இலங்கை இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்கா

இலங்கை இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”அமெரிக்கச் சட்டங்கள் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களங்களின் கொள்கையின் அடிப்படையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டன என நம்பகத் தன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ள பாதுகாப்பு படைப் பிரிவுகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்குவதில்லை.

இலங்கைப் படையினரைத் தற்போதைய எதிர்கால அச்சுறுதல்களை எதிர்கொள்ளக்கூடியவர்களாக மாற்றுவதில் இலங்கைக்கு உதவுவது குறித்து அமெரிக்கா அர்ப்பணிப்புடன் உள்ளது.

இதன்மூலம் பிராந்தியத்தினதும் உலகினதும் பாதுகாப்பிற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய நிலையில் அது விளங்குவதை உறுதி செய்ய விரும்புகின்றது.

பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது தொடர்ந்தும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதை வலியுறுத்தும். இது எங்கள் பயிற்சி உதவி மற்றும் ஈடுபாடுகள் தொடர்பில் அடிப்படையான விடயம்.

இராணுவத்தில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாக ஆராய்வோம். படையினர் கொள்கைகள், இராணுவக் கலாசாரம் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்களையும் உன்னிப்பாக ஆராய்வோம் .

அத்துடன் மனித உரிமைகளை நிலைநாட்டுவது, நம்பகத் தன்மை மிக்க பொறுப்புக் கூறல் மற்றும் நீதி நடைமுறைகளுக்கான இராணுவத்தின அர்ப்பணிப்பையும் நாங்கள் உன்னிப்பாக அவதானிப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.