22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரம்

புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கறுப்பு வாரத்தை பிரகடனப்படுத்த அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அரசாங்கத்தின் புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தொழில் வல்லுநர்கள் ஒன்றியம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் கூடியிருந்தது.

பெற்றோலியம், துறைமுகம், மின்சாரம், நீர், வங்கி மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பல வல்லுநர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியம் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை – ஹர்ஷ

நியாயமான முறையில் தனிநபர் வருமான வரியை அறவிடுவதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் இருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிச்சயம் வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அவை பொது மக்களின் கழுத்தை நெரிக்கும் வரி திருத்தமாக அமையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அத்தோடு சர்வதேச நாணய நிதியம் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற போதிலும் , இன்று நாம் அதன் நிபந்தனைகளுக்குள் சிறைப்படுத்தப்பட்டுள்ளோம் என்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தனிநபர் வருமான வரி 36 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாட்டைப் போன்றே , திறைசேரியில் ரூபாவிற்கான தட்டுப்பாடும் நிலவுகிறது. இதற்கான தீர்வு என்ன? நிச்சயமாக பணத்தை அச்சிட முடியாது. எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த காலங்களை விட தற்போது பணம் அச்சிடும் வீதம் குறைவடைந்துள்ளது.

சீனி வரி குறைப்பின் மூலம் 20 – 25 பில்லியன் ரூபா வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது. அதனை மீளப் பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து தனிநபர் வருமான வரியை கண்மூடித்தனமாக அதிகரிப்பது நியாயமற்றது. வருமானத்தை அதிகரிப்பதற்கு வரி அறவிடப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் தற்போதுள்ளதை விட நியாயமான முறையில் வரியை அறவிட முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிச்சயம் வரி திருத்தம் மேற்கொள்ளப்படும். அரசாங்கத்தின் வருமானமும் குறைவடையாமல் , அதே சந்தர்ப்பத்தில் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் எமது ஆட்சியில் வரி கொள்கை பின்பற்றப்படும். அதே போன்று ஏற்றுமதி பொருளாதாரத்திலும்அதிக அவதானம் செலுத்தப்படும்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்திற்கு சொந்தமான நாடு அல்ல. எனவே அவர்கள் கூறும் அனைத்தையும் செயற்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை. நாம் முன்வைக்கும் வேலைத்திட்டத்தை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும். நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற நேரடி பேச்சுவார்த்தைகளின் போது நான் இதனைக் கடுமையாக வலியுறுத்தினேன்.

ஆனால் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றோம். இவ்வாறு தொடர்ச்சியாக பயணிக்க முடியாது. இதற்கு மாற்று வேலைத்திட்டம் எம்மிடமிருக்கிறது. அதனை நாம் பாராளுமன்றத்திலும் சமர்ப்பித்திருக்கின்றோம் என்றார்.

சமூக பாதுகாப்பு வரி மீள்பரிசீலனை செய்யப்படும் – செஹான் சேமசிங்க

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 34 இலட்சம் குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரணத்தை கோரியுள்ளன.

வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வரி அறவிடல், பொருளாதார நிலைமை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் கடந்த ஆறு மாத காலத்தில் முன்னெடுத்த கடுமையான தீர்மானங்கள் சாதகமான பெறுபேற்றை அளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை உடன் இம்மாத நடுப்பகுதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

கடுமையான தீர்மானங்களினால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கடுமையான தீர்மானங்களை எடுக்காமல் இருந்திருந்தால் நாட்டில் கடந்த வருடத்தில் ஏப்ரல், மே ஆகிய காலப்பகுதியில் இருந்த நிலை தற்போது பன்மடங்கு அதிகரித்து பாரிய விளைவை நாடு எதிர்கொண்டிருக்கும்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 43 இலட்ச குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரண உதவியை கோரியுள்ளார்கள்.இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும்.

பொருளாதார மட்டத்தில் உயர் நிலையில் உள்ள 10 சதவீதமானோரிடமிருந்து உதவிகளை பெற்று நடுத்தர அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய வரிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அரச வருமானத்தை 14 சதவீதமாக தக்கவைத்துக் கொள்ள பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு அறவீட்டு வரி இன்னும் ஓரிரு மாதங்களில் மீள்பரிசீலனை செய்யப்படும்.சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் ஒருசில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Posted in Uncategorized

வரி அதிகரிப்பால் பாரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் புலம்பெயர்வு

ஜனவரியில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரிகள் காரணமாக  இலங்கையின் பாரிய நிறுவனங்களை சேர்ந்தவர்கள் செலவுகளை குறைப்பதற்கும் அல்லது வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வதற்கும் சிந்திக்கின்றனர் என எக்கனமி நெக்ஸ்ட் தெரிவித்துள்ளது.

கடும் வருமானவரிகள் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால் இலங்கையின் பாரிய நிறுவனங்களை சேர்ந்த மில்லியன் கணக்கானவர்கள்  செலவுகளையும் முதலீடுகளையும் குறைக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

இலங்கை அரசாங்கம் வங்குரோத்து நிலையை அறிவித்து பத்துமாதங்களிற்கு பின்னர்  புதிய வரிகள் நடைமுறைக்கு வரவுள்ளன.

எனினும் புதிய வரிகள் வருமானம் உழைப்பவர்களின் நுகர்வுதிறன் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன, குறிப்பாக ஏற்கனவே கடன்பட்டவர்கள் வீடுகளிற்காக வங்கிகளில் கடன் பட்டவர்கள்  நுண்கடன்களை பெற்றவர்கள் அதிகளவு பாதிப்பை எதிர்கொள்ளவுள்ளனர்.

மாதாந்தம் 150,00 ரூபாயை உழைக்கும் இலங்கையர் ஒருவர்  தனது தனது வருமானத்தில் 2.3 வீதத்தினை செலுத்தவேண்டும் ஆனால் ஒரு மில்லியன் உழைப்பவர் 28.7 வீதத்தினை செலுத்தவேண்டும்.

எப்படி செலவுகளை குறைப்பது என தெரியவில்லை என்கின்றார் வங்கி துறையை சேர்ந்த 52 வயது நபர்.

இவர் ஏற்கனவே தனது வாகனங்களிற்கான லீசிங் மற்றும் வீட்டு கடன் போன்றவற்றை செலுத்தவேண்டிய நிலையில் காணப்படுகின்றார்.

நான் இரு கடன்களையும் பெற்றவேளை வட்டிவீதம் குறைவாக காணப்பட்டது என்னால் மாதம் ஒரு இலட்சம்  ரூபாயை சேமிக்க முடிந்தது என தெரிவித்த அவர் தற்போது பணவீக்கம் எரிபொருள் விலை அதிகரிப்பு போன்றவற்றால் எதனையும் சேமிக்க முடியாத நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நான் மலிவான பொருட்களிற்கு மாறிவிட்டேன் என மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் தெரிவித்தார்.

இவரை போன்ற பல தனியார் துறை ஊழியர்கள் ( ஏற்கனவே வருமான வரி செலுத்துபவர்கள் ) புதிய வரி குறித்து ஏமாற்றம் வெளியிட்டனர்.

தனியார் துறையை சேர்ந்த பலர் தாங்கள் வரிகளை செலுத்த தயார் என குறிப்பிட்ட அதேவேளை வெளிப்படைத்தன்மையின்மை அரசாங்கத்தின் பண விரயம்  பொறுப்பற்ற அரசியல் தீர்மானங்கள் போன்றவை இந்த வரிகள் அவசியமற்றவை என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது என தெரிவித்தனர்.

ஊதிப்பெருப்பிக்கப்பட்டுள்ள  அரசசேவை குறித்தும் தனியார் துறையினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட வினைத்திறன் அற்ற அரசசேவையை தொடர்ந்தும் காப்பாற்றுவதற்கு அரசசேவையை சேர்ந்தவர்கள் தங்கள் சக்தியை வீணடிக்கின்றனர் இது எப்படி நியாயமான விடயமாகும் என வாகனங்கள் திருத்தும் நிலையத்தை சேர்ந்த சுனில் என்பவர் கேள்வி எழுப்பினார்.

எனது ஊழியர்கள் மோசமான காலநிலைக்கு மத்தியிலும்மேலதிக நேரம் வேலை பார்த்து சம்பாதிக்கின்றனர் காலையிலிருந்து நள்ளிரவு வரை வேலைபார்க்கின்றனர் என குறிப்பிட்ட அவர் அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களிற்கு வருமானம் வழங்குவதற்காக தனியார் துறையை சேர்ந்தவர்கள் மீது அரசாங்கம் எப்படி வரி சுமையை செலுத்த முடியும் எனகேள்வி எழுப்பினார்.

புதிய வரிகளுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

அரசாங்கத்தின் புதிய வரிகள் குறித்து அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பை வெளியிடவுள்ளது.

2023 ஜனவரியின் கடைசி வாரத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனவரியின் இறுதி வாரத்தை கறுப்பு ஆர்ப்பாட்ட வாரம் என அறிவித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சாமில் விஜேசிங்க அரசாங்கம் அறிவித்துள்ள தன்னிச்சையான வரிமாற்றங்கள் தங்களின் தொழில்துறையை சேர்ந்தவர்களிற்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பல வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் குறிப்பிட்ட மகஜரை ஜனவரி 10 ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.