அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்க்க முடியும் – ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு

2023இல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எமக்கு எதிர்பார்க்க முடியும்.  நாட்டின் தற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதே பொருத்தமாகும் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமாகும்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சிறந்த காலமாகும்.

இது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இருக்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (டிச.07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

2023ஆம் ஆண்டு நடுப்பகுதியில் தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டி ஏற்படுகின்றது. தேர்தல்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் நடத்தினால் செலவுகளை குறைத்துக்கொள்ளலாம்.

அதாவது, ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற  தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்து முடியுமாக இருந்தால் நல்லது. இதன் மூலம் வீண் விரயங்களையும் குறைத்துக்கொள்ளலாம்.

அத்துடன் எந்த தேர்தலுக்கும் முகம்காெடுக்க ஐக்கிய தேசிய கட்சி தயார் நிலையிலேயே இருக்கின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு, தொகுதி அமைப்பாளர்களை தெரிவுசெய்யும் நேர்முகப்பரீட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது. அதிகமான இளைஞர்கள் இதில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே  ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் இருந்து வருகின்றது. எப்படி இருந்தாலும் 2023இல் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எமக்கு எதிர்பார்க்க முடியும். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதமாகும்போது ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

அதன் மூலம் நாட்டின் தலைவராக யாரை தெரிவு செய்துகொள்வது என்பதை மக்களுக்கு தீர்மானித்துக்கொள்ளலாம். மக்கள் தேர்தல் ஒன்றை கோருவதாகவே எதிர்க்கட்சி தெரிவித்து வருகின்றது.

அதனால் அடுத்த வருடம் தேர்தலுக்கு நாங்கள் செல்வோம். ஆனால் நாட்டில் இடம்பெறும் பிரதான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துமாறே நான் ஜனாதிபதிக்கு தெரிவித்தேன்.

என்றாலும் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதே தற்போதுள்ள நிலைமையில் சிறந்த தீமானம் என்றே நினைக்கின்றேன். ஏனெனில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி பதவி விலகினார். அதனால் மீண்டும் ஜனாதிபதி ஒருவரை தெரிவுசெய்துகொள்ள மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது.

எனவே ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வதே சிறந்தது. அடுத்த வருடம் நடுப்பகுதி அதற்கான சிறந்த காலமாகும் என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் கருவியாக பொதுஜன பெரமுன – பீரிஸ்

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு கருவியாக மாத்திரமே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காணப்படுகிறது.

பஷில் ராஜபக்ஷவைப் போன்று எம்மால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்திற்கு எதிராகவே நாம் வாக்களிப்போம் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள சுதந்திர மக்கள் காங்ரஸ் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சுதந்திர மக்கள் காங்கிரஸ் வரவு – செலவு திட்டத்திற்கு எதிராகவே வாக்களிக்கும். காரணம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வும் இதில் வழங்கப்படவில்லை.

கடும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டுள்ள போதிலும் கூட , அது தொடர்பில் கவனம் செலுத்தாமல் அடுத்த வருடமும் மின்சார கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளால் தொழிற்சாலைகள் மூடும் நிலையிலும் , ஆயிரக்கணக்கானோர் தொழிலை இழக்கும் நிலையிலும் உள்ளனர்.

ஆனால் இது தொடர்பில் அரசாங்கத்திற்கோ அல்லது பாராளுமன்றத்தில் மக்களால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற பொதுஜன பெரமுனவிற்கோ எவ்வித அக்கறையும் இல்லை.

தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஒரு கருவியாகவே உள்ளது.

அதற்கமைய இவ்விரு கட்சிகளுக்குமிடையில் காணப்படும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இரகசிய ஒப்பந்தத்தின் காரணமாகவே பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறெனில் அவர் ஐக்கிய தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதை ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் எம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. தேர்தலின் மூவலமே யார் கூறிய கருத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

ரவி கருணாநாயக்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக வாராந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக ரவி கருணாநாயகக இவ்வாறு நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பதவி விலகி ரவி கருணாநாயக்கவுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன. ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க, நல்லாட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது இலங்கை மத்திய வங்கியில் நடந்த பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை அடுத்து அவர் நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகினர். கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட்ட அவர் உட்பட கட்சியினர் அனைவரும் தோல்வியடைந்தனர்.