வடக்குக் கடலில் தத்தளித்த படகு 130 மியன்மார் அகதிகளுடன் மீட்பு

மியன்மார் நாட்டை சேர்ந்த ரோகிங்கியர்கள் எனக் கருதப்படும் சுமார் 130 பேர் வரையில் பயணித்த படகு ஒன்று வட இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண் டிருந்த போது இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்கள் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இருந்து சுமார் 30 நோட்டிக் கல் தொலைவில் அதிகளவானோரை ஏற்றிய படகு ஒன்று நிற்பதனை அவதானித்த மீனவர் ஒருவர் படகை அண்மித்து அவதானித்த சமயம் படகில் இருந்தவர்கள் சிறுவர்களை தூக்கி காண்பித்தமையினால் படகு ஆபத்தில் நிற்பதனால் உதவி கோருகின்றனர் என்பதனை மீனவர் ஊகித்துக்கொண்டார்.

இதனையடுத்து கரை திரும்பிய மீனவர் வழங்கிய தகவலின் பெயரிலேயே சம்பவ இடத்திற்கு கடற்படையினர் சென்றுள்ளனர்.

கடற்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட படகை அவதானித்து படகை மீட்டு காங்கேசன்துறைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

இதனிடையே மீட்கப்பட்ட படகு சேதம் காரணமாக விரைந்து பயணிக்க முடியாத காரணத்தாலும் வெளிநாட்டவர்கள் என்பதனால் இதற்கான அனுமதிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதங்களினாலும் நேற்றிரவு படகை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வருவதில் தாமதம் நிலவியதாக முதலில் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.