இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம்

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி ஐக்கிய ஒன்றிய நாடாளுமன்றில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்பெய்ன்-மொக்ரோ எல்லைப் பகுதி, ரஸ்யா மற்றும் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குளும், எதிராக 15 வாக்களும் அளிக்கப்பட்டதுடன் 40 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பிரசன்னமாகவில்லை.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும் அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் சிவிலியன் சந்தேக நபர்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் கூடிய அதிக அதிகாரங்களை வழங்குவது குறித்து அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக சித்திரவகைள் இடம்பெறுவதாகவும் பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெறுவதாகவும், பலவந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும் இது சர்வதேச நியமங்களுக்கு அமைவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு மீளவும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் வழங்கப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்தல், மனித உரிமை விவகாரங்கள் உள்ளிட்ட 27 சர்வதேச பிரகடனங்களை அமுல்படுத்தல் ஆகிய நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த சலுகை வழங்கப்பட்டது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் வழியாக இந்த சலுகைத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தீர்மானம் நிறைவேற்றிய உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இலங்கைக்கு தற்காலிக அடிப்படையில் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் தி;ட்டத்தை இடைநிறுத்தக் கூடிய சாத்தியங்கள் உண்டா என்பதனை உன்னிப்பாக மதிப்பீடு செய்யுமாறும் கோரியுள்ளனர்.