ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வுகோரி புதுச்சேரி முதலமைச்சருடன் பேச்சு

சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் ஆகியன இணைந்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து, இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு அமைய, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி முதலமைச்சர்களை சந்தித்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக, சமதா கட்சி மற்றும் ஈழத் தமிழர் நட்புறவு மையம் இணைந்து புதுச்சேரி மாநில முதலமைச்சர் என்.ரங்கசாமியை அவரது இல்லத்தில் இன்று (12) சந்தித்தனர்.

இவர்களது கோரிக்கைகளை கேட்ட முதலமைச்சர் என்.ரங்கசாமி, மத்திய அரசுக்கு எடுத்துரைப்பதாக தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் சமதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் என். ஏ. கோன், சமதா கட்சியின் தமிழ் நாடு மாநிலப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், இளைஞர் அணி பொறுப்பாளர் வர்மா, சமதா கட்சியின் புதுச்சேரி மாநிலத்தலைவர் தினகரன், பொதுச்செயலாளர் ராஜகுரு, ஈழத்தமிழர் நட்புறவு மைய பிரதிநிதிகள் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.