நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எனது முதல் இலக்கு – பதில் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோன்

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எனது முதல் இலக்கு. அத்துடன் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கப்பம் கோருதல் ஆகியவற்றினால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் செயற்பட எதிர்பார்த்துள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதில் பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்ற அவர் இன்றைய தினம் கொழும்பு, கங்காராம விகாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் சமார் 25 வருடங்களாக வெவ்வேறு பொலிஸ் பதவிகளில் கடமையாற்றியுள்ளேன். எனக்கு அனுபவம் உள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காக இலங்கை பொலிஸ் சேவையை முன்னோக்கி கொண்டு செல்வேன்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எனது முதன்மை இலக்காகும். மேலும் நாட்டில் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பது எனது இரண்டாவது பொறுப்பாகும். இன்று கிராமப்புற பாடசாலைகளில் கூட மாணவர்களிடத்தில் போதைப்பொருள் பாவனை பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது.

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த நான் முன்னுரிமை அளிப்பேன். அத்தோடு அதனை மேற்கொள்ள சிறந்த திட்டமும் என்னிடம் உள்ளது. அதை செயல்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், கப்பம் கோரல் ஆகியவற்றினால் ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் செயற்பட எதிர்பார்க்கின்றோம்.

நான் பொறுப்பில் இருந்த சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட்டேன் என்பதை அனைவரும் நன்கு அறிவர் என்றார்.