இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சகலவகையிலும் நினைவேந்துவோம் – ரெலோ தவிசாளர் நிரோஷ்

சுகாதார நடைமுறைக்கு உட்பட்டு நினைவேந்தலுடன் மரநடுகை, இரத்ததானத்தினையும் நாம் முன்வந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வழமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரச மற்றும் இராணுவ நெருக்கடிகளுக்குள்ளும் அச்சுறுத்தல்களுக்குள்ளுமே மேற்கொள்கொள்ளப்பட்டு வருகின்றது. இந் நிலையில் இம் முறை சுகாதார நெருக்கடி நிலையும் எம்மை நிர்க்கதிக்குள் தள்ளியுள்ளது.

கொரோனாவைக் கூட தனது மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்பதை பொலிஸார் தொடுக்கும் வழக்குகள் வாயிலாக புரிந்து கொள்ள முடிகின்றது. யுத்த தர்மங்களுக்கும் மனிதாபிமானச் சட்டங்களுக்குப் புறம்பாகவே திட்டமிட்டு எமது மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்.

இவ்வாறாக படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கொள்வதற்கு சகல உரிமைகளும் அங்கீகாரங்களும் எமக்கு உள்ளது. நினைவு கொள்;வதற்கான உரிமையினை அதி சுகாதார பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளவேண்டும் என்பதே இன்றைய தேவை.

கோவிட் தொற்று தொடர்பாக உலகம் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்த்துள்ள பொறுப்புணர்வை நிலைநாட்டி நினைவேந்துவதே எமது இனத்தின் கௌரவத்தினையும் பொறுப்புணர்வினையும் இயம்புவதாக அமையும்.

இலங்கையில் கொரோனாச் செயலணி இராணுவ மயப்படுத்தப்பட்ட ஒன்றாக உள்ள நிலையில் அதன் அறிவிப்புக்கள் பற்றிய கேள்விகள் நம்மிடையே உள்ளபோதும் துறைசார் வைத்தியத் துறையினர் நிலைமைகளின் விபரிதத்தினை எமக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். மருத்துவத்துறையின் அறிவிப்புக்களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்.

எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு தசாப்தங்கள் கடந்துள்ள போதும் இலங்கை அரசு பொறுப்புச் சொல்லவில்லை. மாறாக நினைவேந்தல் உரிமையைக் கூட கேள்விக்குட்படுத்துவதிலேயே அது கரிசனை கொள்கின்றது.

எமக்கு எதிரான படுகொலைகளுக்கும் மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்களுக்கும் நீதிவழங்கப்படாமை மீளவும் இவ்வாறான நிகழ்வுகள் உள்நாட்டிலும் வேறு நாடுகளில் கூட ஒடுக்கு முறைகளை எதிர்கொள்ளும் இனங்களுக்கு எதிராக எதுவும் மேற்கொள்ளப்படாது உத்தரவாதத்தினை கூட இல்லாமல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.