இலங்கை தமிழர்களுக்காக பிரதமர் மோடி குரல் கொடுப்பார்- ராஜ்நாத் சிங்

இலங்கையில் தமிழர்கள், சமாதானம், சமத்துவம் மற்றும் கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வதற்கு, பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மாநாட்டில் அமைச்சர் ராஜ்நாத் சிங் மேலும் கூறியுள்ளதாவது, “2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது,யாழ்ப்பாணத்துக்கும் சென்றிருந்தார்.

அந்தவகையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முதலாவது இந்திய பிரதமர் என்ற பெயரையும் அவர் பெற்றார்.

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட உறவு இருக்கிறது. அவர் இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வார்.

மேலும் இந்திய அரசாங்கம், இலங்கையில் யுத்தப்பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு ,27 ஆயிரம் புதிய வீடுகளைகட்டிக் கொடுத்தது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.