இலங்கையில் 11 பேரை கடத்திக் கொலை செய்த அட்மிரலுக்கு ஐந்து நட்சத்திரங்கள்!

இலங்கையில் அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக நாட்டின் இளைஞர் யுவதிகள் உட்பட்ட பொதுமக்கள், எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படவேண்டும் என்றும் அவர் இன்று தமது நாடாளுமன்ற உரையின்போது கோரிக்கை விடுத்தார்.

இலங்கையின் அரசியல்வாதிகள் மாறப்போவதில்லை என்பதன் காரணமாகவே இளைஞர் மற்றும் யுவதிகள், அரசியல் கலாசாரத்தை மாற்றவேண்டும் என்று தாம் கோருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இளைஞர் யுவதிகள் இந்த மாற்றத்தை எதிர்பார்த்தபோதும் அவர்கள் ஏமாற்றப்பட்டனர். எனவே எதிர்காலத்தில் பொதுமக்கள் தூரநோக்கத்துடன் செயற்படுமாறு சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டார்.

அரசியலமைப்பு இல்லாத நாடாக இங்கிலாந்து இருக்கின்றபோதும் இங்கிலாந்தில் ஜனநாயகம் சிறப்பாக பேணப்படுகிறது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தபோது ஆதரவாளர் ஒருவரையும் அழைத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் தமது பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.

எனினும் இலங்கையின் அரசியல்வாதிகள், வெளிநாடுகளுக்கு செல்லும்போது தமது வளர்ப்புப்பிராணிகளையும் கொண்டு செல்கின்றனர் என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் இளவரசர் அன்றூ மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான விசாரணை ஆரம்பிக்கும் முன்னரே, அவர் வகித்து வந்த அட்மிரல் பதவியை மஹாராணி ரத்துச்செய்தார்.