வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குக்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு தழுவிய வகையில் கடையடைப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடன் பேரணி ஒன்று முல்லைத்தீவில் ஆரம்பமாகி மாவட்ட செயலகத்தின் ஊடாக பயணித்தனர். இந்த போராட்டத்தில் வட கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதற்கு அமைவாக வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் , வடக்கு – கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய ஹர்த்தால் மற்றும் பேரணி ஆகியன நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேசத்தின் கண்காணிப்பில் மனிதப் புதைகுழிகளை அகழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலாகாலமாக மனிதப் புதைகுழிகளே தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்த பெரும் பரிசாக உள்ளது. செம்மணி முதல் கொக்குத்தொடுவாய் வரை இந்த விவகாரம் நீண்டுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் கொக்குதொடுவாய் மற்றும் அதனை அண்டிய முல்லைத்தீவின் எல்லைக்கிராமங்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். குறித்த காலப்பகுதியில் போர் உச்சமாக நடைபெற்றுகொண்டிருந்தது. எனவே போர்க்காலப் பகுதியில் தான் இந்த புதைகுழிகள் தோன்றியிருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர்ப்புகை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் புதன்கிழமை (7) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸாரினால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் நுகேகொட – விஜேராம சந்திக்கு அருகில் இவ்வாறு பொலிஸாரால் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனக் குறிப்பிட்டு கோட்டை , கொள்ளுபிட்டி மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பல இடங்களுக்குள் பிரவேசிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.

அதற்கமைய அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் , ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லம் , ஜனாதிபதி செயலகம் , ஜனாதிபதி மாளிகை , நிதி அமைச்சு , காலி முகத்திடல் மற்றும் காலி முகத்திடல் சுற்றுவட்டத்தை அண்மித்த பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்தோடு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் எனவும் , பொது மக்களை தூண்டும் வகையில் வன்முறை சம்பவங்களை மேற்கொள்ள வேண்டாமெனவும் கோட்டை நீதவான் நீதிமன்றம் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் , வாழ்க்கை செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் , பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் என்பவற்றை மீளப் பெறுமாறும் வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி மலை பெளத்தமயமாக்கலைக் கண்டித்து யாழ் பல்கலையில் போராட்டம்

வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மண்திறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, வெடுக்குநாரி மலை கச்சதீவு நெடுந்தீவு எங்கள் சொத்து, காவிகளின் அட்டகாசத்துக்கு முடிவில்லையா, இராணுவமே வெளியேறு கடற்படையே வெளியேறு, எமது நிலம் எமக்கு வேண்டும், தொல்பொருட் திணைக்களமே வெளியேறு போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி பேரணி மீதான தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு இன்று (26) பிற்பகல் விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, இன்று பிற்பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி கேட் ஆகியவற்றிற்குள் நுழைய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்டோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை, கொம்பனி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை பிரயோகம் – ஒருவர் கைது

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா. தலைமையகத்திற்கு அருகாமையில் உள்ள பௌத்தலோக மாவத்தையில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, மாணவர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.