அரசாங்கத்தின் மீது வெறுப்பு அதிகரிப்பு : நாட்டையும், மக்களையும் பாதுகாக்க கடவுளிடம் வேண்டுவதே சிறப்பு – முருந்தெட்டுவே ஆனந்த தேரர்

அரசாங்கம் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர குறைவடையவில்லை.

நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க கடவுளிடம் வேண்டிக் கொள்வதே மிகுதியாகியுள்ளது.

அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்வற்றோரை காண்பது அரிதாகவுள்ளது என அபயராம விகாரையில் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும்., பொது மக்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் முறையான கொள்கை திட்டங்களை வகுக்கவில்லை. சுகாதார அமைச்சின் பொறுப்பற்ற செயற்பாட்டை பலமுறை சுட்டிக்காட்டியும் எவ்வித மாற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை.

அரசியல் முரண்பாடுகளை துறந்து அனைத்து தரப்பினரது யோசனைகளையும் ஒன்றினைத்து சிறந்ததிட்டத்தை வகுக்குமாறு குறிப்பிட்டுள்ளோம்.

எமது கருத்திற்கு மதிப்பளிக்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் மாத்திரம் நாம் குறிப்பிட்ட கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டன. அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை . அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொண்டிராத பொது மக்களை காண்பது தற்போது அரிதாகவே உள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை விமர்சித்து பொது மக்கள் முகப்பு புத்தகத்தில் விடயங்களை பதிவேற்றம் செய்கிறார்கள்.

பதிவில் எனது பெயரையும் ,புகைப்படத்தையும் இணைத்து ‘ மதகுருவே தற்போது மகிழ்ச்சியா ‘ என பதிவிடுகிறார்கள். பொது மக்களின் இவ்வாறான செயற்பாடுகள் அவர்கள் அடைந்துள்ள ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

அரசாங்கம் எந்த கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது என்பதை அறிய முடியவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும் கடவுள் தான் பாதுகாக்க வேண்டும் என . இறுதியில் வேண்டியக் கொள்ளும் நிலைமை தற்போது தோற்றம் பெற்றுள்ளது என்றார்.