உகாண்டாவின் நிலை இலங்கைக்கு ஏற்படும்: சரத் பொன்சேகா

உகாண்டாவை போலவே சீனாவின் கடன் இலங்கையை விழுங்கிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமையால் உகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா கையகப்படுத்தியதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

தேசிய திட்டமிடலொன்று இல்லாமல் சீனாவிடமிருந்து பாரியளவில் கடன் வாங்கும் ஊழலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் முறையற்ற முடிவு இதுவென்பதே சரத் பொன்சேகாவின் நிலைப்பாடாகும்.

இதனிடையே, மேற்குலகின் கடன் வலையிலிருந்து இலங்கையை சீனா காப்பாற்றியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்து, அத்தியாவசிய டொலர்களை திரட்ட அரசாங்கம் தீர்மானித்ததாகவும், அந்த பணம் சீனாவின் EXIM வங்கிக்கு திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது எனவும் சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.