இலங்கையில் என்றுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை – அலன் கீனன்

இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வரை அங்கு எதுவும் மாறப்போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர் அலன் கீனன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இந்த வருடம் கறுப்பு ஜுலையின் 40 ஆவர் நினைவுதினம். இலங்கை தலைநகரில் ஏற்பட்ட வன்முறைகளால் 3000 இற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், பல ஆயிரம் பேர் நாட்டைவிட்டு தப்பியோடியிருந்தனர். பல ஆயிரம் உடமைகள் சேதமாக்கப்பட்டன. அதுவே முழு அளவிலான போருக்கு வழிவகுத்திருந்தது.

இந்த போரில் பல ஆயிரம் மக்கள் கொல்ப்பட்டனர். இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் பலர் திரும்பிவரவில்லை. தமது பிள்ளைகளை தேடி உறவினர்கள் கடந்த 5 வருடங்களாக போராடி வருகின்றனர். அங்கு மனித புதைகுழிகள் உள்ளன.

ஆனால் இவை எவற்றுக்கும் அங்கு நீதி கிடைக்கவில்லை. வாக்குறுதிகளை வழங்குவது இலங்கை அரசுகளின் வழக்கமாகிவிட்டது. விசாரணைகளை அரசுகளே குழப்பி அதனை அனைத்துலக மட்டத்திற்கு கொண்டு செல்லாது தடுக்கின்றன.

உதாரணமாக உடலகம ஆணைக்குழுவை கூறலாம். மகிந்தாவே அதனை அமைத்தார். அவரின் ஆட்சிக்காலத்தின் முதலாண்டு பகுதியில் இடம்பெற்ற 17 படுகொலைகள் தொடர்பான விசாரண அது. ஆனால் 2011 ஆம் ஆண்டு அவர்கள் அனுபவங்களை கற்பதும், நல்லிணக்கப்பாடும் என்ற குழுவை அமைத்தனர். இந்த குழு காலத்தை கடத்துவதிலும், அனைத்துலக விசாரணைகளை தடுப்பதிலும் தான் கவனம் செலுத்தியது. பொதுமக்களின் படுகொலைகளில் படையினருக்கு உள்ள தொடர்புகளையும் அது மறைக்க முயன்றது.

எனவே இலங்கையில் அமைதி ஏற்படவேண்டும் என்றால் அங்கு விசாரணைக்குழுக்கள் சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதுடன் அவர்களின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் அதற்கான அனைத்துலக உதவிகளும் பெறப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்டெம்பர் (06) வியாழனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்டெம்பர் வெள்ளிக்கிழமை (08) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண்போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.

 

இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.

அதற்கமைய முதலாவது மனிதஎச்சத்தின் பச்சைநிற நீளக் காட்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம்அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது

அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்கமுடிந்தது.

மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடையவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமகியிருந்தனர்.

குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடையப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றத் தவறுகின்றது – மனித உரிமைகள் ஆணையாளர்

இலங்கை பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து தவறி வருகின்றது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) வெளியிட்டுள்ள வருடாந்தர அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போர்க்குற்றங்கள், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் பொறுப்பு கூறல்கள் மீறப்பட்டுள்ளமை நன்கு புலப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முன்னோக்கிச் செல்வதற்கு இந்த விடயங்கள் பாரிய தடையாக இருப்பதாகவும் அது தொடர்பாக மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் எனவும் யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும், அதனூடாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் தீர்வு கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டடமூலம் மற்றும் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் உட்பட முன்மொழியப்பட்ட புதிய சட்டமூலங்கள் தொடர்பான பல கவலைகளையும் அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் மூலம் வாக்காளர்களின் சுதந்திரமான கருத்துரிமையை அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறைகள் எதையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – அலி சப்றி

மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காண்பது தொடர்பில் இலங்கை எந்தவொரு வெளிபொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரிஇராஜதந்திர சமூகத்தினருக்கு மீண்டும் தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் அமர்வு அடுத்தமாதம் இடம்பெறவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் குறித்;த அலுவலகம் மூலமும் ஏனைய அமைப்புகள் மூலமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நான் தெளிவுபடுத்தியுள்ளேன் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகளுக்கு எடுத்துரைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும்தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச தராதங்களிற்கு ஏற்ற பயங்கரவாத தடைச்சட்டம் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஆதரித்த நாடுகளின் முக்கிய வேண்டுகோளாக காணப்படுகின்றது.

பொருளாதாரமீட்சி மற்றும் கடன்மறுசீரமைப்பு தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும்அவர் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பது தவறு – காமினி லொக்குகே

தேசிய கீதத்தை திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய தவறாகும். தேசிய கீதத்தை தமிழ் மொழியில் இசைப்பதும் தவறு. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது அரசியலமைப்பு தேவையற்றதாகும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

கொழும்பில் (01) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதிகாரம் தனக்கு இல்லை. பாராளுமன்றமே அதை தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் தெளிவாக குறிப்பிட்டார்.

நாட்டில் தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரச்சினை உள்ளது. ஒரு தரப்பினரது பிரச்சினைக்கு அரசியலமைப்பு ஊடாக மாத்திரம் எவ்வாறு தீர்வு காண்பது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு காணப்படும் பின்னணியில் அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது.

30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்தி அப்பிரதேச மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தினார். அந்த உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாத்துக் கொள்ளவில்லை.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதை காட்டிலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.

69 இலட்ச மக்களின் கோரிக்கை புதிய அரசியலமைப்பை மையப்படுத்தியதாக உள்ளது.ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் 13 ஆவது திருத்தம் தேவையற்றதாக்கப்படும்.

தேசிய கீதத்தை ஒவ்வொருவரின் விருப்பத்துக்கு ஏற்ப திரிபுபடுத்தி பாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதும் தவறாகும்,நான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளேன்.- என்றார்.

மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு செயல்முறையுடனான இலங்கையின் ஈடுபாட்டிற்கு பிரித்தானியா வரவேற்பு

மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வு செயல்முறையுடன் இலங்கையின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டை பிரித்தானியா வரவேற்றுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வில் இலங்கைக்கான உலகளாவிய காலமுறை மீளாய்வுக்கான அறிக்கையை வெளியிட்டு பிரித்தானியா இதனை தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கில் அரசாங்கத் திணைக்களங்களால் நில அபகரிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பான கவலைகள் தொடர்பான தனது பரிந்துரைக்கு இலங்கையின் ஆதரவையும் பிரித்தானியா வரவேற்றுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை பிரித்தானியா ஏற்றுகொண்டது.

அனைத்து சமூகங்களுக்கும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்தும் மற்றும் ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் முக்கியத்துவத்தையும் பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நீதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கும் இலங்கையுடன் ஆக்கபூர்வமாகச் செயற்படுவதாகவும் பிரித்தானியா மேலும் தெரிவித்துள்ளது.

ஐ.நா தாமதிக்காமல் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் – வேல்முருகன்

கொக்குதொடுவாயில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐநாவும்  உலக நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்  உலக நாடுகளை ஒன்றுதிரட்ட மத்திய அரசாங்கத்திற்கு தமிழக அரசாங்கம் போதிய அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழீழத்தில் 2008-2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழர்களைச் சிங்கள படை கொன்று குவித்தது. குறிப்பாக, சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள்.

உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல், கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர்.

வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (16, 17.05.2009),  உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர்.

இத்துயரத்தை எண்ணி கலங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்த ஐ.நா முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், ஐ.நாவும் முன் வரவில்லை; வழக்கம் போல் இந்திய ஒன்றியும் கவலைக்கொள்ளவில்லை. ஏனென்றால், செத்தவர்கள் தமிழர்கள்; காணாமல் போனவர்கள் தமிழர்கள்.

இந்நிலையில், முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக குழியொன்று தோண்டப்பட்ட போது, கொத்து கொத்தாக பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’  தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதி என்பது, 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இறுதி போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமயத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை  ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

இச்சூழலில்,  முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்த வெறி அம்பலப்பட்டுள்ளது.

எனவே, இனியாவது தாமதிக்காமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நாவும், உலக நாடுகளும் முன் வர வேண்டும். உலக நாடுகளை திரட்ட  ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இது ஒருபுறம் இருக்க, அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும், உலகத் தமிழர்கள், ஈழம் தனி நாடாவதற்கான  புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது.

ஆயுதக் குழுப்போராட்டம் என்பது மக்களை ஈர்க்காது; ஈழம் தனி நாடாவதற்கான கோரிக்கையை எழுப்பும், இலட்சிய இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.

எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள்; எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு நாம் பறைசாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன்

இலங்கை சட்டத்தரணிகள் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் – சட்டத்தரணிகளுக்கான சர்வதேச அமைப்பு ஐ.நாவில் சுட்டிக்காட்டு

இலங்கையில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்கள், சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில் ஏற்படுத்தப்படும் இடையூறுகளை முடிவுக்குக்கொண்டுவருமாறும் வலியுறுத்தியுள்ளன.

ஜெனீவாவில் கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமர்வில், இலங்கை தொடர்பில் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்களான சட்டத்தரணிகளுக்கான சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிலையம் என்பன இணைந்து வாய்மொழிமூல அறிக்கையொன்றை வெளியிட்டன. இவ்வமைப்புக்களின் சார்பில் பேரவையில் உரையாற்றிய ஜுலியா ஸ்மக்மென் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:

ஐக்கிய நாடுகள் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் சட்டத்தரணிகள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கு ஏதுவான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துவதன் அவசியம் என்பவற்றுடன் தொடர்புபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பதனை நாம் வரவேற்கின்றோம்.

அதேபோன்று, சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு அமைவாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அதேவேளை, சுயாதீனமான சட்டத்தொழில்வாண்மையாளர் ஊடாக சட்டரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான இயலுமை என்பது சட்டத்தின் ஆட்சி மற்றும் செயற்திறனாக இயங்கும் நீதிப்பொறிமுறை ஆகியவற்றின் அடிப்படைக்கூறுகளாகும்.

அதன்படி, எவ்வித இடையூறுகளோ, அத்துமீறல்களோ, அடக்குமுறைகளோ அல்லது முறையற்ற தலையீடுகளோ இன்றி தமது தொழில்சார் கடமைகளை முன்னெடுப்பதற்கான இடைவெளி சட்டத்தரணிகளுக்கு இருக்கவேண்டும்.

இருப்பினும், இலங்கையைப் பொறுத்தமட்டில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். குறிப்பாக போராட்டக்காரர்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மையின உரிமைகள் போன்ற அரசியல் ரீதியில் உணர்திறன்வாய்ந்த வழக்குகளில் இயங்கும் சட்டத்தரணிகள் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர்.

அதேபோன்று, சட்டத்தரணி என்ற ரீதியில் தமது பணியை மேற்கொண்ட சட்டத்தரணிகள் அதனுடன் தொடர்புபட்ட வகையில் கைதுகளுக்கும் குற்றவியல் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் வலுகட்டாயமாகக் கைதுசெய்யப்பட்டமையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவரது வழக்கு விசாரணைகளின் சுயாதீனத்தன்மை குறித்து நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் உலகளாவிய காலாந்தர மீளாய்வுக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், தொடர் தாமதமின்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம்.

அதேபோன்று, சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களது தொழில்சார் நடவடிக்கைகளில் இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராக உரிய பாதுகாப்பை வழங்குமாறும் கோருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை இலங்கை அரசு வழங்க வேண்டும் – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு அமைவாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தை (26) முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளது.

அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

சித்திரவதைகளிலிருந்து விலக்கீடு பெறுதல் என்பது எந்தவொரு சூழ்நிலையிலும் மட்டுப்படுத்தப்படமுடியாத மனித உரிமையாகும்.

இருப்பினும் இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் உளவியல் மற்றும் உடலியல் ரீதியான சித்திரவதைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றன.

இந்த மிகமோசமான மனித உரிமை மீறலின் பாரதூரமான பின்விளைவுகளை சித்திரவதைக்கு உள்ளான தரப்பினர் மாத்திரமன்றி, அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நேரில் பார்த்த சாட்சியங்களும் அனுபவிக்கவேண்டியுள்ளது.

எனவே சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தில் (நேற்று முன்தினம்) மேற்குறிப்பிட்டவாறு பாதிக்கப்பட்ட தரப்பினர், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சாட்சியங்களுக்கு அவசியமான ஆதரவு அனைத்து வழிகளிலும் வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டுமென மீளவலியுறுத்துகின்றோம்.

நாம் எமது விசாரணை செயன்முறையின் ஊடாக எமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்கீழ் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நியாயத்தையும், இழப்பீட்டையும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

இருப்பினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுக்கு அப்பால், அவர்கள் முழுமையாக மீள்வதற்கு அவசியமான உளவியல் ஆலோசனை வழங்கல் மற்றும் புனர்வாழ்வளித்தல் என்பன அவசியமாகின்றன.

அதேவேளை ஒடுக்குமுறைகள் தொடர்பான அச்சம் மற்றும் கடந்தகாலங்களில் பதிவாகியுள்ள தண்டனைகளிலிருந்து விலக்கீடு பெறும் போக்கு என்பவற்றின் காரணமாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியங்களும் அநேக சந்தர்ப்பங்களில் நீதிக்கட்டமைப்பை அணுகுவதிலிருந்து விலகியிருக்கின்றனர்.

எனவே இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கடப்பாடுகளுக்கு அமைவாக எவ்வித ஒடுக்குமுறைகளுமின்றி பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு பூர்த்திசெய்யப்படுவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய மருத்துவ, சட்ட, சமூக மற்றும் உளவியல்சார் உதவிகளை வழங்குவதை முன்னிறுத்தி சமூக நலனோம்பு அமைப்புக்கள், விசேட நிபுணர்கள், தனிநபர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபாய ராஜபக்சவை இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறச்செய்வது என்பது சாத்தியமற்ற விடயம் – ஜஸ்மின் சூக்கா

இலங்கைஅரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பபாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ஜூரிஸ்ட் இணையத்தளத்திற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரதூரமான மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது ஜேவிபி காலத்தில் கோட்டாபய ராஜபக்ச மாத்தளைக்கு பொறுப்பாக காணப்பட்டகாலம் வரை நீள்கின்றது என்பதை மனித புதைகுழிகள் குறித்த புதிய அறிக்கை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

அன்று தொடக்கம் இன்றுவரை ஜேவிபி காலத்தில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களோ அல்லது யுத்தத்தின் இறுதியில் போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களோ பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ அல்லத யுத்தமுடிவில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ இந்த அரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதன் இருப்பிற்காகவும் ஆதரவிற்காகவும் கோட்டாபய ராஜபக்சவிற்கு கடமைப்பட்டிருப்பதே இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.