இந்திய அதிகாரிகளை மீண்டும் சந்திக்கும் முயற்சியில் மைத்திரி

தாய்லாந்தில் உள்ள தமது நண்பரான இரத்தினக்கல் வர்த்தகர் முகமது அக்ரமின் அழைப்பிலேயே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு அண்மையில் தாய்லாந்து சென்றிருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் மைத்திரிபால இலங்கையில் இல்லாத நேரத்தில், அவரின் உதவியாளர்கள் என தங்களை வர்ணித்துக் கொள்ளும் இரண்டு பேர் முன்னாள் ஜனாதிபதியின் சார்பாக இந்திய இராஜதந்திரிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.

சிறிசேன ஒப்புதல்

இது சந்திப்புக்களை நடத்துவதற்கும், அவற்றை நடத்துவது சாத்தியமா என்பதை உறுதி செய்வதற்குமான குறுஞ்செய்திகளாகும். எனினும் இந்த சந்திப்புகளுக்கு சிறிசேன ஒப்புதல் அளித்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது.

அத்துடன் இந்திய தரப்பின் பதில் என்னவென்பதையும் ஆங்கில செய்தித்தாள் குறிப்பிடவில்லை. முன்னதாக, உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களுக்கு பின்னணியின் இந்தியா செயற்பட்டதாக மைத்திரிபால இலங்கையின் குற்றப்புலனாய்வுத்துறையிடம் முறையிட்டுள்ளார் என்ற தகவல்களின் மத்தியிலேயே இந்த குறுஞ்செய்தி தகவலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.