ஐ.நா பொதுச் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்டேரஸ்க்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெறும் காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் – 27’ மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, தேசிய சுற்றாடல் மற்றும் அது தொடர்பான அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் தெளிவுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான ‘கோப் 27’ மாநாடு எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாநாட்டில் பங்கேற்கும் அதேநேரம், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள காலநிலை மாற்றம் தொடர்பிலும் உரையாற்றவுள்ளார். இதேவேளை, அங்கு நடைபெறவுள்ள உலக உணவு பாதுகாப்பு பேரவை மற்றும் உலக தலைவர்களின் பேரவையிலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் சாசனத்தின் கீழ் இணங்கியுள்ளமைக்கு அமைய காலநிலை தொடர்பான உலகின் கூட்டு இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கோப்-27 இல் நாடுகள் ஒன்றிணைகின்றன.

கிளாஸ்கோவில் நடந்த கோப் – 26 மாநாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அதன் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டு, பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் தமக்குள்ள பொறுப்புகளை மேலும் வினைத்திறனுடன் நிறைவேற்றுவதற்காக இம்முறை உலக நாடுகள் கோப்-27 இல் ஒன்றுகூடி தீர்மானம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.