யேர்மனியின் “டுசில்டோர்வ்” நகரில் உணர்பூர்வமாக நடைபெற்ற தமிழினப் படுகொலை மே 18 நினைவேந்தல்!

இலங்கை இராணுவம் உலக நாடுகளின் பேருதவியோடு 2009ஆம் ஆண்டு இலங்கையின் வடக்கில் முல்லை மாவட்டத்தின், முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொண்ட தமிழ்த் தேசிய இனம் மீதான அதி உச்ச அழிப்பின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில், ஈழத்தமிழர் மக்களவை, தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு ஆகியன ஒன்றிணைந்து யேர்மனியின் நான்கு (04) பிரதான பெரு நகரங்களில் உணர்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நான்கு நகரங்களில் ஒன்றான, யேர்மனிய மத்திய மாநில ஆளுகைக்குட்பட்ட “டுசில்டோர்வ்” நகரிலே பாராளுமன்ற அமைவிடத்திற்கு முன்பாகவுள்ள “லான்ராக்” நினைவுத் திடலில் நிகழ்வுகள் யாவும் மிகவும் உணர்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில் பி.ப 2.30 மணியளவில் டுசில்டோர்வ் நகர பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலிருந்து மக்கள் பேரணியாக வலிசுமந்த கோசங்களை எழுப்பியபடி, பி.ப 4.15 மணியளவில் நினைவுத் திடலினை வந்தடைந்ததும் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமாயின.

பொதுச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல், பொதுப்படங்களுக்கான மலர்மாலை அணிவித்தல், மலர், சுடர் வணக்கம், அகவணக்கம் என்பன இடம்பெற்றது.

அவற்றைத் தொடர்ந்து கவி வணக்கம், இசை வணக்கம், வலியுணர்த்தும் நடனம், தமிழ் மற்றும் வாழ்விட மொழியிலான உரைகள் என்பன இடம்பெற்றதுடன் தமிழ் இளையோர் அமைப்பின் உறுதியுரையும் இடம்பெற்று நிகழ்வுகள் நிறைவுபெற்று, இறுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுடனான உப்புக்கஞ்சியும் வழங்கப்பெற்றது.

புலம்பெயர் தாயக மக்கள், குர்திஸ்தான் மக்கள் பிதிநிதிகள், இடதுசாரிக் கட்சி உறுப்பினர், அருட் தந்தையரென பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை தொடர்பான புகைப்பட காட்சிப்படுத்தல்கள், வாழ்விட மொழியிலான துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் என்பன தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்பட்டது.

வெளியேற தயாராகும் ஜேர்மனி நிறுவனங்கள்; பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாவிடின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இலங்கை இழக்கும் – ஜேர்மன் தூதுவர்

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட் (Holger Seubert) இன்று கொழும்பில் ஊடகவியலாளர்கள் குழுவிடம் தெரிவித்ததாவது,

பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இந்த கட்டம் முடிவிற்கு வருகின்றது இதன் காரணமாக இலங்கை அதனை இழக்கும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் இலங்கையால் அதனை இழக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் இலங்கையில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள், நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என சில எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சில ஜேர்மன் நிறுவனங்கள் இறக்குமதித் தடை குறித்து கவலை தெரிவித்துள்ளன.

மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும் அவர் கூறினார். பல ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருவதுடன் வாகன உதிரி பாகங்கள் உட்பட ஜேர்மன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஜப்பானின் முன்னணி நிறுவனங்களான Mitsubishi மற்றும் Taisei ஆகியவை இலங்கையில் தனது செயற்பாடுகளை குறைப்பதாக அண்மையில் அறிவித்திருந்தன. இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஜேர்மனியும் இலங்கைக்கான கடன்களை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டவுடன் நிலைமை மேம்படும் என்று நம்புகிறோம் என்று ஜேர்மன் தூதுவர் கூறினார். ஜேர்மன் முதலீட்டாளர்களுக்கான ஒட்டுமொத்த வணிகச் சூழல் குறித்தும் கவலைகள் இருப்பதாக Seubert கூறினார்.

முதலீட்டுச் சபை உட்பட இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்