ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் நிதியுதவி

நாட்டில் உள்ள 12 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த தொகையை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு குறைவாக விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாவும், ஒரு ஹெக்டேயர் நிலப்பரப்புக்கு மேல் விவசாயம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 20,000 ரூபாவும் அடுத்த வாரம் முதல் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலடப்படும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ‍ தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.