சர்வதேச நாணய நிதியத்தினருக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொழிற்பாடுகள் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று முற்பகல் கொழும்பு சங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.

ஏறக்குறைய ஒன்றரை மணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பினதும் மோசடி,

ஊழல்களை தடுத்தலுடன் தொடர்புடைய செயற்பாங்குகளினதும் முன்னேற்றம் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு,

மக்களுக்கு இதுவரை வழங்கப்பட்டிராத தொழில்நுட்ப ஒத்துழைப்பு அறிக்கை பற்றியும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் விசாரிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தைப் பிரதிநிதித்துவம் செய்து பீற்றர் புறூவருக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சேர்வத் ஜஹான், கெட்சியரினா ஸ்விட்சென்கா (Katsiaryna Svieydzenka) மற்றும் மானவீ அபேவிக்ரம ஆகியோரும் உரையாடலில் பங்கேற்றனர்.

06 நாடுகளின் தூதுவர்களுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரவிற்கும் இடையிலான சந்திப்பு

இன்று (06) பிற்பகலில் ம.வி.மு. தலைமையகத்தில் 06 நாடுகளின் தூதுவர்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்கள்.

பாலஸ்தீனத்தின் தூதுவர் கலாநிதி Zuhair M.H. Dar Zaid, துருக்கி குடியரசின் தூதுவர் R. Demet Sekercioglu, பங்களாதேஷ் குடியரசின் உயர்ஸ்தானிகர் Tareq M.D. Ariful Islam, இந்தோனேசிய குடியரசின் தூதுவர் Dewi Gustina Tobing, மேற்படி தூதரகத்தின் பிரதம கொன்சல் Heru Prayitno, மலேசிய உயர்ஸ்தானிகர் Badli Hisham Bin Adam மற்றும் மாலைதீவு குடியரசின் பதில் தூதுவர் Fathimath Ghina ஆகிய இராஜதந்திரிகள் அந்நாடுகளைப் பிரதிநிதித்துவம்செய்து இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் டாக்டர் றிஷ்வி சாலி மற்றும் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் முதித்த நாணாயக்கார ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

Posted in Uncategorized

76 வருடங்களாக ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதே மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் – அநுரகுமார

நாங்கள் இரண்டு பிரதான சவால்களை எதிர்நோக்கி இருக்கிறோம். முதலாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது. இரண்டாவது அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதிசார் ஒன்றியத்தின் கொழும்பு மாவட்ட மாநாடு கடந்த 25 ஆம் திகதி கொழும்பு சினமன் கிறேன்ட் ஹோட்டலில் இடம்பெற்றது. இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அநுரகுமார திஸாநாயக்க மேலும் உரையாற்றுகையில்,

இது இரண்டு சவால்களாக விளங்கியபோதிலும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்கின்ற பாதையிலேதான் நாட்டைக் கட்டியெழுப்புகின்ற பாதையும் உள்ளது. கடந்த காலங்களில் எமது நாட்டில் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மற்றுமொரு பாதையும் தெரிவுசெய்யப்பட்டது.

பொதுவாக எமது நாட்டின் அதிகாரம் கைமாறியது மற்றவருக்கு எதிராகவே. 2005 அரசாங்கம் வடக்கின் தமிழ் மக்களுக்கு எதிராகவே கட்டியெழுப்பப்பட்டது.

2010 இன் யுத்த வெற்றி மற்றவருக்கு எதிராகவும் 2019 முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் கட்டியெழுப்பப்பட்டது. எனினும் அது வெற்றிகரமான பாதையல்ல. மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற பாதையில் இந்த நாட்டை மாற்றியமைத்திட வேண்டும்.

நாங்கள் மக்களை ஒழுங்கமைக்கையில் சவால்களை எதிர்நோக்குகின்ற இரண்டு இடங்கள் இருக்கின்றன. ஒன்றுதான் கிராமியரீதியாக அடிமட்டத்தில் வசிக்கின்ற கிராமிய மக்கள். ஏனையோரது கூட்டங்களில் அப்படிப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் ஓரளவு அதிகமென்பது புலனாகின்றது.

அவர்களை நிர்க்கதிநிலைக்கு உள்ளாக்கி, பொருளாதாரீதியாக வீழ்ச்சியடையச் செய்வித்து, அவர்களின் பிள்ளைகளுக்கு புத்தகங்கள் அல்லது சுப்பர் மார்கெற்றில் இருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கான கூப்பன் அட்டையைக் கொடுக்க வாக்குறுதியளித்து இந்த அழைப்பினை விடுக்கிறார்கள்.

இந்த அடிமட்டத்திலேயே இருக்கின்ற மக்களை இந்த பணிக்காக எவ்வாறு ஈடுபடுத்துவது எனும் சவால் எம்மெதிரில் இருக்கின்றது. சமூகத்தில் ஒருவிதமான உயர்ந்த அடுக்கில் இருப்பவர்கள் எம்முடன் நெருக்கமாக இல்லை. அவர்களால் எமது கதைகளை உணரமுடியாது. அதனால் அவர்கள் நூறு தடவைகளுக்கு மேல் பதிலளித்துள்ள கேள்விகள் மீண்டும் அவர்களின் கேள்விகளாக மாறியுள்ளன. எம்முடன் முட்டிமோதாத கவனத்திற்கு இலக்காகாத குழுவொன்று இருக்கின்றது.

இந்த குழுவினர் மத்தியில் எமது அபிப்பிராயத்தைக் கொண்டுசெல்வது எவ்வாறு என்பது தொடர்பில் எமது கவனஞ் செலுத்தப்பட வேண்டியுள்ளது. அது எமது இரண்டாவது சவாலாகும். அந்த குழுவினர்மீது எமது கவனத்தைச் செலுத்த நான் முயற்சி செய்கிறேன்.

நாங்கள் பொருளாதாரத்துறை, சட்டத்தின் ஆட்சி, வினைத்திறனற்ற அரச ஆளுகை, குற்றச்செயல்கள் அதிகரிக்கின்றமை என்றவகையில் அரசின் அனைத்து முறைமைகளும் சீரழிந்துள்ள ஒரு தேசமாகும். எம்முடன் நெருக்கமான துறைகளை நாங்கள் அதிகமாக உணர்கிறோம்.

எமக்கு ஒட்டுமொத்த முறைமையினதும் மாற்றமொன்று தேவை. கடந்த நூற்றாண்டு உலகிற்கு பாரிய வெற்றிகளைப் பெற்றுத்தந்த நூற்றாண்டாகும். உலகின் பெரும்பாலான நாடுகள் நிகழ்கால அபிவிருத்தி மட்டத்தை அடைவதற்கான அத்திவாரத்தை இருபதாம் நூற்றாண்டிலேயே அமைத்துக்கொண்டன.

நாங்கள் இருபதாம் நூற்றாண்டினை கைவிட்ட மனிதர்களாவோம். நாங்கள் ஏறக்குறைய 450 வருடங்களாக ஏதேனுமோர் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டிருந்த நாடாவோம். 133 வருடங்கள் முழுமையாகவே வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளுக்கு கட்டுப்பட்டிருந்து 1948 இல் சுதந்திரம் அடைகிறோம்.

பல்வேறு மொழிகள், சாதிப் பிரிவினைகள், கிராமிய வறுமைநிலை பலவிதமாக பரந்துகாணப்பட்ட இந்தியா 1947 இல் சுதந்திரம் அடைகையில் நேரு, காந்தி, பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் இந்திய தேசியக் கொடியின்கீழ் அனைத்து மக்களையும் ஒருங்கிணைப்பதில் வெற்றிபெற்றார்கள். சுதந்திரம் பெறும்போது நிலவிய கருத்தியல் இன்று சந்திரனுக்குச் செல்கின்ற இந்தியாவை உருவாக்கி இருக்கின்றது.

இந்த கருத்தியல்தான் அப்துல் கலாம் போன்ற ஒருவரை சனாதிபதியாக்கியது. சீக்கியர் ஒருவரை பிரதமராக்கியது. தாழ்ந்த குலத்தை சேர்ந்தவரெனக் கருதப்பட்ட ஒரு பெண்ணை சனாதிபதியாக்கியது. அந்த நோக்குதான் இன்று பிரமாண்டமான அபிவிருத்திப் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. வியட்நாம், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளுக்கு அந்த நோக்கு இருந்தது.

133 வருடங்களாக வெள்ளைக்கார ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிமைப்பட்டிருந்த எமக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தவேளையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான மாபெரும் புத்துணர்ச்சியைக் கட்டியெழுப்பவேண்டி இருந்தது. இன்று நாங்கள் சுதந்திரத்தைக் கொண்டாடுகையில் சுற்றறிக்கையொன்றை வெளியிட்டே தேசிய கொடியை ஏற்றிவைக்க வேண்டியுள்ளது.

நாம் பெற்றுக்கொள்கின்ற சுதந்திரமானது மக்களின் ஆன்மீகத்தை தட்டியெழுப்புகின்ற, நாட்டுக்கு தேசத்திற்குப் புதிய விழித்தெழலை ஏற்படுத்துதல்வரை கொண்டுசெல்கின்ற பயணமென்பதை எவருக்கும் உணர்த்தப்படவில்லை. நாங்கள் சுதந்திரம் அடைகையில் எமது நாட்டை இட்டுச்செல்லவேண்டிய திசைபற்றிய பொருளாதார நோக்கு, திட்டம் எமக்கு இருக்கவில்லை. எமது கொள்கை பிறரை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதாகும். இந்தியாவின் பயணப்பாதை ஒன்றுசேர்க்கின்ற வரலாற்றினைக் கட்டியெழுப்புகையில் எம்மவர்கள் அடிபட்டுக் கொண்டார்கள்.

எமது நாட்டின் திசை பற்றி வெளியில் தனிவேறான உரையாடலொன்று நிலவியது. அதில் பலம்பொருந்தியவராக விளங்கியவர் பொறியியலாளர் திரு. விமல சுரேந்திர. ஆங்கிலேய பொறியிலாளர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக திரு. விமல சுரேந்திர “இலங்கை மின்னியல்மயப்படுத்தலை நோக்கிச் செல்லவேண்டும்” எனக் கூறுகிறார்.

அவர் 1919 இல் லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். “லக்ஷபான மின்நிலையத்திலிருந்து பிறப்பிக்கப்படுகின்ற மிகையான மின்சாரத்தைக்கொண்டு மின்சார ரயில் இயக்கப்பட வேண்டும்” என அவர் கூறுகிறார். 2030 அளவில் தமது புகையிரதங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்குபவையாக மாற்றப்படவேண்டுமென இந்தியா ஒரு தேசிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது. நாங்கள் என்ன செய்கிறோம்.

இந்தியா ஒதுக்குகின்ற ரயில் பெட்டிகளை இங்கே கொண்டுவருகிறோம். பேராசிரியர் சேனக்க பிபிலே எமது ஓளடதக் கொள்கை எவ்வாறானதாக அமையவேண்டுமென கொள்கையொன்றை முன்வைத்தார். அவுஸ்திரேலிய விஞ்ஞானியொருவர் ” இலங்கை என்பது சமவெளயில் அமைந்துள்ள ஒரு மலையுச்சியாகும்.

அந்த மலையுச்சியில் ஒளிர்கின்ற தீபம் சேனக்க பிபிலே ஆவார்” என்று கூறினார். பெரும்பாலான நாடுகளில் ஓளடதக் கொள்கை பற்றிய அளவுகோல்களுக்கு வழிகாட்டியவர் சேனக்க பிபிலே ஆவார். அவரை இழுத்து வெளியில் போட்டார்கள். மார்ட்டின் விக்கிரமசிங்க, சரத்சந்திராக்களின் உரையாடலொன்று வெளியில் நிலவியது.

அவையனைத்தையும் கீழடக்கிய அரசியல் அதிகாரம் கட்டியெழுப்பப்பட்டது. அரசியல் அதிகாரசபை உலகில் இடம்பெறுகின்ற புதிய மாற்றங்கள் பற்றி சிந்திக்கவில்லை. அவர்கள் வரலாற்றில் நிலவிய மகிமையை திரும்பத்திரும்ப உச்சரித்துக்கொண்டு எம்மை அதற்குள்ளே சிறைப்படுத்தி அதன்மீது அவர்களின் அரசியல் கருத்திட்டதை விரித்தார்கள்.

இந்த ஆட்சியாளர்கள் எமது கருத்தியலை வரலாற்று மோகத்தில் சிறைப்படுத்தி வைத்தார்கள். முற்காலத்தில் நிலவிய தொழில்நுட்பம், கட்டிடக்கலை, சமூக அமைப்புகள் பற்றி நாங்கள் ஆய்வுசெய்ய வேண்டும். எதிர்காலப் பயணத்திற்கு அவற்றை ஆதாரமாகக்கொள்ள வேண்டும்.

இறந்தகால கருத்தியலுக்குள் சிறைப்பட்டுள்ள எமது அரசியல்வாதியின் பிரதான உடையாக “கபடமான சூற்” அமைந்துள்ளது. அது முற்கால கருத்தியல்மீது விரிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் ஒரு கட்டமாகும். இந்த கருத்திட்டத்திற்குள் எமது நாடு இறுகிப்போனது. அதனாலேயே உலகில் இடம்பெற்ற பாரிய மாற்றங்களை உறிஞ்சிக்கொள்ளக்கூடிய நாடாக, தேசமாக எமது நாடு மாறவில்லை. இந்தியா கலாசாரத்தை பலப்படுத்திக் கொள்வதைப்போன்றே உலகிற்கு மாபெரும் பொருளாதாரத்தை நிர்மாணித்து வருகின்றது. அதன் காரணமாகவே ஐ.ரீ. தொழில்நுட்பத்தில் மிகவும் பலம்பொருந்திய நாடாக இந்தியா மாறியுள்ளது.

மோட்டார் வாகன உற்பத்தி, விதையினங்களின் உற்பத்தி, ஓளடதங்கள் உற்பத்தி, பால் உற்பத்தி ஆகிய உற்பத்திகளில் முன்னணியில் நிற்கின்ற நாடாக இந்தியா மாறியுள்ளது. அதன் காரணமாகவே சந்திரனுக்குச் செல்கின்ற தேசமாக உலகில் பிரவேசித்துள்ளது. மரபுவழியான, ஆண்டான் அடிமை, பழங்குடி மரபு நிறைந்த கும்பலொன்றின் கைகளில் எமது நாடு சிக்கியது.

மனிதத் தேவைகள் என்பது ஐம்புலன்களை திருப்திப்படுத்துவதாகும். இந்த தேவைகளை நிவர்த்திசெய்கின்ற பாணி முற்காலத்தில் இருந்ததைப் பார்க்கிலும் வித்தியாசமானது. இந்த பாணிதான் புதிய சந்தையை உருவாக்குகின்றது. உதாரணமாக மேனிவனப்பக் கலையை எடுத்துக்கொள்வோம். முற்காலத்தில் உடல் வனப்பிற்காக மஞ்சள், வெள்ளைச் சந்தனம், சிவப்புச் சந்தனம் என்பவை மார்க்கெற்றில் இருந்தன. தற்போது மேனிவனப்பு மார்க்கெற் கொஸ்மெட்டிக் கைத்தொழிலாக மாறிவிட்டது.

அந்த சந்தைக்கு அவசியமான பண்டங்களை உற்பத்தி செய்வதில் ஆட்சியாளன் வெற்றியடையவேண்டும். இன்று உலகின் கொஸ்மெட்டிக் கைத்தொழிலில் உயர்வான இடத்தை வகிப்பது தென்கொரியாவாகும். ஸ்மார்ற் போன் உற்பத்தியிலும் முன்னணி வகிப்பது தென் கொரியாவாகும்.

நாங்கள் ஏன் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக மக்களை அழைக்கிறோம்? தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்ற திசைக்குப் பதிலாக புதிய திசையை நோக்கி பெறுமதிமிக்க கருத்தியலை நோக்கி எமது நாட்டை வழிப்படுத்தவேண்டும். அதுவே நவீன உலகத்துடனான எமது உறவுகளை கட்டியெழுப்பும்.

இது ஒரு தேசிய இயக்கமாகும். இந்த நாட்டைக் கட்டியெழுப்ப ஒரு தேசிய புத்துணர்ச்சி அவசியமாகும். எதிர்வரும் தேர்தலில் 76 வருடங்களாக ஆட்சிசெய்த ஆட்சியாளர்களை விரட்டியடிப்பதே மக்கள் மத்தியில் பாரிய மலர்ச்சியை, எழுச்சியை, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துமென நாங்கள் நம்புகிறோம்.

வெளிநாடுகளிலுள்ள எமது ஆராய்ச்சியாளர்கள், ஆதன உரிமையாளர்கள், கல்வியாற்றல்களும் அனுபவமும் வாய்ந்த இலங்கையர்கள் திரும்பிவரத் தயாராக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கை எம்மிடம் இருக்கின்றது. மக்களைத் தட்டியெழுப்புவதே இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான அத்திவாரமாகும். பொருளாதாரப் பக்கத்தில் மாத்திரமன்றி நாங்கள் பொறுப்புவாய்ந்த பிரஜைகளைக்கொண்ட சமூகமொன்றை உருவாக்க வேண்டும்.

அரசியல்வாதி பொறுப்புக்கூறலுக்கு கட்டுப்படல் வேண்டும். எமக்கு ஒரு புதிய நாகரிகம் அவசியமாகும். அரசியலில், பொருளாதாரத்தில், சமூகத்தில் ஒரு புதிய மாற்றத்தையே நாங்கள் முன்மொழிகின்றோம். ஒட்டுமொத்த முறைமையினதும் மாற்றமாகும். அதன்போது அரசியல்வாதிக்கும் ஒரு பங்கு இருக்கின்றது. நாங்கள் அரசியல்வாதியின் பங்கினை யதார்த்தத்தில் நிரூபித்துக் காட்டுகின்றவர்கள் என்பதை உங்களிடம் உறுதியாகக் கூறுகிறோம்.

நிறுவனங்களை வகைப்படுத்தும்போது மக்களுக்கு சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்குகையில் குறைவான முக்கியத்துவம் வகிக்கின்ற நிறுவனங்கள் என்றவகையிலேயே வகைப்படுத்தப்பட வேண்டும். ஒருசில அவசியப்பாடுகள் அரசாங்கத்தினால் கட்டாயமாக நிறைவுசெய்யப்படல் வேண்டும்.

பொருளாதாரத்தில் முன்நோக்கிய பாய்ச்சலை எடுக்கக்கூடிய ஐ.ரீ. கைத்தொழில் பற்றிய திட்டமொன்றை நாங்கள் வகுத்துள்ளோம். ரெலிகொம்தான் ஐ.ரீ. கைத்தொழிலுக்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கிவருகின்றது. ரெலிகொம்மை வளர்த்தெடுக்காவிட்டால் ஐ.ரீ. தொழில்நுட்பத்திற்கு முன்நோக்கி நகரமுடியாது.

அதனை எமது வருங்கால அபிவிருத்தியுடன் தொடர்புபடுத்தியே ரெலிகொம் நிறுவனத்தை நோக்கவேண்டும். ரெலிகொம் நிறுவனம் அரசாங்கத்திற்குச் சொந்தமானதாக இருக்கவேண்டும். அம்பாந்தோட்டை துறைமுகத்தை கொள்வனவுசெய்து ஏழு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. 1.1 பில்லியன் டொலரைச் செலுத்தியே கொள்வனவு செய்தார்கள். எனினும் ஒரு கப்பல்கூட வருவதற்கான கருத்திட்டத்தை வகுக்கவில்லை. துறைமுகத்துடன் கட்டியெழுப்பப்படுகின்ற பொருளாதாரம் எங்கே?

1977 இற்கு முன்னர் நாங்கள் பாலுக்கான எமது தேவையில் 50% ஐ உற்பத்தி செய்தோம். தற்போது உற்பத்தி செய்யப்படுவது 35% ஆகும். ஒரு வருடத்திற்காக பால் மா இறக்குமதி செய்வதற்காக 225 மில்லியன் டொலர் செலவாகின்றது. பாலில் தன்னிறைவு காண்பதற்காக அவசியமான சுற்றாடல் நிலைமைகளும் இருக்கின்றன.

கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதுடன் இணைந்து பாலில் தன்னிறைவு காண முடியும். பிரதானமான ஐந்து அரிசியாலை உரிமையாளர்களே எமது அரிசி விலையைத் தீர்மானிக்கிறார்கள். இந்த தனியுரிமையை தகர்த்திட வேண்டும். டயில்களில் தனியுரிமையொன்று தோன்றிவருவதை நாங்கள் கண்டோம்.

டயில் (Tile) இறக்குமதி செய்கையில் எமது நாட்டில் மூன்று டயில் கம்பெனிகளே இருந்தன. டயில் தடை செய்யப்பட்டது. தனியுரிமை உருவாகியது. அரச மற்றும் தனியார் சந்தையை ஒழுங்குறுத்துவது எவ்வாறு என்பது பற்றிய தெளிவான நோக்குடன் செயலாற்றுவோம்.

இந்த பொருளாதர நெருக்கடிக்குள் இருப்பது பொது திறைசேரியிடம் ரூபா இல்லாமை, நாட்டுக்கு டொலர் இல்லாமையாகும். மக்களின் நெருக்கடியை மூன்று விடயங்களாக எடுத்துக்காட்டலாம். தாங்கிக்கொள்ள முடியாத வரிச்சுமை, எண்ணெய் – மின்சாரத்தை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளின் மிகையான விலை, புதிதாக உருவாகி வருகின்ற இளைய தலைமுறையினருக்கு தொழில்கள் இல்லாமை என்பவையாகும்.

அப்படியானால் எமது பொருளாதார திட்டம் எவ்வாறு வகுக்கப்படல் வேண்டும்? திறைசேரியின் வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது? நான்கு பிரதான வருமானத் தோற்றுவாய்கள் இருக்கின்றன. உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் அவையாகும். இந்த நிறுவனங்களை முகாமைசெய்து வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியுமென்ற நம்பிக்கை எம்மிடம் நிலவுகின்றது.

டொலர் ஈட்டிக்கொள்வதற்காக வெளிநாட்டுப் பணமனுப்பல்களை பெற்றுக்கொள்வதற்காக பாடுபடுதலும் சுற்றுலாக் கைத்தொழிலை முன்னேற்றுதலும், நீண்டகால ரீதியாக உலகச்சந்தையின் பங்கினை கையகப்படுத்திக்கொள்ளல், இறக்குமதிசெய்கின்ற ஒருசில பண்டங்களை எமது நாட்டுக்குள் உற்பத்தி செய்தல் போன்ற துறைகளில் இருந்து எம்மால் டொலர்களை சேமித்துக்கொள்ள முடியும்.

எமது நாட்டின் வரி விதித்தலால் எமது பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பொருளாதாரம் விரிவடைவதில்லை. தளர்வான ஒரு வரிக்கொள்கையே எமக்குத் தேவை. எமது மத்திய வங்கி ஆளுனர் பொருளாதாரத்தை சுருக்கி வைத்துள்ளார். வட்டி வீதத்தை அதிகரித்தல், பாரியளவில் வரி விதித்தல், இறக்குமதியைக் கட்டுப்படுத்துதல் முதலியவற்றைச் செய்தார். எட்டு எனும் எதிர்க்கணியப் பெறுமதியால் பொருளாதாரத்தைச் சுருக்கினார்.

எமது திட்டம் பொருளாதாரத்தை விரிவாக்குவதாகும். பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டும். எம்மிடம் இருப்பது கொழும்பினை மையப்படுத்திய பொருளாதாரமாகும். நாங்கள் அதனை கிராமிய மக்களுக்கு விரிவுபடுத்த வேண்டும். புதிய பொருளாதார தோற்றுவாய்களை கிராமத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கான வரிக் கொள்கையொன்று அவசியமாகும். பிரஜைகள்மீது சுமத்தப்பட்டுள்ள உழைக்கும்போதே செலுத்துகின்ற வரி பொருளாதாரத்தை சுருக்குகின்ற உபாயமார்க்கமாகும்.

பண்ட உற்பத்திகளை அதிகரித்து பணவீக்கத்தைக் குறைத்திட வேண்டும். உற்பத்தியை வீழ்ச்சியடைச் செய்விப்பதன் மூலமாகவும் உற்பத்தியை வீழ்ச்சியடையச் செய்விப்பதைப் பார்க்கிலும் அதிகமான வேகத்தில் கொள்வனவு செய்வதற்கான ஆற்றலை வீழ்ச்சியடையச் செய்விப்பதன் மூலமாகவும் பணவீக்கத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.

பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆற்றல் பலவீனமடைந்தால் பண்டங்களைக் கொள்வனவு செய்வதற்கான அழுத்தம் குறைவடையும். அதன்போது பணவீக்கம் குறைவடையும். மனிதர்களை பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுத்தியே பொருளாதாரத்தை மேலோங்கச் செய்விக்கவேண்டும்.

பொருளாதாரத்தை சுழற்றவேண்டும். அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கையில் மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டும். விலங்கிடப்பட்டுள்ள பொருளாதாரத்தை சுதந்திரமான அசைவிற்கு, பொருளாதார மாற்றநிலைக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.

தமிழர்களது இனப்பிரச்சினையில் ஜே.வி.பி.

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் 1987 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வழக்குத் தொடர்ந்ததன் அடிப்படையில் 2006 ஒக்ரோபர் 10ஆம் திகதி வடகிழக்கு இணைப்பு செல்லாது மற்றும் சட்டவிரோதமானது என்ற அறிவித்தல் வந்தது. இது ஜே.வி.பி யின் தமிழர்கள் விடயம் தொடர்பான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டும்.

ஆனால், இன்றைய காலங்களில் தமிழர்களது விடயங்களில் அக்கறையானவர்களாக தம்மைக் காண்பிக்க முயற்சிக்கிறார்கள். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரித்த ஜே.வி.பியின் தாபகத் தலைவர் ரோஹ விஜயவீர தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தீவிரமாக எதிர்த்தார். அவர் இலங்கையின் ஆட்சியை ஆயுத முனையில் பிடிக்க இரண்டு முறை முயற்சித்தார்.

1971இல் அவரது இயக்கம் மேற்கொண்ட ஆயுதப் புரட்சி தோல்வியானது. மீண்டும் இலங்கை அரசுக்கு எதிராக 1987-1989 காலப் பகுதியிலும் முயற்சி பயனற்றுப் போனது உலப்பன தேயிலைத் தோட்டத்தில் ஒளிந்திருந்த விஜயவீராவை, இராணுவம் 1989 ஒக்ரோபர் 3ஆம் திகதி கைது செய்தது. நவம்பருடன் அவர் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவர்கள் அரசியல் இயக்கமாகச் செயற்பட்டு வருகிறார்கள்.

குறிப்பிட்டளவான ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் பெறும் கட்சியாக அது வளர்ந்தது. ஆனால், கடந்த சில தேர்தல்களிலும் தேசிய அரசியலிலும் சரி, தமிழர்களது விடயங்களிலும் சரி கணக்கிலெடுக்கப்படாத நிலையை எட்டியிருந்த ஜே.வி.பி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவை விரட்டியடித்த அரகலயவுடன் சற்று மேம்படுத்திக் கொண்டதுடன், இப்போது இந்தியா அழைத்துப் பேசும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இது ஒரு முன்னேற்றம்தான்.

அதே நேரத்தில் மக்களிடமும் ஆதரவைப் பெருக்கிக் கொண்டது என்ற ஒரு மாயையும் தன்வசப்படத்திக் கொண்டுள்ளது என்பது உண்மை. அரசியலிலும் பன்னாட்டு உறவுகளிலும் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ இல்லை என்பது பல்வேறு நிகழ்வுகளின் மூலம் நிரூபிக்கப்படலாம். அதற்கு ஜே.வி.பியும் விலக்களிப்புக்கு உட்பட்டதல்ல.

ஜே.வி.பி யின் இந்திய விஜயம் அந்நாட்டின் இராட்சிய நலன்கள் சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல இலங்கைத் தமிழர்களது விவகாரத்திலும் முக்கியமானது. ஆனாலும், இந்தியா மேற்கொண்ட ஜே.வி.பி தொடர்பான இராஜதந்திர நகர்வு அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சிக்குள் தள்ளியதுடன், உலகில் நிரந்தர நண்பர்களோ, நிரந்தர எதிரிகளோ கிடையாது என்ற கோட்பாட்டை இந்தியா கடைப்பிடிப்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா எந்த அளவுக்கு அக்கறையுடனும் கவனத்துடனும் இருக்கிறது என்பதற்கு நல்லதோர் உதாரணமாக இருக்கும் ஜே.வி.பி யினருக்கான அழைப்பு நல்லதொரு சமிக்ஞையாக இருந்தாலும், வேறு ஒரு நாடி பிடிப்பாகவும் இருக்கலாம்.

அதே நேரத்தில் இலங்கை அரசியலில் முழுமையான ஈடுபாட்டுடன்தான் இருக்கிறோம் என்பதனை வெளிப்படையான அறிவிப்பாகவும் இதனைக் கொள்ளலாம். ஜே.வி.பி. எனும் மக்கள் விடுதலை முன்னணி ரோஹண விஜயவீரவால் 1960களில் ஆரம்பிக்கப்பட்டவேளை, அவருடைய கடும்போக்கு அரசியலுடன் இந்தியா தொடர்பிலும் விரோதப் போக்கையே கடைப்பிடித்துவந்திருந்தார்.

அதற்கு அவர் கொடுத்த விளக்கமாக இலங்கை நாட்டின் சுயாதிபத்தியத்துக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பிலான நிலைப்பாடு அமைந்திருந்தது. அவர்கள் தொடர்ந்து கொண்டிருந்த கடும்போக்கு இந்திய விஜயத்துடன் சற்றுத் தளர்ந்திருப்பதாகவே பேசப்படுகிறது.

எதிர் நிலைப்பாட்டு அரசியலையே மேற்கொண்டுவருகின்ற ஜே.வி.பியானது கடும்போக்கைக் கடைப்பிடித்திருந்தாலும் ஆட்சி அதிகாரம் என்று வருகின்றவேளை, கடும்போக்கைத் தணித்து இராஜதந்திர ரீதியில், ஓரளவுக்கேனும் மென்போக்கு தேவையானதாக இருக்கிறது என்பதனையே இந்தியாவின் அழைப்பையேற்று சந்திப்புக்களை மேற்கொண்டிருக்கின்றமை காட்டிநிற்கிறது.

பிராந்தியத்தின் கேந்திர முக்கியத்துவமுடையதான இலங்கை, இந்தியாவுக்கு அதன் தேசியப் பாதுகாப்பு, ஒருமைப்பாடு என பல்வேறு விடயங்களிலும் தேவையானதொன்று. எனவே இங்கு ஏற்படவிருக்கின்ற அல்லது ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற அரசியல் மாற்றம் பார்வைக்கு உட்படுவதில் தவறொன்றுமில்லை.

அந்தவகையில்தான் ஜே.வி.பியினருக்கான இந்திய அழைப்பும் அமைந்திருக்கிறது. இவ்வருடத்தில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் இந்தியா, மேற்குலக சக்திகளாலும் முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது. இது தவிர்க்கமுடியாதது.

இலங்கையில் பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்‌ஷ, வாக்களித்த சிங்கள மக்களாலேயே விரட்டியடிக்கப்பட்டமையில் ஜே.வி.பியினரின் பங்கு முக்கியமாக இருந்தது. அதன் பின்னர் உருவாகியிருக்கின்ற அரசியல் மாற்றம் அவர்களது பக்கம் பெரும் மக்கள் அலையொன்றை உருவாக்கியிருக்கிறது.

மூன்று ஆசனங்களையே பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற அக் கட்சிக்கு இது சாதகமானதே. அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புகளின்படி தற்போதைய ஜனாதிபதிக்கும் ஜே.வியினருக்கும் இருக்கின்ற ஆதரவானது சம அளவுகளிலேயே காணப்படுகின்றமை தெரியவருகிறது.

அதே நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு அளவினை விடவும் ஜே.வி.பிக்கு அதிகம் என்பதே இதிலுள்ள பிரதான விடயமாகும். இந்திய ஊடகம் ஒன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் 50 சதவீதம் ஆதரவு இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியா ஜே.வி.பியை இந்தியா அழைத்தமைக்கு ஓர் உந்துதலாகும்.

இலங்கையில் அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் ஒரு கட்சியை இந்தியா தங்களுடைய அனுசரிப்புக்குள் இழுத்தக் கொள்வதற்காகவே இந்த அணுகல். இது தவிர வேறொன்றில்லை.

இன்னொருபுறம், 70களின் பிற்பகுதியிலிருந்து தமிழருடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை ஜே.வி.பி. வலியுறுத்திவந்திருந்தது. இந்த அடிப்படையில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் அதில் இணைந்து செயற்பட்டார்கள்.

பின்னர் 1986இல் ஜே.வி.பியின் தலைவர் ரோஹண விஜேவீர, அதன் மத்திய குழுவுக்காற்றிய மிக நீண்ட உரையில் தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டம் முறியடிக்கப்பட வேண்டிய ஓர் ஏகாதிபத்திய சதி என்றார். அதுவே இன்றுவரை ஜே.வி.பியின் அரசியல் வேதமாகத் திகழ்கிறது. இதில் ஒரு மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை.

அதனோர் அங்கமே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வட, கிழக்கினை அவர்கள் பிரித்து வேறாக்கியமையாகும். இந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினை அமுல்படுத்துவதில் முழு எதிர்ப்பாக இருந்து வருகின்ற இக்கட்சியை எவ்வாறு இந்தியா தம்முடைய பார்வைக்குள் அல்லது கட்டுக்குள்கொண்டுவர முயல்கிறதா என்பது கேள்வி.

அப்படியானால், நாங்கள் ஒப்பந்தத்தைச் செய்தோம். அது உங்களது நாட்டின் அரசியலமைப்பில் இருக்கிறது. அதனை நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாடு காரணமாக இருக்கலாம். இருந்தாலும், இந்தியா தன்னுடைய நலன்களை அலசாமல் இந்த நகர்வை எடுத்திருக்க வாய்ப்பில்லை.

இந்த நகர்வு ஒருவேளை, ரணிலுக்கு தேர்தலில் வெற்றி கிட்டாவிட்டால், தற்போதிருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தை விடவும் அதிகப்படியான வாக்குகளைப் பெறப்போகின்ற ஒருவர் அனுரகுமார திசாநாயக்கவாக இருப்பார்.

அவ்வேளையில், ஏற்படக்கூடிய தர்மசங்கடத்தினைத் தவிர்த்துக்கொள்வதற்கு இந்தியா முன்கூட்டியே இந்த நகர்வினை எடுத்திருக்கிறது என்றும் கொள்ளமுடியும். எது எவ்வாறானாலும், தற்போதைய ஜனாதிபதியான ரணில்தான் இந்தச் சந்திப்புக்கான வேலைகளைச் செய்து கொடுத்தார். ஜே.வி.பி. க்கு இந்தியா தம்முடைய ஆதரவினை வழங்குவதற்கு முன்வருகிறது.

தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ஜே.வி.பி. யின் ஒத்துழைப்பு முயற்சிக்கப்படுகிறது. என்றெல்லாம் பேசப்படுகின்ற பல்வேறு விடயங்கள் இதற்குள் இருக்கத்தான் செய்கிறது. ரணில் இதனை ஏற்பாடு செய்கிறார் என்றால், ஜே.வி.பி தொடர்பில் அவர் வெளியிடும் கருத்துக்கள் அரசியலாக இருக்கும்.

இல்லாவிட்டாலும், ரணிலுக்கு ஜே.வி. பியின் ஆதரவு கிடைப்பதற்கு ஏதுநிலைகள் ஏற்படுத்தப்பட முயற்சிக்கப்படலாம். ஆனாலும், இது இந்தியாவின் தனிப்பட்ட முயற்சியாக இருக்க வாய்ப்புமில்லை. எப்படியிருந்தாலும், ஜே.வி.பி. யினை இந்தியா, அவசர அவசரமாக உள்வாங்க முற்படுவதற்கு வேறும் காரணங்கள் இருக்கலாம். இல்லாமலுமிருக்கலாம்.

அரசியலில், இராஜதந்திரம் சகஜம்தானே.! என்றவகையில் தமிழர்களுடய விவகாரத்திலும் தேசிய அரசியலிலும் ஒரு நெகிழ்வுப் போக்கை, அனுசரிப்பு நிலைப்பாட்டை கைக்கொள்ள விளையும் ஜே.வி.பி. எதிர்வரும் காலங்களில் தமிழர்களது அரசியல், இனப்பிரச்சினை தொடர்பில் நல்லெண்ணத்தைக் கைக்கொள்ளும் என்று நம்பிக்கை கொள்வோம்.

– லக்ஸ்மன்

தமிழ் மக்கள் ஜே.வி.பி யுடன் இணைவதை தடுக்க முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி – ஜே.வி.பி குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு அவர்கள் எம்மோடு இணைவதை தடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள குழுக்கள் முயற்சிப்பதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் தோழர் பிமல் ரத்நாயக்க தெரிவிக்கையில்

இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.

எனவே, எமக்கு எதிரான பாசறையினர் எம்மீது ஆதாரமற்ற, அடிப்படையற்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக தோழர் அநுர குமார திசாநாயக்கவை உள்ளிட்டவர்கள் இந்தியாவின் அழைப்பின் பேரில் இந்திய விஜயத்தை மேற்கொண்டு வந்ததன் பின்னர் இந்நாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எம்மீதான மிகப் பெரிய ஆர்வமும் கவனமும் அதிகரித்து வருகின்றது.

எனவே, தமிழ் மக்கள் எம்மோடு இணைவதைத் தடுப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்புள்ள பல்வேறு குழுக்கள் மிகவும் தவறான ஒரு செய்தியை புனைந்து வருகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் இடையீட்டுடன்தான் 83 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரம் மேற்கொள்ளப்பட்டதென பொய்யான பிரச்சாரத்தை இவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் செய்து வருகின்றனர். இது அப்பட்டமான பொய்யாகும்.

83 கறுப்பு ஜுலைக் குற்றச் செயல்கள் ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையின் கீழ் இயங்கிய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் தலைமைத்துவத்தின் இடையீட்டின் பேரில்தான் மேற்கொள்ளப்பட்டன.

அதுபற்றிய எழுத்திலான குறிப்புகள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை எங்களால் சமர்ப்பிக்க முடியும். 83 கறுப்பு ஜுலை கலவரத்துக்கு முன்னர் யாழ். நூலகத்தை தீக்கிரையாக்குவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்த்துடைய அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்கள். அவர்கள் பற்றிய எல்லா விடயங்களையும் எங்களால் சமர்ப்பிக்க முடியும்.

ஆனால், இந்த கலவரத்தின் பின்புலத்தை நாம் ஆராய்ந்தால் 1983 கறுப்பு ஜுலை என்பது குறிப்பாக இலங்கையில் வடக்கு மாகாணங்களை தவிர்ந்த ஏனைய எல்லா மாகாணங்களிலும் வசித்த தமிழ் மக்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்ட அடிப்படையில் கட்டவிழ்த்துவிட்ட கடுமையான ஒரு இனவாத செயற்பாடாகும்.

குறிப்பாக ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தேர்தலை பிற்போட்டு ஜனநாயகத்தின் மீது அடக்குமுறையைப் பிரயோகித்து படுமோசமான ஆட்சியைத்தான் செய்து வந்தது. அவர்கள் தொழிற்சங்கங்களை தடை செய்தார்கள்.

ஒரு இலட்சம் பேருக்கு தொழிலை இழக்கச் செய்தார்கள். வளர்ந்து வந்துகொண்டிருந்த தேசிய ஒற்றுமை ஒரு மட்டத்தை அப்போது அடைந்திருந்தது. இந்த தேசிய ஒற்றுமையை சிதைப்பதற்காக ஜே.ஆரும், ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையையும் அடக்குமுறையையும் பாவித்தார்கள்.

1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் 1977 அம் ஆண்டு ஜே.ஆர்.ஜயவர்தன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசாங்கத்தை அமைக்கும்போது இந்நாட்டில் யுத்தம் இருக்கவில்லையே? ஜே.ஆர் மற்றும் ரணிலின் தவறான இனவாத அரசியலின் காரணமாகத்தான் 81, 82 இல் முரண்பாட்டு நிலைமையொன்று இலங்கையில் உருவாகியிருந்தது. 83 ஆம் ஆண்டிலே முரண்பாடு உச்சம் கண்டிருந்தது. அதன் விளைவாக இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை அவர்களின் வீடுகளில் ஒப்படைப்பதுதான் அப்போது அமுலில் இருந்த நடைமுறை. ஆனால், ஜே.ஆர். ஜெயவர்தன, ரணில் உள்ளிட்ட கும்பல் அந்தச் சிப்பாய்களின் பூதவுடல்களை கொழும்புக்கு கொண்டுவந்து திட்டமிட்ட அடிப்படையில் மிகப்பெரிய ஒரு தாக்குதலை கொழும்பில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டனர். அத்தாக்குதல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச தலைவர்களால் இலங்கை முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டது. சப்பாத்து தைக்கின்ற வறிய மனிதர் முதற்கொண்டு பெரிய தொழிலதிபர்கள் வரை இதனால் பாதிப்புற்றார்கள். இலங்கையில் எத்தனையோ சினிமா தியட்டர்கள் அழிக்கப்பட்டன. கொழும்பில் ரணிலின் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த காமிணி மண்டபம் இப்போது இல்லையே! யார் தீக்கிரையாக்கியது? ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் காடையர் கும்பல்கள்தான் அழித்தன.

எனவே, 83 கறுப்பு ஜுலையை உருவாக்கியதும் அமுலாக்கியதும் ஐக்கிய தேசியக் கட்சிதான். ஜே.ஆர்.தான் அதன் முக்கியஸ்தர். அதேப்போல அப்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன. அவர்களின் ஆதனங்கள் அழிக்கப்பட்டன. அதனையடுத்து ஜே.ஆர். ஜெயவர்தன ஒருவாரகாலம் சட்டத்தை அமுலாக்கவில்லை. பொலிசாருக்கு கட்டளையை பிறப்பிக்கவில்லை. பொலிஸ்மா அதிபர்கள் ஜே.ஆரிடம் சென்று அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரினார்கள். ஆனால், அவர் அதனைச் செய்யவில்லை. எனவே, இந்தக் கறுப்பு ஜுலையைத் தொடர்ந்து ஜே.ஆர். என்ன செய்தார்? மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜ கட்சி ஆகிய மூன்று இடதுசாரி கட்சிகளை தடைசெய்தார்.

தடைசெய்து சில மாதங்களுக்குப் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜ கட்சியின் தடைகளை நீக்கினார். ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் தடையை நீக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால், மக்கள் விடுதலை முன்னணி 1980களில் மிகவும் பலம்பொருந்திய வகையில் வளர்ந்து வந்தது. அதாவது, இடதுசாரியின் மிகவும் பலம்பொருந்திய மக்கள் இயக்கமாக வளர்ந்து வந்துகொண்டிருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் தோழர் விஜேவீரவை உள்ளிட்டவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்து இந்த நாட்டின் அதிகாரத்தை இடதுசாரிகளின் கைகளுக்கு கொண்டுபோய் விடுவார்களென ஜே.ஆர். பயந்தார். எனவே, அதனை தடுப்பதற்காக ஜே.ஆர் இந்த இனவாதத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களை படுகொலை செய்து, அதனை பயன்படுத்தி மக்கள் விடுதலை முன்னணியை தடை செய்தார்.

ஹிட்லரும் இதைத்தானே செய்தார். ஹிட்லரின் நாசிக்கட்சி ஜேர்மன் பாராளுமன்றத்தை தீக்கிரையாக்கினார்கள். அவ்வாறு செய்துவிட்டு ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மீது குற்றத்தை சுமத்தினார்கள். அதன் பின்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை தடைசெய்து அடக்கினார்கள். ஜே.ஆரும் 83 இல் இதைத்தான் செய்தார். பின்னர் கறுப்பு ஜுலை தொடர்பாக ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்தக் கலவரத்திற்குக் காரணம் ஐக்கிய தேசியக் கட்சிதான் என்று அதில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, இற்றைவரை அக்குற்றச் செயல்களுக்காக ரணில் விக்ரமசிங்க இந்த தேசத்திடம் மன்னிப்புக் கோரவில்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பாக புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவைதான் நடந்த உண்மை.

பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இந்த விடயம் தெரியும். ஆனால், அக்காலப்பகுதியில் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் இருக்கவில்லை. சுயாதீன ஊடகங்கள் இருக்கவில்லை. ஓரிரண்டு செய்தித்தாள்கள் இருந்தன. ஐ.டி.என், தேசிய ருபவாஹிணி என்ற இரு இலத்திரனியல் ஊடகங்கள் அரசாங்கத்தின் கைகளில் இருந்தன. எனவே, அந்தநேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் காடையர்கள், அயோக்கியர்கள் புரிந்த ஆட்கொலைகளை ஜே.வி.பி. அல்லது வேறு நபர்கள் மீது சுமத்துவதற்கு வசதியாக இருந்தது. அண்மைக் காலத்தில் மக்கள் எழுச்சியின் போது அரசாங்கத்தின் காடையர்கள் கோல்ஃபேஸ் போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்திவிட்டு அப்பலியை மற்றவர்கள் மீது சுமத்த முயற்சித்தனர்.

ஆனால், சமூக வலைத்தளங்கள் இருந்ததனால் ராஜபக்ஸர்களால் அதனைச் செய்ய முடியவில்லை. ஆனால், 83 யுகம் அப்படிப்பட்டதல்ல. எனவே, 83 கறுப்பு ஜூலை இலங்கை வரலாற்றை முற்றாகவே மாற்றியமைத்தது என்பதை தெட்டத்தெளிவாகக் கூறுகிறோம். இது ஆயுதமேந்திய பிரிவினைவாதத்திற்காக இளைஞர்களை வழிப்படுத்தியது. இது முட்டாள்த்தனமான கறுப்பு ஜுலையாகும். அந்தக் கலவரத்தில் உடைமைகளை இழந்த, உறவுகளை இழந்த, கைகால் முறிந்த தோழர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இன்று மக்கள் விடுதலை முன்னணியுடன் அவர்கள் இணைந்தே இருக்கிறார்கள். சரோஜா போல்ராஜ், இராமலிங்கம் சந்திரசேகர், மோகன் போன்ற தோழர்கள் அப்படிபட்டவர்கள்தான்.

ஜே.வி.பி. தமிழர்களை தாக்கியிருந்தால் அவர்கள் ஏன் ஜே.வி.பியுடன் இணைந்துகொள்ள வேண்டும்? அந்தக் காலப்பகுதியில் ஜே.வி.பி. இனவாத ரீதியாக செயற்படவில்லை என்பதை மக்களிடம் தெரிவித்துக்கொள்கின்றோம். அப்போது நாங்கள் தமிழ் சகோதர சகோதரிகளை இயலுமான நேரங்களில் காப்பாற்றினோம். அவர்களை பாதுகாத்தோம்.

எனவே, வங்குரோத்து அடைந்துள்ள இந்த ராஜபக்ஸர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் சேறுபூசும் இயக்கங்களிடம் அகப்படாமல் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காக எம்மோடு இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ரணிலை ஓட ஓட விரட்டுவோம் – ரில்வின் சூளுரை

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும், அப்படிச் செய்தால் மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி ரணிலை ஓட ஓட விரட்டியடிப்போம் என்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப் பகுதியில் இப்போதுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிகின்றது.

இந்நிலையில், அரசமைப்பின்படி, அதற்கு முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும்.

அந்தத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கோ அல்லது வேறு ஏதும் சதி செய்வதற்கோ இடம்கொடுக்கமாட்டோம். மக்களை வீதிக்கு இறக்கி இந்த அரசை விரட்டுவோம் எனவும் தெரிவித்தார்.

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – சபா.குகதாஸ் வேண்டுகோள்

தமிழர்களிடம் வாக்கு கேட்க முன் ஐே.வி.பி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் பிரதிநிதிகளை சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.

அது அவர்களின் ஐனநாயக உரிமை ஆனால் தமிழர்களுடன் ஐே.வி.பி பேசுவதற்கு முன்பாக பிரதான இரண்டு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.

ஒன்று ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று அவர்கள் கோரி நிற்கும் சமஸ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது ஐே.வி.பியின் முன்னாள் தலைவர் றேஹண விஐயவீர, ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் 2006 இணைந்த வடகிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக பிரிப்பதற்கு ஐே.வி.பியின் உயர்நீதிமன்ற வழக்கே காரணமானது.

2009 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்கு தென்னிலங்கையில் சாரை சாரையாக சிங்கள இளைஞர்களை இராணுத்தில் இணைவதற்கு தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற வெறித்தனமான பிரசாரத்தை மேற்கொண்டதுடன் யுத்த வெற்றியை ராஐபக்ச குடும்பத்துடன் பாற்சோறு வழங்கி கொண்டாடியது தாங்கள் தமிழர்களுக்கு செய்த தவறு.

நாட்டை பிளவுபடுத்தவே ஜே.வி.பி ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றது – மேர்வின் சில்வா

நாட்டை பிளவுபடுத்தும் நோக்கிலேயே ஜே.வி.பியினர் ஆட்சிக்குவர முயற்சிப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் பொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை எனவும் எரிவாயு மற்றும் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடும் இல்லை எனவும் சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல. ஏனென்றால் சமையல் பொருட்கள், விவசாய உற்பத்திகள், ஆடைகள் என அனைத்தும் இன்று அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

அதாவது தேசிய மக்கள் சக்தி ஒரு சந்தர்ப்பத்தில் விபச்சாரத்தை சட்டமாக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இன்று விபச்சாரம் மாத்திரமே மிக குறைந்த விலையில் கிடைப்பதாக தெரிகிறது.

இவ்வாறு நாட்டை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்றவர்கள் இன்று நாட்டில் மீண்டும் ஆட்சி செய்ய திட்டமிடுகின்றனர்.

நாட்டை பிளவுபடுத்த எண்ணும் ஜே.வி.பியினர் நாட்டை பிளவுபடுத்துவதற்காகவே ஆட்சிக்குவர எண்ணுகின்றனர்.

இதற்காகவா இந்தியாவுக்கு சென்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது என மேர்வின் சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.வி.பி- ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் யாழில் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியினருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றையதினம்(16) யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது சமகால தேசிய பிராந்திய சர்வதேச அரசியல் நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக, இலங்கையில் தமிழ் மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அத்துமீறிய நில ஆக்கிரமிப்பு, எல்லை தாண்டிய மீன்பிடி, தமிழர் நில, கடல் வளங்கள் அந்தந்த பிரதேச மக்களின் எதிர்ப்பினையும் தாண்டி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுதல் போன்ற விடயங்களில் தேசிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் குரல் கொடுக்க வேண்டுமென ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும், இலங்கையி்ல் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினர் முன்வைக்கப்போகும் தீர்வு திட்டம் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் வடமாகாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன், யாழ் இணைப்பாளர் k.இளங்குமரன், ஜனநாயகபோராளிகள் சார்பில் தலைவர் சி.வேந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் அநுரவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் காமென் மொரெனோவுக்கும்  (Carmen Moreno) தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அநுர குமார திசாநாக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) பிற்பகல் நடைபெற்றது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி  மற்றும் நடப்பு அரசியல் நிலைமை பற்றி இங்கு   கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தை பாதுகாத்தலைப்போன்றே தேர்தல்களை பிற்போடுதல் பற்றியும்  கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் நிகழ்நிலை  பாதுகாப்பு  சட்டம் (Online Safety bill) பற்றியும் இந்த உரையாடலின்போது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு,

இருதரப்பினருக்கும் இடையில்  உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை பிரதிநிதிகள் குழுமத்தின் பிரதிப் பிரதானி லார்ஸ் பிறெடால் (Lars Bredal) தேசிய மக்கள்  சக்தியின் தேசிய நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர்  விஜித ஹேரத்   ஆகியோர்  பங்கேற்றனர்.