இந்திய-இலங்கை வர்த்தக உறவினைப் பலப்படுத்த வேண்டும்! – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய – இலங்கை வர்த்தக உறவினைப் பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இந்தியாவும் இலங்கையும் இணைந்து வெளியிட்டுள்ள தொலைநோக்கு அறிக்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் மற்றும் இந்தியாவின் 75 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் இலங்கை – இந்திய சமூகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டார்.

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வருகையை நினைவுகூரும் வகையில் விசேட நினைவுச் சின்னமொன்றும், இந்திய – இலங்கை உறவுகளில் அண்மையில் இடம்பெற்ற விசேட தருணங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ் அரசுக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியவை அழைப்பினை நிராகரித்தன

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கம் இடையில் நாளை ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த கலந்தரையாடலுக்காக எதிர்க் கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உரிய அழைப்பை ஏற்று அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரை இதில் பங்கேற்க வைக்க தீர்மானித்துள்ளது.

அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் , அவரின் பங்கேற்பு தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் அவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்களை நீக்கத் தீர்மானம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள வற் வரிக்கான பட்டியலில் இருந்து புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட மேலும் தெரிவு செய்யப்பட்ட பொருட்களை நீக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வெளிநாட்டு அரசமுறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும்.

2023ஆம் ஆண்டு தொடக்கம் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும். அத்துடன் நாட்டின் பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும். புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்களின் வற் வரி நீக்கப்படும். எனினும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணங்களை வழங்கமுடியாது. ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய்யுரைக்கிறார்கள்.மக்கள் மீது தேவையில்லாமல் வரிச் சுமைகளை அரசாங்கம் சுமத்துவதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

எமது நாட்டில் பல அரசாங்கங்கள் கையாண்ட தவறான பொருளாதார கொள்கை காரணமாகவே நாடு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில் அந்த சவாலை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லை. நான் தைரியமாக அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன்.
அப்போதைய சந்தர்ப்பத்தில் எனக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்ட அனைவரையும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பின் ஊடாக இந்த நிலைமையை மாற்றியமைத்தோம்.
அதன் பயனை முழுநாடும் இன்று அனுபவிக்கின்றது.குறைந்த வருமானம் பெறும் 24 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் பெறுமதி சேர் வரியை மேலும் குறைப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.
பாடசாலை உபகரணங்கள் சுகாதார உபகரணங்கள் மருந்து பொருட்களுக்கு பெறுமதி சேர் வரி விலக்களிக்கப்படும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மார்ச் முதல் வாரத்தில் ரணில் – பசில் சந்திப்பு; ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இறுதித் தீர்மானம்

உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி வேட்பாளரை தெரிவு செய்வதில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறனதொரு நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு பஷில் ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதம் (2023) அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். ஜனவரி மாதம் இறுதியில் நாடு திரும்புவதாக இருந்த போதிலும் இதுவரையில் பஷில் ராஜபக்ஷ நாட்டுக்கு வரவில்லை. இவ்வாறானதொரு நிலையில் இவ்வாரம் இறுதியில் அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல் வழங்கியது.

ஜனாதிபதி வேட்பாளரை மையப்படுத்தி ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமநிலைப்படுத்தவே பஷில் ராஜபக்ஷ அவசரமாக நாடு திரும்புவதாக அந்த தகவல்கள் மேலும் கூறியுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஒருதரப்பு முன்வைத்துள்ள நிலையில், மற்றுமொரு தரப்பு அதனை எதிர்த்து வருகிறது. இதனால் கட்சிக்குள் நாளுக்கு நாள் முரண்பாடுகளும் பிளவுகளும் தீவிரமடைந்து வருகின்றன.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோரை தொடர்ந்தும் தொலைப்பேசி ஊடாக தொடர்புகொண்டு நாட்டின் அரசியல் நிலைமைகளையும் கட்சியின் செயல்பாடுகளையும் பஷில் ராஜபக்ஷ கருத்தில் கொண்டிருந்தார்.

அதே போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிராமிய மட்டத்தில் உள்ள மக்கள் ஆதரவுகள் குறித்தும் பல்வேறு வகையில் கணிப்புகளை அவர் முன்னெடுத்திருந்தார். இதன் பிரகாரம், 20 வீதம் தொடக்கம் 25 வீதம் வரையிலான மக்கள் ஆதரவு கிராமிய மட்டத்தில் இன்னும் உள்ளதாக பஷில் ராஜபக்ஷவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் ஆதரவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் அரசியல் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதே பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனையாக உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின்போது பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இதன்போது பொதுஜன பெரமுன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்று அரசியல் கட்சியுடன் இணைந்து கட்சியின் சின்னத்தை புதுப்பித்துக்கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே பஷில் ராஜபக்ஷ இவ்வாரம் இறுதியில் நாடு திரும்புகிறார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பஷில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் மார்ச் 3ஆம் திகதி கலந்துரையாடலை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்கள் வேறுபட்டாலும் இந்த சந்திப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக்க வக்கும்புர நியமனம்

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக ஜனக்க வக்கும்புர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் இதற்கு முன்பாக வகித்த மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் நியமனத்திற்கு மேலதிகமாக இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

பொருளாதார மறுசீரமைப்பு நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் – சாகல

நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்ட நாட்டுக்குத் தேவையான பல பொருளாதார மறுசீரமைப்புகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான திட்டங்கள் அரசியல் ரீதியாக பாதகமானதாக இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தேர்தலை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களே நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களின் பலன் இன்றே கிடைக்காவிட்டாலும், நாட்டின் இளைஞர் யுவதிகளும் எதிர்கால சந்ததியினரும் அதனால் பயனடைவர் என்று உறுதியளித்தார்.

மாத்தறை மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற 2024 வரவு செலவு திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வு தொடர்பாடல் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்த போதிலும், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவை ஒப்பிடுகையில் மக்களின் வருமானம் போதிய அளவில் அதிகரிக்கவில்லை. அதனால் அனைத்து துறைகளையும் மறுசீரமைப்புச் செய்து அரசாங்கம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர திட்டங்களை செயற்படுத்துவதற்கான நிதி இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நிர்மாணத்துறையை பலப்படுத்துவதால் மீண்டும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்பதால் அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்றரை வருடங்களுக்கு முன்னரான இந்நாட்டின் நிலைமையை நாம் மறந்துவிட முடியாது. அப்போது, எரிவாயு வரிசைகளிலும், எரிபொருள் வரிசைகளிலும் மக்கள் நேரத்தை செலவிட வேண்டியிருந்தது. மருந்துகள் கிடைக்கவில்லை, வாழ்க்கைச் சூழல் மிகக் கடினமானதாக மாறியிருந்தது.

அந்த நேரத்தில் நாடு முழுமையாக வங்குரோத்து நிலையில் காணப்பட்டது. அரசாங்கத்தை நடத்துவதற்கு ஒரு சதம் கூட வருமானம் இருக்கவில்லை. எரிபொருள், எரிவாயு இறக்குமதிக்கும் பணம் இருக்கவில்லை. அதனால் மக்கள் வீதியிலிறங்கி போராடிய போதிலும் நாளடைவில் அவை சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அரச சொத்துகளுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்துதாக மாறியிருந்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்ற ஓரிரு வாரங்களின் பின்னர் நாட்டில் சட்டம் ஒழுங்கு மீண்டும் நிலைநாட்டப்பட்டது. நிதி நெருக்கடிக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டதுடன், எரிபொருள், எரிவாயு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த தருணத்தில் உரம் கிடைத்திருக்காவிட்டால் விவசாயத்துறை சரிவடைந்திருக்கும்.

இரண்டு முக்கிய காரணிகள் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுத்தன. முதலாவதாக உரக் கொள்கையால் விவசாயத் துறை வீழ்ச்சியை நோக்கிச் சென்றது. இரண்டாவதாக வரி குறைக்கப்பட்டதால் அரசாங்க வருமானம் குன்றியது. தேர்தல் குறித்த நோக்கத்தில் மாத்திரமே எடுக்கப்பட்ட முடிவுகளே இந்த நிலைக்கு வழிவகுத்திருந்தாலும் பிற்காலத்தில் வெளிநாடுகளிலிருந்து கிடைத்த உதவியால் அவற்றுக்குத் தீர்வைக் காண முடிந்தது.

பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்த வேலைத்திட்டத்திற்கு செல்ல ஜனாதிபதி தீர்மானித்தார். சர்வதேச நாணய நிதியத்துடனான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அழுத்தங்களைக் குறைத்து அந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. அதன்படி அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக வரிக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது.

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்தது. இதன் மூலம் வரியை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டை எந்த வகையிலும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் இந்த கஷ்டங்களை இரண்டு மூன்று வருடங்கள் தாங்கினால் இயல்பு நிலைமை ஏற்படும். அதன்படியே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அதற்கமைவான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம்.

மற்ற நாடுகள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள நீண்ட காலம் சென்றது. ஆனால் நமது நாடு விரைவில் ஒப்பந்தம் செய்து கொண்டதன் காரணமாக சர்வதேச சமூகத்திற்கு எம்மீது நம்பிக்கை ஏற்பட்டது.

எமது நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் எமக்கு வழங்கிய உத்தரவாதம் எமக்கு சாதகமாக அமைந்தது. அதன்படி, பல புதிய சீர்திருத்தங்களுடன் அடுத்த திட்டத்தை செயல்படுத்தினோம். சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களுடன் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளையும் முன்னெடுத்தோம்.
அதன்படி செயல்படுத்தப்படும் ஒரு முக்கிய திட்டமாக ‘அஸ்வெசும’ உள்ளது. எதிர்காலத்தில் இத்திட்டத்தை மேலும் பலப்படுத்த முடியும் என்று கருதுகிறேன். இத்திட்டத்தின் மூலம் மக்களின் நிதி நெருக்கடிகளை ஓரளவுக்குத் தீர்க்க முடியும். திட்டத்தினால் பயனடைவோரின் எண்ணிக்கையை 24 இலட்சமாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு அதிகமான தொகையை இதற்காக ஒதுக்கினோம். இத்தொகை பயனாளிகளின் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படுகிறது. எதிர்காலத்தில் டிஜிட்டல் மயமாக்கலுடன் இந்த திட்டத்தை மேலும் பலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணி தாய்மாருக்கு சத்துணவுப் பொதி வழங்கும் திட்டத்தை மீள ஆரம்பிக்கவுள்ளோம். முதியோர், சிறுநீரக நோயாளர், விசேட தேவையுடையோர் ஆகியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களின் போசாக்கு குறைபாடுகள் கண்டறியப்பட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதுபோன்ற திட்டங்களை நாங்கள் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

அத்துடன் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, இருதரப்பு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்து பாரிஸ் (Paris) சமவாயத்துடன் இணக்கப்பட்டு எட்டப்பட்டு அது குறித்த அறிவிப்பு விரைவில் விடுக்கப்படவுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக மீண்டுவரும். அதனால் சர்வதேச கடன்களை பெறுவதற்கான வாய்ப்பும் உதவிகளும் கிடைப்பதோடு நாட்டுக்குள் பெருமளவான முதலீடுகளும் வந்தடையும்.

நாடு வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்டு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி கணக்கு வழக்குகளை ஆரம்பிக்க வேண்டும். மேலும் புதிய வருமான வழிகளை உருவாக்க வேண்டும். எதிர்வரும் நாட்களில் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துவோம். அந்த நோக்கிலான முதன்மை திட்டமாக விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

தற்போது இலங்கையில் ஒரு ஹெக்டயரில் 4 மெட்ரிக்தொன் விளைச்சலையே பெற முடிகிறது. தற்போது அதை இரட்டிப்பாக்கக்கூடிய திட்டத்தை தயாரித்து செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளோம். இந்த ஆண்டு கிராம பகுதிகளில் அந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சுற்றுலாத்துறையிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். ஏற்கனவே இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 1,489,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அது முன்னைய ஆண்டை விடவும் இரட்டிப்பாகும். மேலும், 2017 ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வந்துள்ளனர். அதே அளவானோரை மீண்டும் வரச் செய்வதே எமது பிரதான இலக்காகும்.

அடுத்த ஆண்டுக்குள் இதை மேலும் உயர்த்த வேண்டும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு 100 டொலரை செலவிடுகிறார்கள். அவற்றுக்கு மேலதிகமாக, நாளொன்றுக்கு சுமார் 500 டொலரை செலவழிக்கும் உயர்தர சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான புதிய திட்டங்களை வகுத்துள்ளோம்.

மேலும், உற்பத்தித் துறை, கட்டுமானத் துறை ஆகிய அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமிடலையும் அரசாங்கம் கொண்டுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியால் நாம் அனைவரும் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தோம். நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்ட பல சீர்திருத்தங்களை தற்போது நாம் மேற்கொண்டு வருகின்றோம். இது அரசியல் ரீதியாக பாதகமாக இருந்தாலும், நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

சில நேரங்களில் எடுக்கப்படும் முடிவுகளின் பிரதிபலன்களை 100 சதவீதம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், எதிர்கால சந்ததியினரும், இளைஞர் யுவதிகளுக்கும் அதனால் பயனடைவார்கள். அதற்காக நாம் இந்தப் பாதையில் பயணிக்க வேண்டியது அவசியம். இந்தப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை மீளவும் தடுக்க முடியாத வகையில் நாடாளுமன்ற சட்டத்தை நிறைவேற்றிய பின்பே செயற்படுத்துகிறோம். இருப்பினும் அந்த திட்டங்களை முறையாக நிறைவு செய்ய வேண்டுமெனில் நாம் ஒரு நாடாக ஒன்றுட வேண்டியது அவசியமாகும்.

ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க கருத்துத் தெரிவிக்கையில்,

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி கடனை செலுத்த முடியாது என்று அரசாங்கம் முதல் முறையாக அறிவித்தது. நாங்கள் கடனை செலுத்தவில்லை, வெளிநாடுகளின் கடனையும் சர்வதேச பத்திரங்களின் கடனையும் மட்டுமே செலுத்தினோம். அப்போதிருந்து, நாங்கள் உள்நாட்டு கடன்களையும் முக்கிய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களையும் தொடர்ந்து செலுத்தி வருகிறோம். ஆனால் அவற்றில் பெரும்பாலான வெளி நாடுகளில் இருந்து பெற்ற கடன்கள் மற்றும் தனியார் கடன்கள் இன்னும் செலு்தப்படவில்லை.

இருப்பினும், தனியார் கடனை செலுத்த முடியவில்லை என்பதை வங்குரோத்து நிலையாகவே கருத வேண்டும். கடந்த 100 ஆண்டுகால வரலாற்றில் இந்த நிலை ஏற்பட்டதில்லை. எனவே, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கையின் பொருளாதார சமூக அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆண்டு மற்றும் திகதியென குறிப்பிடப்படும்.

இதன்போது பாராளுமன்றமும் மக்களும் இந்த நிலையில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது ஒன்றே செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதன்படி சர்வதேச நாணய நிதியத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அந்த அதிகாரிகள் அப்போது இலங்கைக்கு வரவே அஞ்சினார்கள். ZOOM தொழில்நுட்பத்தின் வாயிலாகவே பேச்சுக்கள் நடத்தப்பட்டன. மிகவும் கடினமான பயணத்திற்குப் பிறகு, செப்டம்பர் 1 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்துடன் நிபந்தனையுடன் கூடிய இணக்கப்பாட்டினை எட்ட முடிந்தது. 4 வருட காலத்திற்கு 3 பில்லியன் டொலர் உடன்படிக்கைக்கு வந்துள்ள போதிலும், இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தாதுள்ளதாக அறிவித்துள்ளதால் அதனை வழங்க முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடனை திருப்பிச் செலுத்தும் முறைமை தொடர்பில் இணக்கப்பாட்டினை எட்டுமாறு வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, இரண்டு சர்வதேச அமைப்புகளின் வழிகாட்டலுடன் 7 மாதப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், 2023 மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் இணக்கப்பாட்டை பெற்றோம். அதனால் பாரிய தொகை கிடைக்காவிட்டாலும், இலங்கையில் பொருளாதார நிலைமை வலுவடைந்திருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது என்றார்.

ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரிய பேசுகையில்,

2024 வரவு செலவுத் திட்டம் இந்த ஆண்டு நாடு எங்கு கொண்டு செல்லப்படும் என்பதை விவாதிக்கும் நிதிசார் ஆவணமாகும். அதை முறையாகப் படிப்பதும், அதற்கு எவ்வாறு பங்களிப்பது என்பது பற்றிய சரியான யோசனையைப் பெறுவதும் மிகவும் முக்கியமானதாகும். மக்கள் வரிசையில் நின்று இறக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் உருவாக்கப்பட்டது. மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எண்ணெய் பவுசர் வந்தபோது மக்கள் குழு ஒன்று கைதட்டியதைக் கண்டோம். இப்படிப்பட்ட கடினமான காலகட்டத்திற்கு நாம் முடிவு கட்டினோம்.

ஜனாதிபதியின் சரியான வேலைத்திட்டத்தினால் இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு நாடாக எழுச்சி பெற முடிந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அந்த வேலைத்திட்டத்தை இன்று உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று சர்வதேச நாணய நிதியம் கூட வீழ்ச்சியடைந்த நாடுகளுக்குள் விரைவாக எழுச்சி பெறும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அறிவித்துள்ளது என்றார்.

தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி. கமகே, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்‌ஷ, மாகாண செயலாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், காலி மாவட்டச் செயலாளர், ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர், முப்படை, பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஜெய்கா தலைவர் பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) தலைவர் கலாநிதி தனக்கா அகிஹிக்கோவிற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமான செயலாக இருந்தாலும் இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை கலாநிதி தனக்கா அகிஹிக்கோ பாராட்டினார்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம், இலகு ரயில் திட்டம் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட ஜப்பானிய உதவியின் கீழ் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இங்கு தெரிவித்தார்.

கடந்த கால பொருளாதார நெருக்கடியின்போது, இலங்கைக்கு வழங்கிய தொடர்ச்சியான ஆதரவிற்காக ஜப்பானிய அரசாங்கம் மற்றும் ஜெய்காவிற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கையில் கடன் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜெய்கா தயாராக இருப்பதாக கலாநிதி அகிஹிட்டோ மேலும் குறிப்பிட்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் விவகார பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

ஒருங்கியல் பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கத் தயார் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம் என ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவோம் நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றியவேளை நான் தெரிவித்தது போல நாங்கள் ஒவ்வொரு மாகாணசபைக்கும் அதன் சொந்த பொருளாதாரத்தை வழங்க விரும்புகின்றோம்.

அதன்காரணமாக இந்தியா போன்று ஒவ்வொரு மாகாணமும் ஏனைய மாகாணத்தின் பொருளாதாரத்துடன் போட்டியிடும்.இதனால் நன்மையேற்படும் பொருளாதாரம் போட்டிதன்மை மிகுந்ததாக காணப்படும்.

மேலும் இந்த மாகாணங்கள் தங்களின் பொருளாதார சமூக அபிவிருத்தியை தேசிய கொள்கை கட்டமைப்பிற்குள் கையாளவேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருங்கியல் அதிகாரப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை அதில் அனேகமானவற்றை அல்லது தேவையானவற்றை வழங்க தயாராகவுள்ளோம்.

சில சிறுபான்மை குழுக்கள் செனெட்டிற்கான வேண்டுகோளை விடுத்துள்ளன என்னை பொறுத்தவரைக்கும் எங்களை பொறுத்தவரைக்கும் நாங்கள் அதனை எதிர்க்கமாட்டோம்.ஆனால் இதனை வெறுமனே அரசாங்கம் மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் வெள்ளிக்கிழமை (09) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்திய அறக்கட்டளை மற்றும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார்.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் – ரணில் விக்கிரமசிங்க

உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுவூப்படுத்தும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா பேர்த் நகரில் நடைபெற்ற 7 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகள் மற்றும் சமுத்திரத்தை பெருமளவில் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொதுவான எதிர்பார்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் 7ஆவது இந்து சமுத்திர மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இன்று ஆரம்பமான நிலையில் நாளையும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை “நிலையான மற்றும் நிலைபேறான இந்து சமுத்திரத்தை நோக்கி” என்ற தொனிப் பொருளில் இந்திய வெளியுறவு அமைச்சு மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் இணைந்து இந்திய மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெயசங்கர், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டொக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் உள்ளிட்ட இந்து சமுத்திர நாடுகளின் பிரதிநிதிகள் , இந்திய மன்றத்தின் ராம் மாதவ் உள்ளிட்ட பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்து சமுத்திரத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு விரிவான பிராந்திய திட்டமொன்று அவசியம் என்றும், அதனை இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORA தலைவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

கடல் மற்றும் விமான போக்குவரத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்காத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான ஒழுங்கு விதிகள், காலநிலை நெருக்கடியை கையாள்வது மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான வழிகாட்டல் விதிமுறைகளின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், வர்த்தகப் போக்குவரத்துகளுக்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் சூயஸ் கால்வாய் உள்ளிட்டவை எதிர்காலத்தில் போதுமானதாக இருக்காது. எனவே, பிராந்தியத்தின் விநியோக மையம் என்ற வகையில் இலங்கை தென்னிந்தியாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான புதிய தரைவழித் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை பேணுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதேபோன்றே காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்து சமுத்திரத்தின் ஸ்திரத்தன்மைக்காக, 5 வருடங்களுக்குள் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான பாலஸ்தீன அரசை நிறுவி, இஸ்ரேல் அரசன் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் மூலம் காஸா பகுதியில் போர் மோதல்களை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.