ரோஹாங்கிய அகதிகள் யாழ். சிறையிலிருந்து மீரிகான தடுப்பு முகாமிற்கு மாற்றம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து ரோஹிங்கிய அகதிகளை மீரிகான தடுப்பு முகாமுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி வியாழக்கிழமை (டிச.22) காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்த 104 ரோஹிங்கிய அகதிகள் மூன்று பேருந்துகள் மூலம் மீரிகான தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மாலை வேளையில் மீரிகான தடுப்பு முகாமை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லீம்கள் பங்களாதேசில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம்  இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக  பயணித்தபோதே யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17ஆம் திகதி  இலங்கை  கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு  டிசம்பர் 18ஆம் திகதி கடற்படையினரின் படகு மூலம்  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

டிசம்பர் 19ஆம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான்  காயத்திரி சைலவன், 104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார். அத்துடன், நாடொன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை  2023 ஜனவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே டிசம்பர் 19ஆம் திகதி இரவு 8 மணியளவில் தற்காலிகமாக 105 பேரும்  யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டு 104 பேரை மீரிகானவுக்கு அனுப்ப இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது

ரோஹிங்கியா அகதிகளை காப்பாற்றிய இலங்கையர்களுக்கு ஐநா அமைப்பு பாராட்டு

ரோஹிங்கியா அகதிகளின் படகு காப்பாற்றப்பட்டதை அகதிகளிற்கான ஐநா அமைப்பான யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது.

வார இறுதியில் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த ரோஹிங்கியாஅகதிகள் படகை காப்பாற்றி அதிலிருந்தவர்களை கரைக்கு கொண்டு செல்வதற்கு இலங்கையின் உள்ளூர் மீனவர்களும் கடற்படையினரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை யுஎன்எச்சீஆர் வரவேற்றுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் பெருமளவானவர்களுடன் படகு தத்தளித்துக்கொண்டிருப்பதை மீனவர்கள் பார்த்தனர், காப்பாற்றப்பட்ட அவர்களை ஞாயிற்றுக்கிழமை இலங்கை கடற்படை துரிதமாக கரைக்கு கொண்டு சென்றது.

இலங்கை கடற்படைக்கும் உயிர்களை காப்பாற்றுவதற்காக செயற்பட்ட அனைவருக்கும் நாங்கள் நன்றி உடையவர்களாக உள்ளோம் என ஆசியா பசுபிக்கிற்கான யுஎன்எச்சீர்ஆரின் இயக்குநர் இந்திக ரத்வத்த தெரிவித்துள்ளார்.

இது கடலில் உயிர் இழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பின்பற்றவேண்டிய மனிதாபிமானத்திற்கான உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் உடனடி தேவைகள் விடயத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு யுஎன்எச்சீ ஆர் அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது.

படகுகளில் ஆபத்தில் சிக்குண்டுள்ளவர்கள் கடலில் மிதப்பவர்களை காப்பாற்றுவதற்கு அனைத்து பொறுப்புணர்வு மிக்க நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அகதிகளிற்கான ஐநாவின் அமைப்பு சர்வதேச கடப்பாடுகள் மற்றும் மனிதாபிமான பாரம்பரியங்களின் அடிப்படையில் அவர்கள் தரைஇறங்குவதற்கும் அனுமதிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளிற்கு அருகில் வங்களா விரிகுடாவில் இன்னுமொரு படகு தத்தளிக்கின்றது என்ற தகவல் குறித்து ஐநா அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

வடக்குக் கடலில் தத்தளித்த படகு 130 மியன்மார் அகதிகளுடன் மீட்பு

மியன்மார் நாட்டை சேர்ந்த ரோகிங்கியர்கள் எனக் கருதப்படும் சுமார் 130 பேர் வரையில் பயணித்த படகு ஒன்று வட இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண் டிருந்த போது இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இருந்து சுமார் 30 நோட்டிக் கல் தொலைவில் அதிகளவானோரை ஏற்றிய படகு ஒன்று நிற்பதனை அவதானித்த மீனவர் ஒருவர் படகை அண்மித்து அவதானித்த சமயம் படகில் இருந்தவர்கள் சிறுவர்களை தூக்கி காண்பித்தமையினால் படகு ஆபத்தில் நிற்பதனால் உதவி கோருகின்றனர் என்பதனை மீனவர் ஊகித்துக்கொண்டார்.

இதனையடுத்து கரை திரும்பிய மீனவர் வழங்கிய தகவலின் பெயரிலேயே சம்பவ இடத்திற்கு கடற்படையினர் சென்றுள்ளனர்.

கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட படகை அவதானித்து படகை மீட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

இதனிடையே மீட்கப்பட்ட படகு சேதம் காரணமாக விரைந்து பயணிக்க முடியாத காரணத்தாலும் வெளிநாட்டவர்கள் என்பதனால் இதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதங்களினாலும் நேற்றிரவு படகை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவியதாக முதலில் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

வியட்நாமில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை!

கனடாவுக்கு செல்லும் நோக்கில் தென் சீனக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது மீட்கப்பட்டு வியட்நாமில் அகதிகளாக தங்கவைத்திருந்த ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்திரலிங்கம் கிரிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த 303 பேர் கடந்த 8ஆம் திகதி பிலிப்பைன்ஸ்க்கும் வியட்நாமிற்கும் இடையே உள்ள கடலில் கப்பலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது யப்பான் மற்றும் சிங்கப்பூர் கடற்படையினர் காப்பாற்றி வியட்நாம் கொண்டவரப்பட்டு அவர்கள் அங்கு தற்காலிக அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கைக்கு செல்ல முடியாது என கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரு இலங்கை அகதிகள் தற்கொலை செய்ய முயற்சித்திருந்த நிலையில் அவர்களை காப்பாற்றி அந்த நாட்டிலுள்ள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சையளிக்ப்பட்டு வந்தது.

இதனை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஒருவரே, இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் சடலம் தொடர்ந்தும் அந்த நாட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சடலத்தை மீள வழங்குவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் பாரிய தொகையொன்றை கோரி வருவதாகவும் வியட்நாமிலுள்ள இலங்கை அகதியொருவர் தெரிவித்தார்.

மேலும் 10 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் 10 பேர் இன்று (23) காலை அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில்  வவுனியா மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த  உதயசூரியன், அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள், வவுனியா மாவட்டம் புவரசம் குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மன்னார் மாவட்டம் கள்ளப்பட்டி பகுதியில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம்  பகுதியை இன்று காலை அடைந்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் முதல்  தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை  208 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் குறித்து சர்வதேச சட்டங்களே தீர்மானிக்கும் : விரும்பினால் அழைத்துவருவோம் : வெளிவிவகார அமைச்சர்

வியட்நாமில் உள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்.

அதேநேரம் குறித்த இலங்கையர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கனடா நோக்கி பயணிக்க முயற்சித்திருந்த நிலையில் மீண்டும் நாடுதிரும்ப விரும்பாதிருப்பார்களாயின் அவர்கள் தொடர்பில் வியநட்நாம் குடிவரவு குடியகல்வு சட்டங்களும் சர்வதேச புலம்பெயர்தல் சட்டங்களே தீர்மானிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சிங்கப்பூரில் இருந்து மீன்பிடிப் படகொன்றின் மூலம் சட்டவிரோதமாக கனடா செல்வதற்கு 303 இலங்கையர்கள் முயன்றிருந்த நிலையில் படகுக் கோளாறு காரணமாக தத்தளித்தவர்களை வியட்நாமிற்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் தம்மை நாட்டுக்கு மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் தம்மை ஐ.நா.பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sabry tells Parliament some home truths – The Island

இவ்வாறான நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் வீரகேசரியிடத்தில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஆபத்தான படகுப்பயணத்தில் பாதிக்கபட்டு வியட்நாமில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வியட்நாமில் உள்ள இலங்கைத் தூதுவர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக அவர்களுக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள் மற்றும் விமானச் சீட்டுக்களை வழங்கி மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாடுதிரும்ப மறுத்தால்?

எனினும் நாட்டில் காணப்படுகின்ற பொருளதார நெருக்கடிகளை மையப்படுத்தியே படகு மூலம் கனடாவுக்குச் செல்வதற்கு முயற்சிகளை குறித்த நபர்கள் மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் மீண்டும் தம்மை நாட்டுக்கு அழைத்து வருவதை மறுப்பார்காளாக இருந்தால் அதன் பின்னர் சதேசச் சட்டங்களும் வியநட்நாமின் குடிவரவு குடியகல்வுச் சட்டங்களும் தான் அவர்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும்.

குறிப்பாக ஐ.நா.வின் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் உள்ளிட்ட தரப்பினரே தீர்மானங்களை எடுக்கவுள்ளனர் என்றார்.

அகதிகளுக்கு பாதுகாப்பளியுங்கள்: அவுஸ்திரேலியாவில் பேரணி

இலங்கையிலிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேறிய ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து நாட்டு அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் சிட்னி நகரில் பேரணி நடத்தியிருக்கின்றனர்.

அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரும் அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க மறுக்கப்பட்டு வரும் பின்னணியில், கடந்த நவம்பர் 6ம் தேதி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நிரந்தர பாதுகாப்புக்காக காத்திருக்கும் தனது தாயின் நிலைக் குறித்து பேரணியில் விளக்கிய 19வயது குமரன், “படகில் 30 நாட்கள் பயணித்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தோம். உள்நாட்டுப் போரின் போது வெளியேறிய காரணங்கள் குறித்து எங்கள் அனைவரிடமும் கேட்கப்பட்டது. ஆனால் அது உள்நாட்டுப் போரல்ல, தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை. எங்களது தஞ்சக்கோரிக்கை விவகாரம் பரிசீலிக்கப்பட்ட வந்த அதே சமயம், நாங்கள் இரண்டு ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டோம். பின்னர் சமூகத்தடுப்பிற்குள் விடப்பட்டோம். மெல்பேர்னில் குடியமர அனுமதிக்கப்பட்ட நிலையில் நாங்கள் திடீரென வேறு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டோம். தடுப்பு முகாம் வாழ்க்கை கணிக்க முடியாதது. எப்போது வரை தடுப்பில் வைக்கப்படுவார்கள் என அகதிகளிடம் சொல்ல மாட்டார்கள். நிச்சயத்தன்மையற்ற ஒரு நடைமுறை அது,” என அவர் கூறியிருக்கிறார்.

நிரந்தர பாதுகாப்பு வழங்குவது மட்டுமே ஈழத்தமிழ் அகதிகளுக்கான ஒரே சாத்தியமான தீர்வு எனக் கூறுகிறார் தமிழ் அகதிகள் கவுன்சிலின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார்.

“அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும். அவுஸ்திரேலியாவின் இனவாத குடியேற்ற முறைக்குள் தனது நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த இவ்வாறான பேரணிகள் தொடர்ந்து நடைபெறுவது முக்கியம்,” எனக் கூறியிருக்கிறார் ரேணுகா இன்பகுமார்.

தஞ்சம் கோருவது குற்றம் ஆகாது, 10 ஆண்டுகளாக தடுத்து வைத்திருப்பது போதாதா? குடும்பம் மீண்டும் ஒன்றிணைதல் என்பது அடிப்படை உரிமை, மனநலப் பாதிப்பால் பல உயிர்கள் மாண்டுள்ளன போன்ற வாசகங்கள் பேரணி பதாகைகளில் இடம்பெற்றிருந்தன.

அகதிகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான பரப்புரையின் அங்கமாக வரும் நவம்பர் 29ம் தேதி அவுஸ்திரேலியாவின் கன்பரா நகரில் மற்றொரு பேரணியை தமிழ் அகதிகள் கவுன்சில் நடத்தியிருக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சுமார் 700க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் அவுஸ்திரேலியாவின் கடல் பகுதிகளில் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.

அத்துடன் படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை வழங்கும் செயலையும் அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.

வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாது -சீமான்

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிற்கு சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நாட்டைத் துறந்து அகதிலிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.

இனப்படுகொலை நாடான இலங்கையில் அந்நாட்டு ஆட்சியாளர்களின் தமிழர்கள் மீதான இனவெறி மிகுந்த தவறான ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்து வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாட்டு மக்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். சொந்த மண்ணில் வாழ வழியற்ற நிலையில் வேறுவழியின்றி அங்குள்ள தமிழ் மக்கள் இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஏதிலிகளாக அவ்வப்போது புலம்பெயர்ந்தும் வருகின்றனர்.

அப்படி நிம்மதியாக வாழ இந்தப் பூமிப் பந்தில் ஒரு இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன், ஊரையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஆழ்கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட தொப்புள்கொடி உறவுகளான 300க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் கனடா நாடு நோக்கிச் செல்லும் வழியில் கடந்த நவம்பர் 8 ஆம் நாளன்று புயலால் கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். விரைந்து செயல்பட்ட சிங்கப்பூர் அரசு மனிதநேய அடிப்படையில் தமிழர்களை மீட்டு, அருகிலிருந்த வியட்நாம் நாட்டில் ஒப்படைத்த நிலையில், தற்போது அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வியட்நாம் அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

வறுமையின் காரணமாக இருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு பெரும் பொருட்செலவில் நாட்டை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும், பொருளாதாரம் முற்றாகச் சீரழிந்துள்ள இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கி, வறுமையிலும், பசியிலும் வாடி சிறுக சிறுக அவர்கள் உயிரிழக்கவே வழிவகுக்கும்.

 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏகாதிபத்திய பேரரசுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தீரத்துடன் போராடி அடிமைத்தளையை அறுத்தெறிந்து, விடுதலையை வென்றெடுத்த புரட்சிகர வியட்நாமிய நாடு, கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஈழத்தாயக விடுதலைக்காகப் போராடி வரும் தமிழர்கள், அடிமைத்தன அடக்குமுறைகளால் அனுபவித்த துன்ப துயரங்களையும், மன வலிகளையும் எளிதில் உணரும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் முழுமையாக நம்புகின்றனர். எனவே ஈழத்தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவை உடனடியாக வியட்நாமிய அரசு கைவிட வேண்டுமென்று கோருகிறேன்.

வியட்நாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களும் தாங்கள் கனடாவுக்குச் செல்ல விரும்புவதாகவும், தங்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாதென்றும், ஐநாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உடனடியாக வியட்நாம் அரசுடன் பேசி, அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிடச் செய்வதோடு, அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்குத் தமது சொந்த பொறுப்பிலேயே பாதுகாப்பாக அனுப்பி வைப்பதோடு, வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்களில் 76 பேர் யாழை சேர்ந்தவர்கள்

சிங்கப்பூருக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 76 பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து படகில் பயணித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும் தற்போது வியட்நாமில் உள்ள வுங் தாவோ துறைமுகத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

Posted in Uncategorized

விபத்துக்குள்ளான கப்பலை மீட்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலளார் வைகோ  கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது.

கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள். எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்புகொண்டு, கடற்படை மீட்புக் கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பயணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த கப்பலையும் அதில் உள்ளவர்களையும்  சிங்கப்பூர் கடற்படை மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized