் உள்நாட்டு சந்தையில் பால்மா 400 கிராம் ஒன்றின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சருக்கும் இடையே நடந்த சந்திப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே 400 கிராம் பால்மா பக்கற் ஒன்றின் விலை 380 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் விடுதலை! அரச தலைவரின் செயலால் மகிழ்ச்சியில் ஐ.நா ஆணையாளர்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகுமென்றும் இந்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லட் இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்தமை வரவேற்கத்தக்க விடயமாகும் என்பதுடன் இலங்கை ஜனாதிபதி பொது மக்களுக்கு உரித்தான அவகாசங்ளை விரிவாக்குவதற்கு பரந்தப்பட்ட கலந்துரையாடல்களை ஏற்படுத்தியமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பொறுப்புடனும் ஒத்துழைப்புடனும் கடமையாற்றுவதையும் தான் வரவேற்பதாக தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்,

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய விசாரணை குழுவொன்றை அமைத்துள்ளமைக்கும் அந்த அறிக்கையை தமக்கு சமர்ப்பித்தமைக்கும் வரவேற்பை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இழப்பீட்டை வழங்கும் தேசிய கொள்கையை நிறைவேற்றியுள்ளமை மற்றும் புனர்வாழ்வு செயற்பாடுகளை தொடர்ச்சியாக கொண்டுசெல்கின்றமையும் வரவேற்கத்தக்கதென்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பெச்லட் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் சிசிடிவி கெமராக்களே இல்லை – சிங்கள ஊடகம்

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் இதுவரை சிசிடிவி கெமராக்கள் இதுவரை பொருத்தப்படவில்லை என சிங்கள ஊடகம் ஒன்று நடத்திய தேடுதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை மருத்துவமனை, மகளிர் சிறை, கொழும்பு விளக்கமறியல் சிறை மற்றும் மெகசின் சிறை , கொழும்பு சிறை வளாகத்திலேயே சிசிடிவி அமைந்துள்ளன.

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கெமராக்கள் இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிறைகளில் சிசிடிவி கெமராக்களை நிறுவுவதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

பணியை முடிக்க இன்னும் மூன்று மாதங்கள் ஆகும் என்று சிறைத்துறை கூறியது.

மேலும், அனுராதபுரம் சிறைச்சாலையில் சிசிடிவி கெமராக்கள் பொருத்த இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த மது போதையில் வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து கைதிகளை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

எனினும், இந்த குற்றச்சாட்டை  லோஹான் ரத்வத்த நிராகரிப்பதாக கூறியிருந்தார். மேலும், சிறைக்குள் அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து சிறைத் துறை ஏற்கனவே சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இது தொடர்பில், முதலில் அனுராதபுரம் சிறைச்சாலையின் அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் இருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக சிறைத்துறை ஆணையர் கூறினார்.

Posted in Uncategorized

கைதிகளை படுகொலை செய்யும் சூழ்ச்சியுடனேயே லொஹான் வந்திருப்பார் – மனோ கணேசன்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்வதற்கான சூழ்ச்சியுடனேயே லொஹான் ரத்வத்த சிறைக்கு வந்திருப்பார் என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகளை சந்திக்க அவர் இன்றைய தினம் சென்றபோது சிறைக்குள் பிரவேசிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர்.

இருந்த போதிலும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முறையிட்டதன் பின்னர் சபாநாயகரது பணிப்புரைக்கமைய, அவர்கள் உட்பிரவேசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கைதிகளுடன் சந்திப்பை நடத்திய பின்னர் அங்கிருந்து திரும்பிய மனோ கணேசன் ஊடகங்களிடம் குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசனுடன்காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் சிறைக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மதுபோதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதுடன், மண்டியிட வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

 

Posted in Uncategorized

இலங்கையை விட்டு வெளியேறும் நிலைப்பாட்டில் இளைஞர்கள் – முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர்களுடன் நேற்றைய தினம் காணொளி வழியாக நடத்திய பேச்சுவார்தையின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவரதன அரசியல், பொருளாதாரம், கல்வி, சுற்றுலாத்துறை, தகவல் தொழிநுட்பம் மற்றும் விவசாயம் என பல துறைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

இவரது ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்திகள் இன்றும் தொடர்கிறது. திறந்த பொருளாதார கொள்கையினையுடைய சீனா, இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளன.

இந்நாடுகளில் அரச தலைவர்கள் மாற்றமடைந்துள்ளார்கள். ஆனால் பொருளாதார கொள்கை ஒருபோதும் மாற்றமடையவில்லை. ஆட்சி மாற்றம் பெறும் போது பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் ஒருபோதும் பொருளாதார ரீதியில் முன்னேற்றடைய முடியாது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் பெறும் போது பொருளாதார கொள்கையும் மாற்றமடைகிறது. இதுவே பொருளாதார பாதிப்பிற்கு பிரதான காரணியாக உள்ளது.

தற்போது அமுலில் உள்ள திறந்த பொருளாதார கொள்கையிலும் ஒரு சில மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. மட்டுப்பாடுகளை தளர்த்தினால் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.

பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, அரசியல், ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளது. இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளார்கள். இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும். நாட்டை முன்னேற்றும் பொறுப்பை இளைஞர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும். தற்போதைய அரசியல் நிலைமையை மக்கள் அடியோடு வெறுக்கிறார்கள்.

உண்மையான மற்றும் நிலையான கொள்கையுடைய அரசாங்கத்தை தோற்றுவிக்க எண்ணுகிறார்கள். இதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக மாற்றமடைந்துள்ளது.

பொருளாதாரம், சுகாதாரம், ஜனநாயகம் மற்றும் சுற்றுசூழல் உள்ளிட்ட பிரதான விடயங்களை கொண்ட குறுகிய காலத்திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியவர்களையும், எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களையும் ஒன்றிணைத்து அரசியலில் மாற்றம் ஏற்படுத்த எம்மால் முடியும்.

பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறுகிய காலத்திட்டத்திற்கமைய சரி செய்தால் நாட்டை 20 வருட காலத்திற்குள் முன்னேற்றமடைய செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிலவரம் மோசமடைகிறது – ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த 18 மாத காலத்தில் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருப்பதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

உண்மை, நீதி, இழப்பீடு வழங்கல் மற்றும் மீள்நிகழாமையை உறுதி செய்தல் என்பன தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியோலி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நேற்று முன்தினம் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 18 மாத காலத்தில் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மிகமோசமான சரிவைச் சந்தித்திருக்கின்றது.

அத்தோடு உண்மையைக் கண்டறியும் விடயத்தில் மிகவும் வரையறுக்கப்பட்ட அளவிலான நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பொறுப்புக்கூறல், நினைவுகூரல் மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் குறிப்பிடத்தக்களவிலான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.

அதுமாத்திரமன்றி இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுர தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள் அனுராதபுர தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்துங்கள்:சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை ; சிவசக்தி ஆனந்தன் பகிரங்க கோரிக்கை!

அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் மக்கள் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று (18) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்

மேலும் அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுபோதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் தனது சகபாடிகளுடன் பிரவேசித்த விடயதானத்திற்கு பொறுப்பாகவிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் முழந்தாளிடச் செய்து இருவரை மிகமோசமாக அச்சுறுத்தியுள்ளார்.

அத்துடன் காலணிகளை நாக்கால் சுத்தம் செய்யுமாறு மனித விழுமியங்களுக்கு முற்றிலும் முரணான மிலேச்சத்தனமான செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகவும் குரலற்றவர்களுக்கான குரல் அமைப்பின் தலைவர் கோமகன் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்விதமான செயற்பாடுகள் இந்த நாட்டில் சிறுபான்மையினத் தேசிய இனங்களை தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் எவ்வாறு நடத்துகின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஆகவே, இத்தகைய குரூரமான மனோநிலை கொண்டவர்களிடத்தில் நீதியை, நியாயத்தினை எதிர்பார்க்க முடியுமா என்பதும் அப்பட்டமாக வெளியாகியுள்ளது.

தற்போது இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலை விடயதானத்திலிருந்து மட்டும் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்துள்ளார். இந்த செயற்பாட்டை அரசாங்கம் குறித்த விடயத்திற்கான பொறுப்புக்கூறலாக படம் காட்டுவதற்கு முயற்சிக்கின்றது.

மேலும், சிறைச்சாலை நிர்வாகம் இவ்விதமான சம்பவம் ஒன்றே நடைபெறவில்லை என்கிறது. இராஜாங்க அமைச்சர் சிறைக்குச் சென்றேன் மதுபோதையில்லை என்று வாக்குமூலம் கூறுகின்றார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அனுமதிப்பத்திர துப்பாக்கியை வைத்திருந்தார் இராஜாங்க அமைச்சர் என்கிறார்.இவ்வாறு பல விநோதமான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இதனைவிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை தீவிரமாக முன்னெடுப்பதாகவும் கூறுகின்றது. இந்த ஆணைக்குழு கடந்த காலங்களில் எத்தனை விடயங்களுக்க நீதியை நிலைநாட்டியிருக்கின்றது என்பது ஊரறிந்த உலகறிந்த விடயம். ஆக இந்த விசாரணைக்குழுவின் முடிவு இப்போதே தெரிந்ததொன்றே.

இந்த நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மிகுந்த பாதுகாப்பு அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இலங்கையின் வரலாற்றில் வெலிக்கடை, மகசீன. அனுராதபுர கலவரங்களும் கைதிகள் படுகொலை விடயங்களும் தமிழர்களை மையப்படுத்தியே அரங்கேற்றப்பட்டிருக்கின்றது

அவ்வாறிருக்கையில், மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு திரைமறைவில் தீட்டப்படும் திட்டங்களால் ஆபத்துக்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் வெகுவாகவே ஏற்பட்டுள்ளது. இதனைவிட, அதிகாரத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு எதிராக சாட்சியமளிக்கின்றபோது அவர்களின் பாதுகாப்பு நிச்சயம் கேள்விக்குறியாகும்.
காரணம், சிறை அதிகரிகளும் இந்த விடயத்தில் நியாயமாக நடந்துகொள்ளும் மனோநிலையில் இல்லை. ஆகவே வேறெந்த காரணங்களை வைத்தும் தமிழ் அரசியல் கைதிகள் பழிவாங்கப்படுவதற்கும் வாய்ப்புக்கள் இல்லாமல் இல்லை.எனவே, அவர்களின் பாதுகாப்பை உடன் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு முதற்கட்டமாக அவர்களை வடக்கு கிழக்கில் உள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன் என்றுள்ளது.

Posted in Uncategorized

கொலையாளிகளிடம் தமிழர்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறுப்பினை வழங்கமுடியுமா? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி!

நீதிக்காக ஏங்கும் தமிழ்மக்கள் விடயத்தில் அரசியல் வியாபாரத்தை புறந்தள்ளி நீதியை பெற்றுத்தாருங்கள் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஓம் எம் பி அலுவலகம் ஒரு கண்துடைப்பிற்காகவே உருவாக்கப்பட்டது. அது சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்காக அரசின் தந்திரோபாயத்தால் உருவாக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அதனை யாருக்காக திறந்தார்கள் என்பது எமக்கு தெரியாது. கொலையாளிகளிடம் தமிழர்களிற்கு நீதி வழங்குவதற்கான பொறுப்பினை வழங்கமுடியுமா என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

எனவே இனப்படுகொலையை செய்த இலங்கை அரசுக்கு மன்னிப்பு வழங்காமல் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தி எம் உறவுகளுக்கு சர்வதேசநீதி கிடைப்பதற்கு இணை அனுசரணை நாடுகள் உதவிபுரிய வேண்டும். இந்த நெருக்கடியான காலப்பகுதியிலும் எமது சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவியை பொலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளார்கள்.

மனிதஉரிமை அமர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் கூட இந்த அரசு அத்து மீறல்களை அரங்கேற்றி வருகின்றது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உட்பட பலர் எமது நீதிக்கான போராட்டத்தினை மழுங்கடிப்பதற்காக பல்வேறு பொய்களை கூறி சர்வதேசத்தினை திசைதிருப்பி வருகின்றனர். நாம்12 வருடமாக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.

எனவே சர்வதேச நாடுகள் தங்களது நலனுக்காக இலங்கை அரசை பாதுகாக்காமல் மனிதாபிமான அடிப்படையில் எமது பிரச்சனையை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும். இந்த அமர்விலாவது எமது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்கு வழிசமைக்க வேண்டும். இன்று தமிழ்அரசியல்வாதிகள் தங்களது கதிரைகளை பாதுகாப்பதற்காக தங்களுக்குள் பேரம்பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதனை தவிர்த்து மக்களின் விடுதலைக்காக அரசியல்வாதிகளும், பொதுமக்களும் ஒட்டுமொத்த குரலாக ஒலித்து ஒன்றாக செயற்படவேண்டும். அவர்கள் அனுப்பிய கடிதங்களை பார்த்தால் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பதிலாக உங்களது அரசியலுக்காக அனுப்பியிருக்கின்றீர்களா என்றே எண்ணத்தோன்றுகின்றது.

இலங்கை அரசு புள்ளிவிபர அடிப்படையில் கடிதங்களை அனுப்பியிருக்கின்றது. அது உங்களால் ஏன் முடியாது. நாடாளுமன்றம் சென்று வெற்று கதை பேசிவிட்டு வருகின்றீர்கள். எமக்காக குரல்கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் நாம் பயணித்தோம்.

எனவே தேசியம் பேசிக்கொண்டு பிரிந்து நின்று இனத்துரோகமாக செயற்படாதீர்கள். எமது நீதிக்காக உங்களது அரசியல் வியாபாரத்தை மறுபக்கம் வைத்துவிட்டு நீதியை பெற்றுத்தாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் ?

பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அந்தந்த மாவட்ட சுகாதார சேவைகள் மத்திய நிலையத்தினை தொடர்பு கொண்டு விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சகல பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து பல்கலைக்கழக சுகாதார துறையினர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.