யாழ்ப்பாணம் – கொழும்பு விமான சேவை மீள ஆரம்பம்

இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை சனிக்கிழமை (01) ஆரம்பமாகியுள்ளது என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து ஒரு மணி நேரம் பத்து நிமிடத்தில் யாழ்ப்பாணத்தை அடைய முடியும் எனவும், இந்த விமான சேவை வாரத்தில் சனி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நான்கு நாட்களுக்கு காலை வேளைகளில் விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறினார்.

12 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய செஸ்னா 208 என்ற விமானமே இந்தப் பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஃபிட்ஸ் ஏவியேஷன் / டேவிட் பீரிஸ் ஏவியேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்த பயணிகள் போக்குவரத்திற்காக விமானங்களைப் பயன்படுத்தியுள்ளன.

ஒரு வழிக்கட்டணமாக ரூ.22 ஆயிரம் ரூபாவும் இருவழிக்கட்டணமாக ரூ.41,500 அறவிடப்படும். இதில் பயணிக்கும் பயணி ஒருவர் 7 கிலோகிராம் பொதியை கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன்மூலம், யாழ்ப்பாணம் சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும் எனவும் இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்தார்.