அம்பாறையில் றிசாட் பதியுதீனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டு இன்றுடன் 1 மாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இச்சுவரொட்டியில் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் விரைவான விடுதலை கிடைக்க ஆவணம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சுவரொட்டியானது பிரதான வீதிகள் உள்ளக வீதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, நற்பிட்டிமுனை, கல்முனைகுடி ,இஸ்லாமபாத், சாய்ந்தமருது, மாளிகைக்காடு , நிந்தவூர் ,அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ,சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம், பொத்துவில், பகுதிகளில் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் கடந்த புனித ரமழான் மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுத்தீன் சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்ற உத்தரவோ பெறப்படாமல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டிருந்ததுடன் அவருக்கு ஆதரவாகவும் விடுதலையை வலியுறுத்தியும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் செய்தியாளர் சந்திப்புகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் பொது மக்களின் அபிப்பிராயங்கள்

தேர்தல், வாக்களிப்பு முறைமை மற்றும் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புப் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு பொதுமக்களின் அபிப்பிராயத்தைப் பெறுவதற்கு தீர்மானித்திருக்கின்றமை முக்கிய விடயமென ஃபெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் முறைமையில் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு, இந்த விடயத்தில் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இடம்பெற வேண்டிய மறுசீரமைப்பு பற்றி ஜூன் மாதம் 19ஆம் திகதி வரை பொதுமக்கள் தங்களின் அபிப்பிராயங்களை முன்வைக்க முடியும். இந்த விடயத்தில் மக்கள் மிகுந்த கவனம் செலுத்துமாறும் பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து..!

சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட குறித்த விஜயமானது தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதை பிராந்திய ஒத்துழைப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உறுதிப்படுத்தினார். தொடர்ந்தும் சீன உயர்மட்டத்தினரின் கொழும்பை நோக்கிய வியஜங்களானது அனைத்துலக பார்வைக்குட்பட்டிருந்த நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் வீஃபெங் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது. குறிப்பாக துறைமுக நகர் திட்டத்தை மையப்படுத்தியதாகவே இந்த விஜயம் அமையவிருந்ததாகவும் அவரது விஜயத்திற்கு முன்னதாக இலங்கை தரப்பில் துறைமுக நகர் நிர்வாக கட்டமைப்பிற்கு தேவையான சட்ட அனுமதிகள் பூர்த்திப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதாகவே கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் பன்னாட்டு இராஜதந்திரிகளினதும் கணிப்பாகியிருந்தது.

ஆனால் தற்போது உயர்நீதிமன்றின் தீர்ப்புடன் திருத்தங்களுக்குட்பட்ட நிலையில் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குழு சட்டம் குறித்து சீன தூதரகம் எவ்விதமான கருத்துக்களையும் கூறவில்லை. எனவே இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்குட்பட்டு துறைமுக நிர்வாக கட்டமைப்பு அமைய வேண்டும் என்பதில் சீனா எவ்வாறானதொரு நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது வெளிப்பட வில்லை.

இவ்வாறானதொரு நிலையில் சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இவரது விஜயத்தில் இரு முக்கிய விடயங்கள் எதிர்பார்க்கப்பட்டது. முதலாவது துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் மற்றும் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இடம்பெறவுள்ள சீன கமியூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்விற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வை சிறப்பு அதிதியாக அழைப்பதாகும். ஏற்கனவே இரு முறை திட்டமிடப்பட்டிருந்த சீன விஜயம் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக இரத்துச்செய்யப்பட்டது. இவ்வாறானதொரு நிலையிலேயே சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயின் இலங்கை விஜயம் இரத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

25 ஆம் திகதி வீடுகளிலே இருக்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் 25 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னரும் வீடுகளிலேயே தங்கியிருக்கமாறு கொவிட் ஒழிப்பு தொடர்பிலான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

மிக அருகிலுள்ள விற்பனை நிலையங்களில் பொருட்கொள்வனவில் ஈடுபடுவதற்கு மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கப்படும் என
செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பயணத் தடை தளர்த்தப்படுவது உணவுப்பொருட்கள் மற்றும் ஔடதங்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதற்காக மாத்திரமே என அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு 11 மணியிலிருந்து நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணத் தடை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்பட்டு அதேநாள், இரவு 11 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

பயணத் தடை தளர்த்தப்படுமே அன்றி நீக்கப்படமாட்டாது என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

பயணத் தடை தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிக்குள் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்தகங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களை மாத்திரமே திறந்து வைப்பதற்கு
வாய்ப்பளிக்கப்படவுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

குடிதண்ணீர் பிரச்சனை ஏற்படுமாயின் உடனடியாக தொடர்புகொள்ளுங்கள்-ரெலோ விஜிந்தன் கரைதுறைப்பற்று பிரதேச சபை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்படுகின்ற போது அல்லது குடும்பங்கள் தனிமை படுத்தப்படுகின்ற போதோ குடி நீர் பிரச்சினை ஏற்படுமாயின், தீர்த்து வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்;போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதாக இருந்தால் வட்டார உறுப்பினர்கள் அல்லது உப பிரதேச சபை பொறுப்பதிகாரிகளுடன் குறித்த கிராம அலுவலர்கள் தொடர்புகொள்ளும் வேளையில் இலவசமாக குடி நீரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்று பொலீஸ் பிரிவுகளை உள்ளடக்கிய கரைதுறைப்பற்று பிரதேசம் காணப்படுகின்றது 46 கிராம சேவை பிரிவுகளை கொண்ட பிரதேசத்தில் 13ஆயிரத்தி 280 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.ஆடைத்தொழில்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் என (21.05.21 வரை) 88 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய ராஐபக்க்ஷ ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

போர்த்துக்கேயர் மோசமானர்கள் அவர்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று எண்ணி அவர்களை விட மோசமானவர்களை வரவழைத்தமை அதாவது இஞ்சியை விட காரமான மிளகாயை வாங்கியது போன்ற உவமைக்கு உள்ளானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை வரலாற்றின் அன்னிய காலணித்துவ பின்னணியை திரும்பிப் பார்த்தால் தற்போது இலங்கை அரசாங்கம் சீனாவுடன் கொண்டுள் உறவை மிக தெளிவாக விளங்கிக் கொள்வதுடன் எதிர்காலத்தில் எவ்வாறான மாற்றங்கள் இடம் பெறப் போகிறது என்பதை உணர முடியும்.

இலங்கையில் முதலாவதாக வந்த போர்த்துக்கேயர் கோட்டை மன்னனை எப்படி வசப்படுத்தி உள் நுழைந்தவர்கள் இறுதியில் டொன்யுவான் தர்மபாலவுடன் ஒப்பம் செய்து கோட்டை ராச்சியத்தையே ஒரு துளி இரத்தம் சிந்தாமல் கைப்பற்றினர்.

போர்த்துக்கேயருடன் தொடர்ந்து போரில் ஈடுபட்ட சிங்கள மன்னர்களுள் இரண்டாம் இராஐசிங்கன் ஒரு கட்டத்தில் போர்த்துக்கேயரை வெளியேற்ற ஒல்லாந்தருடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டான் இதுவே பின்னாளில் சிங்கள மக்களால் இஞ்சி கொடு்த்து மிளகாய் அல்லது மிளகு வாங்கிய கதையாகியது. காரணம் போர்த்துக்கேயர் மோசமானர்கள் அவர்களை எப்படியாவது வெளியேற்ற வேண்டும் என்று எண்ணி அவர்களை விட மோசமானவர்களை வரவழைத்தமை அதாவது இஞ்சியை விட காரமான மிளகாயை வாங்கியது போன்ற உவமைக்கு உள்ளானது.

இதே நிலைமைதான் தற்போது ராஐபக்சாக்களின் நிலைமை அதாவது தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முள்ளிவாய்க்காலில் கோரமாக அடக்கும் போது நடந்த போர்க்குற்றங்கள்,மனிதப் படுகொலைகள் ,இனப்படுகொலைகள் பெரும் பூதமாக ஐக்கியநாடுகள் மனிதவுரிமைப் பேரவையில் உருவெடுத்தமையின் பின்னணியில் இந்திய,அவுஸ்ரேலிய,ஆசிய ,மேற்குலக,அமெரிக்க நாடுகள் ஓரணியில் இருப்பதால் அதனை எதிர்க்கும் முகமாக அந்த அழுத்தங்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காகவும் தங்கள் ஆட்சியை தொடர்வதற்காகவும் சீனாவிடம் முழுமையாக சரணடைந்ததுடன் ஒப்பந்தங்கள் பலவற்றை சட்டமாக்கியதுடன் தனியான தீவை நாட்டின் இறைமையை தாண்டி வழங்கியுள்ளனர்.

இங்குதான் இஞ்சி போன்ற தமிழர்களை பகைத்துக் கொண்டு மிளகாய் போன்ற சீனாவுடன் வாழத் தொடங்கியுள்ளனர். இது வரலாற்று ரீதியாக இரண்டாம் இராஐசிங்கனின் கதையாக மாறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆரம்பகாலங்களில் இலங்கையுடன் பட்டுப்பாதையில் வியாபாரங்களில் ஈடுபடும் போது இலங்கைக்கு சீனர்கள் இட்ட பெயர் சீலன் ஆகும் எதிர்காலத்தில் கொழும்பு போர்ட் சிற்றிக்கு சீலன் என்று பெயர் வைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Posted in Uncategorized

எதிர்க்கட்சித் தலைவருக்கும், மனைவிக்கும் கொரோனாத் தொற்று!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்றுச் சனிக்கிழமை தமது மனைவிக்குத் தொற்று உறுதியானதாகவும், தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்துத் தாமும் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று உறுதியானதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தகவலை சஜித் பிரேமதாஸ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்மொழியை தொடர்ச்சியாக புறக்கணித்தால் சீனாவுக்கு எதிராக வீதியில் இறங்குவோம்; மனோ

“இலங்கையில் தமிழ் மொழியைத் தொடர்ச்சியாக புறக்கணித்து மொழிச் சட்டத்தை மீறும் சீனாவுக்கு எதிராக வீதி போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகும்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான அவரின் ருவிட்டர் பதிவு வருமாறு:-

“தமிழைத் தவிர்த்து, சீனர்கள் மொழிச் சட்டத்தை இங்கு மீறுகின்றார்கள். சிங்களம், தமிழ் இரு மொழிகளையும் தவிர்த்த சீன மொழி மட்டுமுள்ள பெயர்ப் பலகைகளும் உள்ளன. நான் சீனத் தூதுவரைச் சந்தித்து இது பற்றி விளக்கியுள்ளேன். எனினும், பயனில்லை. இந்நிலை தொடருமானால், நாம் தெருப் போராட்டம் செய்ய வேண்டி வரும்.”

Posted in Uncategorized

முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை-இம்ரான் மஹ்ரூப் எம். பி சாடல்

முஸ்லிம் கட்சிகள் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

துறைமுக நகர சட்டமூலத்துக்கான வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகங்களிடம் இன்று (22)கருத்து வெளியிடும்போதே அவர் இவவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இன்று காணப்பப்படும் பிரதான இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அதன் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. அது ராஜபக்சகளின் கட்டுப்பாட்டில் உள்ளமை இருபதாம் திருத்தம் மற்றும் துறைமுக நகர சட்டமூல வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகிறது.

இருபதாம் திருத்த சட்டமூலத்தில் தலைவர் எதிராகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் வாக்களித்தனர்.அதன்பின் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இனி அவர்கள் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் துறைமுக நகர சட்டமூலத்தில் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் ராஜபக்சக்களின் காட்டுப்பாட்டில்லையே உள்ளனர் என்பது புலனாகியது.

அதுவும் இந்த சட்டமூல விவாதத்தில் இதற்கு எதிராக பேசிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இவர்கள் வாக்காளிக்காமல் தடுத்துள்ளனர். காரணம் இவர்களால் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்காளிக்க முடியாது. எனவே எதிராக வாக்ளிக்க இருந்த தலைவரையும் வாக்காளிக்காமல் தடுத்து இவர்கள் மக்களிடமும் ராஜாபக்சக்களிடமும் தப்ப முயற்சிக்கின்றனர்.

அடுத்த பக்கம் அகில இங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் கூட அக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தமது தலைவரை சிறையில் அடைத்த அரசை எதிர்த்து வாக்களிக்க முடியவில்லை.

ஆகவே இவர்கள் அனைவரும் தற்போது ராஜபக்சக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இவர்களால் அரசை எதிர்த்து ஒன்றும் பேச முடியாது என தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இடை நீக்கம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரே இவ்வாறு கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் அவர்கள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.