பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் கடும் விசனம்

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளமையை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அவமதிக்கும் செயலாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசபந்து தென்னகோன் மீது காணப்படும் குற்றச்சாட்டுக்கள் எவற்றையும் கருத்திற் கொள்ளாது அவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் மூலம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பதும் தெளிவாகிறது என்றும் பேராயர் விசனம் வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையை பேராயர் மெல்கம் கர்தினார் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பதோடு, அதனை முற்றாக எதிர்க்கின்றார். இந்த நியமனமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயலாகும்.

273 அப்பாவி மக்களை கொலை செய்த, மேலும் 500 பேரை படுகாயமடயச் செய்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை தடுப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும், அதனை உதாசீனப்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இதுவரையிலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசபந்து தென்னகோன் போன்றோர் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றியிருந்தால் 273 அப்பாவி மக்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். அவர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் உதாசீனப்படுத்தியதனாலேயே அவர்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தேசபந்து தென்னகோன் போன்றோர் நாட்டின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை மிலேச்சத்தனமான செயற்பாடாகும்.

2022 மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்துகல்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட 17 கோடியே 85 இலட்சத்தை வழக்கிற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்குமாறு கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நபரொருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பது புலப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு தேசபந்து தென்னகோனுடைய பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். சட்டத்தரணிகள் உட்பட சமூகத்தில் பொது மக்கள் மத்தியிலும் இந்த நியமனம் தொடர்பில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இவை எவற்றையுமே கவனத்தில் கொள்ளாது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அமைச்சர் உட்பட ஜனாதிபதியை சூழவுள்ள சுயநலவாதிகள் சிலரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நியமனம் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. இந்த நியமனமானது நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை பொலிசுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அவமதிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.