போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகத் தடைவிதிப்பீர்களா ? – பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அந்நாட்டு அரசாங்கத்திடம் கேள்வி

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவைப்போன்று தமது நாடு தடைகளை விதிக்குமா? என்று பின்லாந்து அரசாங்கத்திடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பான கேள்விகளை பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை அரசாங்கத்தினால் தமிழ்மக்களுக்கு எதிராகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனப்படுகொலை குறித்தும் அவர் அந்த எழுத்துமூல ஆவணத்தில் உள்ளடக்கியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறு சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்ற போதிலும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான மிகக்குறைந்தளவிலான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்றும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராகப் பின்லாந்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடைகள் விதிக்கப்படுவதற்கு அவசியமான அழுத்தத்தை வழங்கியமைக்காக பின்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீக்கு நன்றி தெரிவித்திருக்கும் தமிழீழ சர்வதேச இராஜதந்திரப்பேரவை, போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக ஏனைய சர்வதேச நாடுகளும் தடைகளை விதிக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.