கச்சதீவு விவகாரம் ஏற்கனவே முடிந்து போன விடயம் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

கச்சதீவு சம்பந்தமாக பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்ற நிலையில், அந்த விவகாரம் இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவடைந்த கச்சதீவு விடயம் சம்பந்தமாக தற்போது எவ்விதமான உரையாடல்களும் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்குச் சொந்தமாக கச்சதீவு தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த கச்சதீவானது 1974இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகும்.

இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி கச்சதீவு மீட்புக் கோசத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அத்துடன், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்ற கழகமும் தான் கச்சதீவினை இலங்கைக்கு தாரைவார்த்தது என்பதையும் வெளிப்படுத்தி வருகிறது.

இவ்வாறான நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்நாட்டில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இத்தகையதொரு சூழல் தான் கச்சதீவு விடயம் இந்திய அரசியல் கட்சிகளால் சீர்தூக்கப்பட்டுள்ளது. ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் இந்தியா இந்த விடயம் சம்பந்தமாக எம்முடன் உத்தியோகபூர்வமாக இன்னமும் உரையாடவில்லை. எனினும், அயல்நாடு என்ற வகையில் நாம் குறித்த விடயம் சம்பந்தமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம்.

உண்மையில் கச்சதீவு 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலமாகும். ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகிவிட்டது. இவ்வாறான நிலையில், தற்போது அதனைப் மீளப்பெறுமாறு வலியுறுத்துவதானது யதார்த்ததுக்கு புறம்பானதாகும். அதுமட்டுமன்றி, தமிழகத்தில் காணப்படுகின்ற உள்ளக அரசியல் நிலைமைகளே இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுவதற்கு காரணமாகின்றது.

எனவே, பிறிதொரு நாட்டின் உள்ளக அரசியல் விடயங்கள் சம்பந்தமாக தலையீடு செய்ய முடியாது. அதுவொரு முடிந்துபோன விடயமாகும் என்றார்.

அனலைதீவில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு

யாழ்.அனலைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு இன்றையதினம்(04) இடம்பெற்றது.

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் அனலைதீவில் அமைக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான காற்றாலை அமையவுள்ள அனலைதீவு தெற்கு பகுதியில் இந்திய நிறுவன மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் “பூமி பூஜை” ஆரம்ப நிகழ்வு இன்று காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

சாணக்கியமற்ற ஈழத் தமிழர் அரசியல் – யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் ரெலோவின் 11வது தேசிய மகாநாடு இடம்பெற்றது. அதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான, செந்தில் தொண்டமானும் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்வில் பேசிய தொண்டமான் குறிப்பிட்ட விடயமொன்று என்னை கவர்ந்தது. அதாவது, போராட்டங்கள் உச்சத்தில் இருக்கின்ற போது நாங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் கேட்பார்கள். அதற்கு எங்களின் ஜயா சௌமியமூர்த்தி தொண்டமான் கூறுவார் – நாங்கள் தோசை சுடுகின்றோம். தோசைக்கல் எங்களுடையதுதான் – அடுப்பும் எங்களுடையதுதான், அடுப்பை எரிக்க பயன்படும் நெருப்பும் எங்களுடையதுதான் (எரிவாயு) வீடும் எங்களுடையதுதான். அதற்காக எங்களுடைய வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு, ஆறுதலாக வந்து தோசையை பார்த்தால் தோசை இருக்குமா?
அப்படித்தான் போராட்டங்களும், போராட்டத்தில் உச்சத்தில் இருக்கின்ற போதே, சிலதை விட்டுக்கொடுத்து எடுக்கக் கூடியவற்றை, எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் நாம் விடயங்களை சாதிக்க முடியாமல் போகும். ஏனெனில் போராட்டத்தின் வேகம் எப்போதும் ஒரேமாதிரியாக இருக்காது. தங்கள் ஜயா தங்களுக்கு கற்றுத்தந்த சாணக்கியத்தினால்தான், நாங்கள் இன்று இந்த நிலையில் இருக்கின்றோம் என்று தொண்டமான் கூறுகின்ற போது, எங்களுடைய மூத்த தலைவர்கள் என்போர் எங்களுக்கு எவ்வாறான சாணக்கியத்தை கற்றுத் தந்திருக்கின்றனர் என்னும் கேள்வியே என்னுக்குள் எழுந்தது.

எங்கள் ஜயாக்களும், எங்கள் அண்ணன்களும் தங்களின் அடுத்த தலைமுறைக்கு எவ்வாறான சாணக்கியத்தை கற்றுத்தந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்? வரலாறு முழுவதும் முன்னோடிகள் விட்டுச் செல்கின்ற வழித்தடங்களிலிருந்துதான், அடுத்த தலைமுறை தனக்கான எதிர்காலத்தை ஆக்கிக்கொள்கின்றது. ஆனால் தமிழ் மக்களின் நிலையோ சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகவே தொடர்கின்றது. இதற்கு என்ன காரணம்? ஒரு வலுவான அரசியல் அடித்தளத்தை தமிழர்களின் மூத்த தலைமுறை விட்டுச் செல்லவில்லை.

இன்று தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமோ, பிச்சை வேண்டாம் ஜயா – நாயை பிடியுங்கள் என்னும் நிலைமையை வந்தடைந்திருக்கின்றது. இதற்காக, நாம் எவரையாவது, குற்றம்சாட்ட வேண்டும் என்றால், நமது மூத்த தலைமுறை முழுவதையும் குற்றவாளிக் கூண்டில், நிறுத்துவதை தவிர வேறுவழியிருக்காது. ராஜதந்திரம் பற்றி அன்ரன் பாலசிங்கத்தின் ஒரு கூற்றை கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறியது நினைவுண்டு. அதாவது, ராஜதந்திரம் என்பது தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் செல்வதல்ல என்பாராம். ஆனால் இன்று தமிழரின் அரசியல் நிலையோ தொடங்கிய இடத்தில் கூட ஆரம்பிக்க முடியாத நிலையில் அல்லவா இருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், ராஜதந்திரத்தின் அரிச்சுவடியைக் கூட தமிழ் அரசியல் சமூகம், அறியவில்லை என்னும் முடிவுக்கல்லவா நாம் வரவேண்டியிருக்கின்றது.

நான் முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்ட விடயத்தை இந்த இடத்தில் நினைவுகொள்வது பொருத்தமென்று எண்ணுகின்றேன். அதாவது, போராட்டங்கள் பிழையில்லை ஆனால் நாங்கள் ஆரம்பிக்கும் போராட்டங்களை எப்போது முடிக்க வேண்டுமென்று எங்களுக்குத் தெரிய வேண்டும் – அவ்வாறில்லாது, நாங்கள் ஆரம்பித்த போரட்டத்தை இன்னொருவர் முடிப்பாரானால், அப்போது எங்களுக்கு சர்வ நாசமே மிஞ்சும். இந்த பின்புலத்தில் நோக்கினால் நமது போராட்டத்தை திருப்பிப்பார்த்தால் நமது கையறு நிலையை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் இவ்வாறான அனுபவங்களுக்கு பின்னர் கூட நாங்கள் அரசியல் யதார்த்தங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதுதான் கவலையானது. நாங்கள் உயர்த்திப் பிடிக்கும் சுலோகங்கள் மூலம் மக்களை எந்தத் திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சி;க்கின்றோம்? இந்தக் கேள்விக்கான பதில் இல்லாமலேயே, நாம் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். கப்பல்கள் வருகின்றன, வெளிநாடு செல்ல விரும்புவோர் அனைவரும் ஏறலாம் என்றால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எவருமே இருக்க மாட்டார்கள். இதுதான் இன்றைய நிலைமை. மக்களுக்கு நம்பிக்கையை வழங்க முடியாத அரசியல் தலைமைகள், வெறும் சுலோகங்களை உயர்த்துவதில் என்ன பொருளுண்டு?

ஓரு சிறிய இனத்தால் ஆயுத போராட்டத்தில் அதிக காலத்தை செலவிட முடியாதென்று, அன்றைய சூழலிலேயே அரசறியவில் அறிஞர் மு.திருநாவுக்கரசு போன்றவர்கள் கூறியிருக்கின்றனர். எனது தேடலில், உண்மையில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தோடு ஆயுதப் போராட்டம் முடிவுற்றுவிட்டது. இந்த உண்மையை விளங்கிக் கொள்வதற்காக நாங்கள் கொடுத்த விலையோ கணக்கிலடங்காது. உண்மையில் அன்றே இந்த உண்மையை விளங்கிக் கொண்டிருந்தால், நாங்கள் முள்ளிவாய்க்காலை சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காது. இது ஒரு வராலாற்றுப் படிப்பினை.
அமெரிக்க தத்துவஞானியான, ஜோர்ஜ் சந்தயாணாவின் கூற்று ஒன்றுண்டு. அதாவது, வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்தத் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர். இது க.வே.பாலகுமாரனின் மொழிபெயர்ப்பு. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக அறியப்பட்ட க.வே.பாலகுமாரன் தனது கட்டுரையொன்றில் இந்தக் கூற்றை பயன்படுத்தியிருப்பார். ஆனால் அவர் இந்தக் கூற்றை சிங்களவர்களை நோக்கியே பயன்படுத்தியிருப்பார். சிங்களவர்கள் வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்னும் தனது பார்வையை நிறுவுவதற்காகவே, அவர் இந்தக் கூற்றை பயன்படுத்தியிருப்பார். ஆனால் இந்தக் கூற்று இப்போது யாருக்குப் பொருத்தமானது என்பதை வரலாறு நிரூபித்துவிட்டதல்லவா!
இறுதி யுத்தத்தின் போதான நிலைமைகளை பாவத்தின் சம்பளம் என்று பாலகுமாரன் வர்ணித்த கதையுமுண்டு. ஒரு வேளை, அவர் உண்மைகளை உணர முற்பட்டிருக்கலாம். இதே போன்றுதான், அனைத்து விடயங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்த அன்ரன் பாலசிங்கம், அனைத்தும் கைமீறிப் போய்விட்டது என்பதை உணர்ந்தே, இந்தியாவை நோக்கிச் சென்றார். இந்திய படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதியமை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ராஜீவ்காந்தி படுகொலை ஆகியவற்றுக்காக இந்திய அரசாங்கத்திடமும், இந்திய மக்களிடம் வருத்தம் தெரிவித்ததுடன், கடந்தகாலத்தை பின்னுக்குவைத்து, பெருந்தன்மையுடன் தலையீடு செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்திருந்தார். ஆனால் இன்றோ இவற்றிலிருந்து எதனையுமே கற்றுக்கொள்ளாத ஒரு குழுவினரோ, தொடர்ந்தும் அரசியல் விடலைகளாகவே தங்களை காண்பித்துக் கொள்கின்றனர்.

ஒரு வேளை அவர்கள் உண்மையிலேயே விடலைகளாகவே இருக்கலாம் . அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அவர்கள் அறியாமலும் இருக்கலாம் ஆனால் அவர்களை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுமல்லவா, அனைத்துக்கும் பின்னால் இழுபட்டுச் செல்லுபவர்களாக இருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற சாந்தனுக்கான அஞ்சலி நிகழ்வும் அதன் போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களும் இதற்கு சிறந்த உதாரணமாகும். நாங்கள் எந்தளவிற்கு வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள முடியாத இனமாக இருக்கின்றோம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
கடந்த பதின்நான்கு வருடங்கள் என்னவெல்லாம் பேசப்பட்டது. சற்று அனைத்தையும் திருப்பிப் பாருங்கள். சர்வதேச அழுத்தங்கள் இலங்கையின் குரல்வளையை நெருக்கப் போகின்றது, இனி அவர்கள் தப்ப முடியாது என்றெல்லாம் பேசப்பட்டது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு சென்று வந்த பின்னர். அமெரிக்கா விரைவில் கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளது என்றவாறு கதைகள் புனையப்பட்டன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலும் ஏராளமாக பேசப்பட்டது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாருக்கு கடிதம் எழுதுவது தொடர்பில் சண்டைகள் இடம்பெற்றன. எதனை எவ்வாறு உள்ளடக்குவது என்று தங்களுக்குள் மோதிக் கொண்டன கட்சிகள். மக்களோ, அனைத்தையும் சாதாரணமாக கடந்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் என்ன நடந்தது? சொல்லிக் கொள்ளுமளவிற்கு ஏதாவது நடந்ததா? ஆனால் பதின்நான்கு வருடங்கள் சென்றுவிட்டன.

2012இல் அமெரிக்க அனுசரணையில் இலங்கையின் மீதான பிரேரணை கொண்டுவரைப்பட்டது. இந்தக் காலத்தில் இந்தியா என்றொரு பிராந்திய சக்தி இருப்பதையே சம்பந்தனும் அவரது தலைமையில் இயங்கிய கூட்டமைப்பும் மறந்திருந்தது. ஆனால் ரெலோவின் முயற்சியில் 2022இல், இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமந்திரன் அதற்கு எதிரான கருத்துக்களையே பொது வெளிகளில் முன்வைத்தார். அவருக்கு அந்த முயற்சியில் ஆர்வமில்லை என்றே தெரிந்தது. முயற்சியில் ஆர்வமில்லையா அல்லது இந்தியாவை நோக்கி மீண்டும் செல்வதை அவர் விரும்பவில்லையா? ஒரு வேளை மேற்குலக அழுத்தங்கள் தொடர்பில் அதிகம் பேசியதால், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமலும் இருந்திருக்கலாம். பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர், ஆறுகட்சிகளின் தலைவர்களது கையெழுத்துடன் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. உண்மையில் பத்துவருட கால, மேற்குலகம் நோக்கிய தமிழர் அரசியல் நகர்வுகளின் தோல்விதான், இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்னும் நிலைமையை உருவாக்கியது. 2006இல் பாலசிங்கம் எவ்வாறு வேறு வழிகள் எதுவுமின்றி, இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்று சரியாக சிந்தித்தாரோ, அவ்வாறுதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் சிந்தித்தன. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு தலைமை தாங்கியிருந்தார்.

இந்தியா இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு நகர்விலும் இதுவரையில் தமிழர்களால் ஒரு படி கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இதுதான் நமது இதுவரையான அரசியல் வரலாறு சொல்லும் உண்மை. இந்த உண்மையை புறம்தள்ளிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் பின்நோக்கியே சென்றிருக்கின்றோம். இனியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் செயற்பட்டால் தொடர்ந்தும் இப்படியே ஆதங்கப்பட்டுக் கொண்டு, அவ்வப்போது, சில எதிர்ப்புக்களை காண்பித்துக் கொண்டு, எங்களின் நாட்களை செலவிட்டுக் கொள்வதாகவே எங்கள் அரசியல் மிஞ்சும். காலப்போக்கில் தமிழ் தேசிய அரசியல் என்பது, வெறுமனே, யாழ் குடாநாட்டு அரசியலாகவே சுருங்கிப் போகும்.

நன்றி – தினக்குரல் கட்டுரை

வடமாகாண பிரதம செயலாளர் இளங்கோவன் – இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி சந்திப்பு

வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களுக்கும், யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று மாலை யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய தூதர அலுவலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் வட மாகாணத்தில் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச் சூழலை மையமாகக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகள், திறன் மேம்பாடு மற்றும் சமூக ஈடுபாடு பற்றியும் இந்திய அரசாங்கத்தின் உதவி யுடன் கல்விக்காக மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இதில் யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத் தூதுவர் தலைமை அதிகாரி பாஸ்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறினர் முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பின் விடுவிக்கப்பட்ட 3 பேரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் குடும்ப உறுப்பினர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இந்திய-இலங்கை வர்த்தக உறவினைப் பலப்படுத்த வேண்டும்! – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய – இலங்கை வர்த்தக உறவினைப் பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்தியாவும் இலங்கையும் இணைந்து வெளியிட்டுள்ள தொலைநோக்கு அறிக்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் இலங்கை – இந்திய சமூகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையை நினைவுகூரும் வகையில் விசேட நினைவுச் சின்னமொன்றும், இந்திய – இலங்கை உறவுகளில் அண்மையில் இடம்பெற்ற விசேட தருணங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் இந்திய தூதரக அதிகாரிகள் ஆளுநருடன் சந்திப்பு

வட மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வட மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இயற்கை வளங்களை பயன்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ளல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்துவாழ விரும்புகிறோம். எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், குமரேஷ் பாபு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், முருகனின் நோ்காணலுக்காக புதன்கிழமை அனுமதி பெறப்பட்டுள்ளது.

முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா். எனவே, புதன்கிழமை அவா்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனா் என தெரிவித்தாா்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடா்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

100 மில்லியன் டொலர் இந்திய கடன் திட்டத்தில் சூரிய மின் உற்பத்தி திட்டம் – அமைச்சர் காஞ்சன

இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் சூரிய களத்தின் ஊடான மின்உற்பத்தி திட்டம் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இம்மாதம் மேற்கொள்ளப்பட்ட விலை திருத்தத்திற்கமைய வீட்டுப்பாவனை உள்ளிட்ட அன்றாட தேவைகளுக்கான கட்டணம் 23.4 சதவீதத்தினாலும், தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும், பொது சேவைகளுக்கான கட்டணம் 22.3 சதவீதத்தினாலும், மத வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் 32.6 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவற்றுக்கான கட்டண அதிகரிப்பு 12 – 18 சதவீதமாகவே காணப்பட்டது. எனவே அதிகரிக்கப்பட்டதை விட அதிகமாகவே கட்டணக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது ஓமல்பே சோபித தேரர் போன்றோர் கட்டணத்தை செலுத்தாமல் இருக்குமாறு கூறியதோடு, தாம் கட்டணத்தை செலுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டனர். ஆனால் பொது மக்கள் அவ்வாறு கட்டணம் செலுத்துவதை புறக்கணிக்கவில்லை. அதற்கு நன்றி கூறுகின்றோம்.

எரிபொருள், நிலக்கரி, நீர் மின் உற்பத்திகளுக்கு அப்பால் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மின் உற்பத்தியிலும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், பொலிஸ், இராணுவ முகாம்கள் என்பவற்றில் சூரிய களத்தின் ஊடாக 9000 மெகாவோல்ட் மின் உற்பத்தி திட்டத்தை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதே போன்று சூரிய மற்றும் காற்றாலை ஊடான 10 மின் உற்பத்தி திட்டங்களுக்கான விலைமனுக்கள் எதிர்வரும் மாதங்களில் கோரப்படவுள்ளன. மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான விலைமனு கோரல் அறிவிப்புக்கள் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளதைப் போன்று மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

இலங்கையின் தேவைகளுக்கேற்ப நாம் உதவிகளை வழங்கத்தயார் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கையின் தேவைகளுக்கேற்ப நாம் உதவிகளை வழங்கத்தயார் எனவும் எட்கா ஒப்பந்தம் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் தருமெனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

அத்துடன் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை பத்திரிகை கழகம் கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை (5) ஏற்பாடு செய்த “இந்திய கதை : சீர்திருத்தம் | செயல்திறன் | மாற்றம்” என்ற தலைப்பிலான கேள்வி பதில் நிகழ்சியிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்துகொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

இந்தியாவைப் பொறுத்தவரையில் நகரம் மற்றும் கிராமங்களில் உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்திகளை நாம் வேகத்துடனும் சக்தியுடனும் முன்னெடுத்து வருகின்றோம். அதற்கு எமது பிரதமர் சிறந்த தலைமைத்துவத்தை வழங்குகின்றார்.

போக்குவரத்து, தொழில், 5 ஜி தொழில்நுட்பம், டிஜிட்டல் போன்றவற்றில் இந்தியா பல திட்டங்களை நகர மட்டத்திலும் கிராம மட்டத்திலும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்கு தலைமைத்துவம் முக்கிய பங்கை வகித்தது.

நீண்டகால நோக்கை முன்னிலைப்படுத்தி குறைகளை அடையாளம் கண்டு திட்டங்களை முன்னெடுத்தோம்.

குறிப்பாக டிஜிட்டல் அடையாள அட்டை, டிஜிட்டல் நிதியியல், பணப்பரிமாற்று டிஜிட்டல் அடையாள அட்டை ஆகிய திட்டங்களை கூறமுடியும்.

இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கவும் குறிப்பாக உட்கட்டமைப்புகளை முன்னெடுக்கவும் மிக முக்கிய பங்கு வகித்தது கல்வி வளர்ச்சியே.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பது மிகவும் முக்கியமானது. இதனால் இலங்கைக்கே பல்வேறு நன்மைகள் உள்ளன. எட்கா ஒப்பந்தத்தால் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் தருவதாக அமையும்.

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியை விட இலங்கையின் உள்நாட்டு மொத்த உற்பத்தி அதிகமாகும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் போக்குவரத்து, உள்நாட்டில் மாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் அதிவேக வீதி, ஏனைய உட்கட்டமைப்பு, மேம்பாலங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பம், வலுச் சக்தி ஆகியவற்றில் முன்னேற்றம் காணப்படுகின்றது.

தம்புள்ளை சீதாரக்கையில் இந்திய நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட பதப்படுத்தல் நிலையம் குறித்த செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கு இந்தியா உதவிகளை தொடர்ந்து வழங்கும்.

விவசாயம், உணவுப் பாதுகாப்பு, மீன்பிடி போன்றவற்றுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி செய்துகொண்டிருக்கும். உணவுப் பாதுகாப்புப் பிரச்சினை என்பது உலகில் அனைத்து நாடுகளிலும் காணப்படுகின்ற போதிலும் அயலவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா உதவிகளை வழங்கும்.

இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையென்பது பல தசாப்தங்களாக காணப்படும் பிரச்சினையாகும். இது இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து இடம்பெறும் கலந்துரையாடல்களின் மூலம் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இலங்கையில் வாழ்வாதார பிரச்சினைகளை குறைக்க முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்தில் பாரிய மாற்றங்களை செய்வது கடினமானது. என்றாலும் காங்கேசன்துறை முதல் மாத்தறை வரையிலான ரயில் போக்குவரத்துக்கு இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானதாக காணப்பட்டது.

மத்தல திட்டத்தில் தாமதமேற்பட்டுள்ளதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். சில செயற்திட்டங்களை நாம் அமுல்படுத்துவதற்கு காலம் தேவைப்படுகின்றது. இவ்வாறு இந்திய முன்வைத்த சில திட்டங்களை இலங்கை மறுத்திருந்தது. குறிப்பாக சூரிய சக்தி மின்திட்டம், நிலக்கரி மின்திட்டம் போன்றவற்றை குறிப்பிடலாம். நாம் தற்போது பல செயற்திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க முடிகின்றது.

இந்தியாவில் பொதுத்துறைகளை தனியார் மயப்படுத்தியுள்ளோம். இவ்வாறான நடிவடிக்கையே பொருளாதாரத்தில் நாம் முன்னோக்கிச் செல்வதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. தலைமைத்துவம் என்பது இவ்வாறான மாற்றத்தில் பங்கு வகிக்கின்றது. “வேகமும் சக்தியும்” என்ற நோக்கத்தின் அடிப்படையில் நாம் சில திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

சில திட்டங்களை தற்போது நடைமுறைப்படுத்தும் போது பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதை தீர்ப்பது குறித்து எமது நாட்டின் பிரதமர் துறைசார்ந்தவர்களுடன் சேர்ந்து பேசுகின்றார்.

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் நாகபட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இம் மாத இறுதிக்குள் இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும். அத்துடன் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை கழகம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற “இந்திய கதை : சீர்திருத்தம் | செயல்திறன் | மாற்றம்” என்ற தலைப்பிலான கேள்வி பதில் நிகழ்சியை இலங்கை பத்திரிகை கழகத்தின் தலைவர் குமார் நடேசன் நெறிப்படுத்தினார்.

Posted in Uncategorized