யாழ். நெடுந்தீவில் ஐவர் படுகொலை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்..

நெடுந்தீவு இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே அடையாளம் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயமே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

“வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து“: நெடுந்தீவில் போராட்டம்

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் மக்கள் இன்றைய தினம்(புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டோரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை அடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும், வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை பாகங்களை பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்களாக மாற்றி பெளத்தமயமாக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் சிதைவடைந்த நிலையில் காணப்படும் புராதன வெடியரசன் கோட்டைப் பாகங்களை பௌத்த தாதுகோபுரத்தின் எச்சங்களாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் நெடுந்தீவில் முனைப்புடன் இடம்பெற்று வருகின்றன.

இந்தக் கோட்டையின் வரலாற்றை திரிபுபடுத்தும் நோக்குடன் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையிலும் கோட்டை காணப்படும் இடத்திலும் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் புராதன கோட்டையின் பாகங்கள் பௌத்த தாது கோபுரத்தின் எச்சங்கள் என திடீரென விளம்பரப் பலகைகள் முளைத்துள்ளன.

இந்த விளம்பரத்தில் ‘ பல்வேறு தொல்பொருள் கலைப்பொருட்கள் தீவில் உள்ளன. மற்றும் பழங்கால மதிப்புள்ள மூன்று ஸ்தூபிகள்(கோபுரம்) இங்கு காணப்படுகின்றன. இந்தத் ஸ்தூபிகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. மிகப் பெரிய ஸ்தூபியின் கல்லறையில் மூன்று கல்வெட்டுகள் காணப்பட்டன.’

‘பெரிய ஸ்தூபியின் விட்டம் 13.54 மீற்றர். அதன் சுற்றளவு 31.93 மீற்றர். கல்வெட்டுகளில் ஒன்று பிராமி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. பிராமி கல்வெட்டு கி.பி. 1-2 நூற்றாண்டுக்கு முற்பட்டது என்றும் சிங்கள பிராகிருதத்தில் எழுதப்பட்டது என்றும் கல்வெட்டு நிபுணர்கள் நம்புகின்றனர்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விளப்பரப் பலகையில் ‘பௌத்த இடிபாடுகளைக் கொண்ட இந்தத் தளம் டெல்ஃப்ட் தீவின்(நெடுந்தீவு) புராதன பௌத்த தளம். இது கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. பெரிய ஸ்தூபி பவளக்கல்லால் ஆனது. ஏனைய இரு ஸ்தூபிகளும் கிழக்கு மேற்காக அமைந்துள்ளன.’ என குறிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் புராதன தளமானது வெடியரசன் மன்னனின் வரலாற்றுடன் தொடர்புடையது எனவும் இவை குறித்த வரலாற்றுப் பதிவுகள் பல்வேறு புராதன தமிழ் ஆவணங்களில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இந்த நடவடிக்கை திட்டமிட்ட வகையில் தமிழ் வரலாற்றை திரிபுபடுத்தும் பௌத்த ஆக்கிரமிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் விளம்பரப்படுத்தலுக்காக பிரதேச சபை அனுமதி பெறப்பட்டதா? விளம்பரப் பலகைகள் நாட்டப்பட்டமை குறித்து உரிய அதிகாரிகள் இதுவரை கவனம் செலுத்தாது இருப்பது ஏன் எனவும் நெடுந்தீவு மக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தப் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை வடக்கில் உள்ள வரலாற்றுப் பேராசிரியர்கள், பல்கலைக்கழக சமூகம், புத்திஜீவிகள் விரைந்து தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என நெடுந்தீவு மக்கள் கோரியுள்ளனர்.