உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி மைத்திரிக்கு முன்னரே தெரியும் – அருட்தந்தை சிறில் காமினி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி என்ன என்பது ஆரம்பத்திலிருந்தே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியும் என கத்தோலிக்க திருச்சபை நம்புவதாக கொழும்பு பேராயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கேட்கவில்லை.

அவர்களுக்கு ஒரு பையினை கொடுத்துவிட்டு மெழுகுவர்த்தி கொளுத்துவது அவமானம். மைத்திரிக்கு இதன் பின்னணி தெரியும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்குமா? இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது.

குண்டுவெடிப்பின் பின்னணியில் வேறு சிலரும் இருந்தார்கள் என்பதையே நாங்கள் மிக முக்கியமாக வலியுறுத்துகின்றோம்.

அதாவது இதன் பின்னால் சதி உள்ளதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கூறிய கதையும் வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம்

மைத்திரி வழங்கிய அந்த அறிக்கை என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

அவ்வாறு மைத்திரி கூறியதாக இருந்தால் ஏன் கடந்த 5 வருடங்களாக அவர் அதனை வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே மைத்திரிக்கு இந்த தகவல் கிடைத்திருக்கவேண்டும் என நாம் நம்புகின்றோம்.

இதற்கு நீதி கிடைக்கவேண்டும் எனில் சுதந்திரமாக செயற்படக்கூடிய ஒரு விசாரணைக்கு அவசியம் தேவை என்பதே எமது நிலைபாடு” என அருட்தந்தை சிறில் காமினி மேலும் தெரிவித்தார்.