“சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை”-பிரதமர் ரணில்

பொருளாதார மீட்சிக்காக சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் கொள்கை திட்டமே அவசர தேவை என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் அடுத்தகட்ட தீர்மானம் குறித்து எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது விசேட உரையாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு தரப்பினருடன் விரிவுபடுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமக்கு உதவி புரிய நாடுகள் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றவுடன் பெரும் நிதியுதவினை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் சர்வதேச நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளேன். ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருவார காலங்கள் உள்ளன.

சர்வதேச நாயண நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து எமது கொள்கை திட்டங்களை பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நகர்வினை முன்னெடுப்பார்கள். எரிபொருள் எரிவாயு, உரபிரச்னைக்கு தீர்வு காண உரிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.