இலங்கை தமிழ் அகதிகளுக்கு வெளிநாட்டில் தஞ்சம்: ஐ.நா.வுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தர ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “கனடா நாட்டில் தஞ்சம் புகும் நோக்குடன் 306 ஈழத்தமிழ் அகதிகள் பயணித்த கப்பல் பிலிப்பைன்ஸ் அருகில் புயலில் சிக்கித் தவித்த நிலையில், அவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் மீட்டு வியட்நாமுக்கு அனுப்பி வைத்திருப்பது நிம்மதியளிக்கிறது. சிங்கப்பூர் அரசு காலத்தினால் செய்த உதவி பாராட்டத்தக்கது.

முதலில் போராலும், பின்னர் பொருளாதார நெருக்கடியாலும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வாழ முடியாமல், பிற நாடுகளில் தஞ்சமடைய தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு அகதிகள் தகுதியும், கண்ணியமான வாழ்வுரிமையும் மறுக்கப்படுகிறது.

அதனால் கனடா, இங்கிலாந்துக்கு சொந்தமான டியாகோ கார்சியா தீவு, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் தேடி பாதுகாப்பற்ற முறையில் கப்பல் பயணம் மேற்கொள்ளும் ஈழத்தமிழ் அகதிகள் பல தருணங்களில் விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர்; இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கப்பல் விபத்திலிருந்து மீட்கப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் பெற்றுத் தரவும், இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்த நாட்டின் ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவும் ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்

மூழ்கிக் கொண்டிருந்த இலங்கை அகதிகள் கப்பல் மீட்பு

சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக இன்று காலையில் அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை இன்று தெரிவித்துள்ளது.

படகிலிருந்த இலங்கைப் பிரஜையொருவர் கடற்படையை இன்று தொடர்பு கொண்டதாகவும், தாங்கள் ஆபத்திலிருப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்த கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்

இந்நிலையில், கொழும்பிலுள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமானது சிங்கப்பூர், வியட்நாம், பிலிப்பைன்ஸிடமிருந்து உதவியைக் கோரியிருந்தது.

அந்தவகையில், படகிலிருந்தவர்கள் மீட்கப்பட்டதாகவும், வியட்நாம் நோக்கிச் செல்வதாகவும் இலங்கைக்கு சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், படகிலிருந்த இலங்கையரொருவரின் பிரசன்னத்தை மாத்திரமே உத்தியோகபூர்வமாக கடற்படை அறிந்துள்ளதாகத் தெரிவித்த டி சில்வா, ஏனையோரின் அடையாளங்கள், அவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் உறுதிப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார்.

இலங்கை அகதிகள் 306 பேருடன் நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல்

306 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ் மற்றும் வியாட்நாமுக்கு இடையே தத்தளித்துக் கொண்டிருப்பதாக குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இக் குரல் பதிவில் கப்பலில் தத்தளித்து கொண்டிருக்கும் 306 இலங்கையர்களையும் காப்பாற்றுமாறும் ஐ.நாவிடம் இதனை தெரியப்படுத்தும் படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் சர்வதேச செய்தியாளர், பிரான்சிஸ் கரிசன் Frances Harrison மேற்படித் தகவலை உறுதிப்படுத்த முடியுமா என தற்போது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

306 இலங்கை தமிழர்களுடன் (30 குழந்தைகள்) கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடற்கரையில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ் சரிசெய்வது அவசியம் என்று பயணிக்கும் ஒருவரின் குரல் பதிவு வெளியாகியுள்ளது.