இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை செய்யாதுவிடின் சர்வதேச சமூகம் செய்வதற்கு நேரும் – ஐ. நா. மனித உரிமைகள் பேரவை காட்டம்

கடந்த கால மீறல்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக்கூறல் செயல்பாடுகளை முன் னெடுக்கவில்லை. இது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும் – இவ்வாறு ஐ. நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நாடா அல்-நஷிப் எச்சரித்துள்ளார்.

அத்துடன் நம்பகமான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்புகூற வேண்டியவர்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் என்றும் இலங்கை தொடர்பில் அவர் நேற்றுமுன்வைத்த வாய்மூல அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடக்கிறது. இதில், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை நேற்று வாசிக்கப்பட்டது. பிரதி ஆணையாளர் இதனை முன்வைத்தார்.

அதில், “ஆழமான அரசமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொண்டு, பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவது மாத்திரமல்லாமல் மனித உரிமைகளை பாதுகாப்பதையும் உறுதிப்படுத்துமாறு இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தை அலுவலகம் வலியுறுத்துகின்றது.

உள்ளூர் பதற்றம் மற்றும் முரண்பாடுகளை தீர்க்கும் வகையில் தமிழ் கட்சிகளுடன் ஜனாதிபதி ஆரம்பித்துள்ள பேச்சுகள் மற்றும் தொல்பொருள், வனவள திணைக்களம் மற்றும் படைத் தரப்பினருக்கு காணிகளை சுவீகரிக்கப் போவதில்லை என்ற உறுதி மொழி ஆகியவற்றுடன் அனைத்து தரப்பினருக்குமான ஞாபகார்த்த நினைவுசின்னம் உட்பட கடந்தகால விடயங்களை கையாள்வது தொடர்பான அறிவிப்புகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நாங்கள் வரவேற்கின்றோம்.

எனினும் இந்த விடயங்கள் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஊடாக இந்த உறுதிமொழிகள் தெளிவாக தெரியக்கூடிய வகையில், இந்த மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நல்லிணக்க பொறிமுறையான உண்மை ஆணைக்குழு தொடர்பான அறிவிப்பு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் இரண்டு ஆணைக்குழுக்களை இலங்கை அரசாங்கம் அமைத்திருந்தது. எனினும், அந்த ஆணைக்குழுக்கள் மூலம் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்படவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிமனை பாதிக்கப்பட்டவர்களை திருப்தி செய்யும் வகையில் எதிர்பார்த்த இலக்குகளை அடையவில்லை. கடந்த காலம் தொடர்பான பொறுப்புக்கூறலில் கணிசமான இடைவெளி காணப்படுகின்றது. தண்டனை விலக்களிப்பு காணப்படும் வரை நீடித்த சமாதானத்தை அடைய முடியாது. 51/1 தீர்மானத்தின் கீழ் பொறுப்புகூறலை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் குறித்த முன்னேற்றம் தொடர்பாக அதற்கான குழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இது தற்போது முன்னெடுக்கப்படும் குற்றவியல் விசாரணைகளுக்கு உறுதியான ஆதரவளிக்கும் ஒன்றாக இருக்கும். ஐ. நா. மற்றும் ஏனைய மூலங்கள் ஊடாக சேகரிக்கப்படும் தரவுகள் எதிர்கால பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு பயன்படுத்த முடியும். இந்த செயல்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் முக்கிய பங்கை வகிப்பார்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகள் மற்றும் குடிசார் அமைப்புக்களுடன் செயல்திறன் மிக்க ஈடுபாடு இதில் இருக்கும். கடந்த கால மீறல்கள் குறித்து இலங்கை அதிகாரிகள், நம்பகமான விசாரணைகள் மற்றும் வழக்கு தொடுக்கும் செயல்பாடு உள்ளிட்ட ஏனைய பொறுப்புகூறல் செயல்பாடுகளை முன்னெடுக்கவில்லை. இந்தப் பொறுப்புகூறல் செயல்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாதுவிடின் சர்வதேச சமூகம் அதனை பூர்த்தி செய்வதற்கான பங்கை வகிக்க முடியும்” – என்றார்