இலங்கையில் ஒளிபரப்பு சேவையினை ஆரம்பித்தது ஆதவன் தொலைக்காட்சி

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் தலைமையின் கீழ் பிரித்தானியாவை தலைமையகமாகக் கொண்டு கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு சேவையினை செய்துவரும் ஆதவன் தொலைக்காட்சி இன்று(புதன்கிழமை) முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பா, பிரித்தானியா, கனடா என புலம்பெயர்ந்து வாழும் உலக தமிழ் மக்களுக்கோர் உறவுப்பாலமாக ஆதவன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பு சேவையினை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறான பின்னணியைக் கொண்ட ஆதவன் தொலைக்காட்சி இன்று முதல் இலங்கையிலும் தனது ஒளிபரப்பினை ஆரம்பித்துள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் லைக்கா குழுமத்தின் பிரதித்தலைவர் பிரேம் சிவசாமி உள்ளிட்ட லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

மூன்று நேர பிரதான செய்திகளையும், மணித்தியால செய்திகளையும், தமிழர் தாயகத்தில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளையும், புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் தமிழர்களின் முக்கிய நிகழ்வுகளையும், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் என 24 மணித்தியாலங்களும் மக்களை மகிழ்ச்சிப்படுத்த ஆதவன் தொலைக்காட்சி தொடர்ந்தும் சேவையாற்றவுள்ளது.