கொழும்பு துறைமுக நகரத்திற்கு பிரபாகரனை விட அதிக அதிகாரங்கள் இருக்கும் – ரணில்

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், வட பகுதியை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தபோது கொண்டிருந்த அதிகாரத்தைவிட அதிகளவு அதிகாரத்தை கொழும்பு துறைமுக நகரம் கொண்டிருக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்க, ஒரு நாடு ஒரு சட்டம் எனப் பேசிய அதே ஆட்கள் இப்போது ஒரு நாடு இரண்டு சட்டங்கள் என்பதற்கு இணங்கிவந்திருப்பதையிட்டு தான் ஆச்சரியமடைவதாகவும் குறிப்பிட்டிக்கின்றார்.

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் காலனியாகிவிடும் எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.

“இந்தப் பகுதி சினாவின் காலனியாகிவிடும் எனக்கூறப்படுவதையிட்டு நான் அறிந்திருக்கின்றேன். ஆனால், போர்க் காலத்தில் பிரபாகரன் கைப்பற்றிவைத்திருந்த பகுதிகளில் அவரிடம் காணப்பட்ட அதிகாரத்தைவிட அதிகளவு அதிகாரங்களைக் கொண்டதாக இந்த துறைமுக அதிகார சபை விளங்கும்” எனவும் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார்.

“ஒரு நாடு ஒரு சட்டம் எனக் கூறிவந்தவர்களே, ஒரே நாட்டில் இரண்டு சட்டங்களைக் கொண்டிப்பது ஆச்சரியமாக இருக்கின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

“கொழும்புத் துறைமுகத்தை சட்டவிரோதமன முறையில் கண்காணிப்பதற்கு கொழும்பு துறைமுக நகர் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையை பல நாடுகள் 2015 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் தான் பிரதமராக இருந்தபோது தெரிவித்திருந்தன” எனக்குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு துறைமுக நகரிலிருந்து வெளியாட்கள் துறைமுகத்தை கண்காணிப்பதை அப்போதைய தமது அரசு விரும்பவில்லை” எனவும் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பில் சீனாவுக்கு தமது அரசாங்கம் கரிசனையை வெளியிட்டதுடன், அதற்கான தீர்வு ஒன்றை நோக்கியும் செயற்பட்டது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புர்கா உள்ளிட்ட முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முகத்தை மறைக்கக்கூடிய ஆடைகளை அணிவதனை தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர வழங்கிய யோசனைக்கு அமைச்சரவை மேற்படி அனுமதியை வழங்கியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

மிக மோசமான ஜனநாயக அடக்கு முறைக்குள் இலங்கை: சர்வதேச தூதுவர்களுடனான சந்திப்பில் சஜித்..!

நாட்டு மக்களின் மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு மிக மோசமான அடக்குமுறை ஆட்சியொன்றை கையாள அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அரசாங்கத்திற்கு சவாலான பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறிக்கும் அளவிற்கு அரச அடக்குமுறை கையாளப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பியாவின் முக்கிய நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் -19 வைரஸ் நிலைமையை கையாள்வதில் அரசாங்கம் பலவீனப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் சகல மக்களுக்கும் தடுப்பூசியை ஏற்றும் செயற்பாட்டை முன்னெடுக்க சர்வதேச நாடுகளின் பூரணமான ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் உள்ளிட்ட இராஜதந்திர அதிகாரிகள் இன்று பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு இன்று பிற்பகல் வருகைதந்த அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, நோர்வே மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும், உயர்ஸ்தானிகர்களும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான் விக்ரமரத்ன உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் அறிவித்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வௌிநாட்டு கொள்கை வகுப்பாளர் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்களான கலாநிதி ரொஹான் பல்லேவத்த, கலாநிதி கிஹான் குணதிலக்க, ஹரீம் பீரிஸ் ஆகியோரும் வௌிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுடனான இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தின் 04 நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று முற்பகல் சந்தித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான தூதுவர் டெனிஸ் சைபீயின் தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் ரோமானியா ஆகிய நாடுகளின் தூதுவர்களே இன்று முற்பகல் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து கலந்துரையாடினர்.

Posted in Uncategorized

நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தனியார் வகுப்புகளுக்கும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

தந்தை செல்வாவின் பெயரால் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்க சில தரப்புக்கள் முயற்சி – பொத்துவில் பொலிகண்டி பேரியக்கம் குற்றச்சாட்டு

தந்தை செல்வாவின் பெயரால் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்க சில தரப்புக்கள் முயற்சி என பொத்துவில் பொலிகண்டி பேரியக்கம் குற்றச்சாட்டாயுள்ளது.

தந்தை செல்வாவின் 44வது நினைவு தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தந்தை செல்வாவை அகிம்சை போராளியின் தீர்க்கதரிசனம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஈழத்தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தின் தந்தையாக விளங்கும் எஸ்.ஜெ.வி செல்வநாயகம் அவர்களின் 44வது நினைவு தினம் இன்றாகும் (26.04.2021). ஆரம்பத்தில் தமிழ் தேசிய இருப்பிற்காக சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி அதற்காக சாத்வீக முறையில் போராடி வந்த தந்தை செல்வா, சிங்கள பேரினவாதத்தின் உண்மை முகத்தினை அறிந்த பின், வட்டுக்கோட்டையில் 1976 மே 14ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணி கட்சி மாநாட்டில் தனது தலைமையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.

இத்தீர்மானம் ஆனது தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு தமிழ் இனத்திக்கான நிரந்தர தீர்வினையும் முன்மொழிந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு தமிழினம் வழங்கிய ஏகோபித்த ஆதரவானது ஒட்டுமொத்த இனத்தினதும் அரசியல் அபிலாசையினை முழு உலகிற்கும் வெளிப்படுத்தி நின்றது. இத்தீர்மானமே அதன் பின் நடைபெற்ற அனைத்து போராட்ட வடிவங்களுக்கும் அடிப்படையாக அமைந்தது.

இன்று தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுக்கும் ஒவ்வொரு தமிழ் மகனையும் மகளையும் பயங்கரவாதியாக சித்தரிக்க முயலும் சிங்கள பேரினவாத அரசானது தமிழினத்தின் அகிம்சை வழிப்போராட்ட வரலாற்றினை ஏனோ இலகுவாக மறப்பதுடன் மறைத்தும் வருகின்றது.

இன்று தமது நாட்டை இழந்து, இனஅழிப்பிற்கு உள்ளாகி, தமது பூர்வீக நிலங்களை சிங்கள பேரினவாதத்திடமிருந்து காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் தமிழ் இனத்திற்கு, தந்தை செல்வா காட்டிய அகிம்சை வழி போராட்டமானது ஒரு தமிழ் தேசிய பாதையினை காட்டி நிற்கின்றது.

2009ம் ஆண்டிற்குப் பின் அரசியலில் அனாதைகளாக, உரிமை போராட்டத்தின் வழித்தடத்தினை தேடி நிற்கும் தமிழினத்திற்கு, எம்மால் விட்டுக்கொடுப்புகளின்றி சலுகைகளை மறுத்து உரிமைக்காக மீண்டும் அகிம்சை வழியிலும் போராட முடியும் என்பதை தந்தை செல்வாவின் நினைவுகள் வலியுறுத்தி நிற்கின்றன.

இன்று உரிமைக்காக மட்டுமன்றி நீதிக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் நாம், எமது வரலாற்று பாடங்களிலிருந்து, சிங்கள பேரின வாதத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை தெளிவாகவே அறிந்துள்ளோம். ஆயினும் சர்வதேசத்தில் எஞ்சியிருக்கும் மனிதவுரிமை மற்றும் நீதியின் மீதான பற்றுதியின் பால் நம்பிக்கை வைத்தே தொடர்ந்து போராடி வருகின்றோம்.

தமிழ் தேசியத்தின் மீதே தந்தை செல்வாவின் அரசியல் வாழ்வு கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆயின் இன்று சில தரப்புகள் தந்தை செல்வாவின் பெயரால் தமிழ் தேசிய நீக்க அரசியலை முன்னெடுக்க முயல்கின்றனர்.

இவர்கள் தமிழினத்தை தவறாக வழிநடத்த முயல்வதுடன் தந்தை செல்வாவின் தீர்க்கதர்சனமான அபிலாசையினை மறுதலிக்கவும் முற்படுகின்றனர். இவர்களை தமிழ் மக்கள் அடையாளம் காண்பதுடன் அவர்களை ஜனநாயக முறையில் தமிழ் தேசிய அரங்கிலிருந்து அகற்ற முன்வர வேண்டும்.

தந்தை செல்வாவின் நினைவுகளுடன் ஒன்றியிருக்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் ஆகிய நாம், அன்னார் காட்டிய வழியின் தமிழ் தேசிய வழியில் எவ்வித விட்டுக் கொடுப்புகளுமின்றி பயணிப்போம் என உறுதி எடுத்து கொள்கின்றோம்.

Posted in Uncategorized

அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது- பிரசன்ன குணசேன

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் இடப் பற்றாக்குறை தற்போது நிலவுகின்றதென அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன கூறியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன குணசேன மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

இதற்கு மக்கள், தங்களினால் முடிந்த சுயபரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதனூடாக ஆரம்பத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றுள்ளமையை இனங்கண்டு, சிகிச்சைப் பெறும்போது குணமடைய முடியும்.

அதாவது, சில சொற்களை பேசும் போது சோர்வை உணர்தல், ஒரே மூச்சில் 1- 10 வரை எண்ணுவதற்கு சிரமப்படுதல் ஆகிய தன்மைகளை உணர்வீர்களாயின் வைத்திய ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மேல், வட மேல் மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை

மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை விடுமுறை வழங்குமாறு கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல். பீரீஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.

எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

ஏதேனும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது குறித்து உரிய தகவல்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பாடசாலைகளில் சுகாதார ஒழுங்குவிதிகளை உரிய வகையில் பின்பற்றுமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரீஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

நாட்டில் அதிரடியாக முடக்கப்படுகிறது சில பகுதிகள் !

காலி மாவட்டத்தில் ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புலகொட மற்றும் கடுதம்பே கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (26) இரவு 8 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா, களுத்துறை, திருகோணமலை பொலிஸ் பிரிவில் உள்ள சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தபடுவதாக இன்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கம்பஹா மாவட்டத்தின் கொட்தெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்ஹேன, ஹீரலுகெதர மற்றும் களுஅக்கல ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் மினுவங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்வென்னவத்த கிழக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு, பெலவத்த கிழக்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூம்புகார் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும் என்றே சிந்தித்து செயற்படுகிறது – கலாநிதி ஜெகான் பெரேரா

ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கமானது இந்த அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும் எனவும் அதற்கான ஆணையை மக்கள் தமக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்ற சிந்தனையோடு தற்போதைய அரசாங்கமானது ஆட்சி பீடம்ஏறி இருக்கின்றது.

அது எவ்வாறு என்றாலும் சமாதான சூழலுக்கு பல பலவிதமான சவால்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையிலும் கூட எங்களுடைய நம்பிக்கையினை நாங்கள் இழக்கக்கூடாது தொடர்ச்சியாக அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று இயக்குனர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 44 வது நினைவுநாள் நிகழ்வில் முன்னேற்றத்தின் வழிகளில் இணக்கம் காண்தல் எனும் தலைப்பில் ஆற்றிய நினைவுப் பேருரையில் இதனைத் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த நினைவு பேருரை நிகழ்வு இடம்பெறுகிறது. இந்த இரண்டு வருடங்களில் பல மாற்றங்கள் பல தீய நிகழ்வுகள் இந்த நாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. நல்ல நோக்கத்தை அடைவதற்கு சமாதானத்தை முன்னெடுத்தல் என்பதுதான் இன்று இந்த உரையின் கருப்பொருளாக உள்ளது.

கடந்த நாட்களிலேயே இலங்கைக்கு பொருத்தமான ஆட்சிமுறை சமஸ்டி முறையிலான ஆட்சி முறைதான் சரியானது என குறிப்பிட்டிருந்தார்கள். அதுவும் சுவிட்சலாந்து மாதிரியான சமஸ்டி முறையிலான ஒருமுறைதான் இலங்கைக்கு பொருத்தமானது என குறிப்பிட்டுள்ளார்கள்.

சிங்கள மக்களைப் பொருத்தவரை 2>500 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்கென்று ஒரு சரித்திரம் அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள். அத்தோடு அவர்கள் கூறுகின்றார்கள் புத்தபெருமான் தங்களுக்கென்று இந்த தீவினை கொடுத்திருக்கிறார்கள் என அவர்கள் நம்புகிறார்கள்.

பௌத்தத்தை பாதுகாப்பதற்கான பொறுப்பு சிங்களவர்கள் கையிலே இந்தத் தீவிலே கொடுக்கப்பட்டு இருப்பதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே செயற்படுவதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கத்திலே இந்தத் தீவிலே அவர்கள் மிகப் பெரும்பான்மையான எண்ணிக்கையாக இருந்திருந்தாலும் கூட அவர்கள் மன நிலையானது ஒரு சிறுபான்மை மக்களை போன்றதாகவே இருக்கின்றது. சிறுபான்மை மனநிலை உடைய சிங்களவர் பெரும்பான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கு பல காரணங்கள் உண்டு. பிராந்தியத்தை எடுத்துப்பார்த்தால் அதில் அவர்கள் மிக சொற்ப சிறிதளவு எண்ணிக்கையை கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.

தமிழர்களை பார்க்கும் போது தமிழ் மக்கள் தாங்கள் ஒரு பிரதேசம் என்கின்ற மனநிலையோடு வாழுகிற மக்கள், வேறு பிரதேசங்களில் வாழுகின்ற மற்றவர்களை விட வித்தியாசமாக கலாச்சாரம், மொழி பின்னணி எல்லாவற்றிலுமே வேறாக இருக்கின்ற ஒரு பிறிதான தேசம் என்ற மனநிலையோடு தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இந்த இரண்டு இனங்களுக்கு இடையில் இந்த தீவில் எப்படியாக நிர்வாகத்தை செய்வது என்ற கேள்வி எழுகின்றது.

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஒரு அதிகாரப் பகிர்வு முறை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அது முழுமை பெறாது இருந்தாலும் அது இன்னமும் சீர் செய்ய வேண்டியதாக இருந்தாலும் கூட அதிகாரப் பகிர்வுக்கான ஒரு அடிப்படையை அது கொடுத்திருந்தது அதனை சீர் செய்து சரி செய்து நிவர்த்தி செய்ய வேண்டும். அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும்.

ஆனால் இன்றைக்கு நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளல் நல்லதாக இருக்கும். தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கமானது இந்த அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும் என அதற்கான ஆணையை மக்கள் தமக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்ற சிந்தனையோடு தற்போதைய அரசாங்கமானது ஆட்சி பீடம் ஏறி இருக்கின்றது.

இன்றைக்கு அவர்களுடைய நிலைப்பாடு அதிகாரப் பகிர்வுக்கு எதிரானதாக இருக்கின்றது. அப்படியான சிந்தனையிலேயே இருக்கின்ற வேளையில் தான் யுத்தம் முடிவடைந்த பிறகு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கைக்கு வருகை தந்த போது அப்போதிருந்த ஜனாதிபதி உடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டு அறிக்கையின் பிரகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினுடைய சிலர் தலையீடுகள் இருந்துகொண்டிருந்தன.

இந்தத் தடவை இப்படியான வித்தியாசமான சிந்தனையோடு ஆட்சி வந்த அரசாங்கம் தோற்றுப் போனது, ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் நிறைவேறி இருக்கிறது/ அந்த தீர்மானத்தின் பிரகாரம் இன்னும் பதினெட்டு மாத காலத்திற்கு இலங்கை மீதான கடும் பார்வை கண்காணிப்பு இருக்கும் மேற்பார்வை ஒன்றும் இருக்கும்.

நான்கு மாதத்திற்கு ஒரு தடவை இலங்கை நிலைமை குறித்து அறிக்கை கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. செயலாளர் நாயகம் இலங்கைக்கு வந்தபோது இலங்கை ஜனாதிபதியோடு செய்த கூட்டறிக்கை முக்கியமான அம்சமாக இருந்தது..பொறுப்புக்கூறல் என்பது நிலைமாறுகால நீதி என்கின்ற ஒரு தத்துவம் இப்பொழுது காணப்படுகின்றது.

அதாவது ஒரு குழப்பமான சூழ்நிலையில் அல்லது ஒரு ஆயுத மோதலுக்குப் பிறகு வருகின்ற காலத்தில் இந்த நிலை நிலைமாறுகால நீதி அமுல்படுத்தப்படும் அதில் பிரதானமான தூண்கள் முதலாவது உண்மை இரண்டாவது நீதி , இழப்புகள் கொடுக்கப்படுதல், முன்னரைப் போல பல இழப்புக்களை ஏற்படாமைக்கான உத்தரவாதம் இந்த நான்கை எடுத்துக்கொண்டாலும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஆகட்டும் அல்லது மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முன்னைய தீர்மானங்கள் ஆகட்டும் அவை பொறுப்புக்கூறல் என்கின்ற இரண்டாவது தூணைத்தான் கூடுதலாக வலியுறுத்தி இருக்கின்றனர். உண்மை உண்மையை கண்டறிதல் மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.

சமாதானத்திற்கான சவால் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தினை நான் முன்னொரு காலத்தில் மன்னார் ஆயரின் இல்லத்தில் வைத்து நான் அதனை படித்திருந்தேன் அதன் நடுப்பக்கத்தில் அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் சேர்ந்து எழுதிய அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த நேரத்தில் சோவியத் ரஷ்யா எவ்வாறு தீய சக்தியாக உலகத்தில் இருக்கின்றதோ> அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் இருந்து ஒரு பாரிய முறுகல் நிலை இருந்த பின்னணியிலே ஒரு அணு ஆயுத போர் ஏற்படுமா என்ற பீதி உலகம் முழுவதும் பிடித்திருந்த நிலையிலே அந்த பேராயர்கள் அந்தப் சமாதானத்துக்கான சவால்கள் என்ற நூலில் எழுதினார்கள்.

அதில் அவர்கள் சொன்ன பல விடயங்கள் என்னுடைய மனதை தொட்டு இருக்கின்றன. அதை அவர்கள் எழுதி ஐந்து வருட காலத்துக்குள்ளேயே உலகத்திலே தீய சக்தியாக வர்ணிக்கப்பட்ட சோவியத் ரஷ்யாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததை நாங்கள் அறிந்திருந்தோம்.

எனவே எமது நாட்டிலும் தமிழர்களாகிய நாம் எமது நம்பிக்கையை இழக்க கூடாது சமாதானத்திற்கான பல பலவிதமான சவால்கள் இருந்து கொண்டிருக்கும் நிலையிலும் கூட எங்களுடைய நம்பிக்கைகளை நாங்கள் இழக்கக்கூடாது தொடர்ச்சியாக அதற்கான எங்களுடைய முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். எந்த வேலையிலும் நம்பிக்கை இழந்தவர்களாக நாங்கள் போய்விடக்கூடாது தொடர்ச்சியாக எங்களுடைய முனைப்பான முயற்சி இருக்க வேண்டும் என்றார்.

அமெரிக்கா, பிரித்தானியா இலங்கைக்கு பயண எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், இலங்கைக்கான பயண எச்சரிக்கையை பிரித்தானியாவும், அமெரிக்காவும் விடுத்துள்ளன.

கொரோனா தொற்று காரணமாக இரண்டாவது நிலை பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் அறிவித்துள்ளது.

2021 ஏப்ரல் 21 ஆம் வெளியிடப்பட்ட இந்த இரண்டாம் நிலை பயண ஆலோசனை நாட்டில் கொரோனா தொற்றின் மிதமான அளவைக் குறிக்கிறது.

இதேவேளை இலங்கைக்கான நுழைவு கட்டுப்பாடுகள் குறிப்பாக தனிமைப்படுத்தல் மற்றும் பி.சி.ஆர். சோதனைக்கான ஏற்பாடுகளுக்கு உட்பட்டு பிரித்தானியாவும் பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்தப் பயண ஆலோசனை 2021 ஏப்ரல் 26 ஆம் திகதி பிரித்தானிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.