எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நேர்ந்துள்ளது என்கிறார் மைத்திரி

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு 2019ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

ஆனால் இறுதியில் எனக்கு நேர்ந்ததே கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் நேர்ந்தது. பாதுகாப்புத்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது பயனற்றது, பாதுகாப்புத்துறை முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 410 பில்லியன் ரூபாவில் 100 பில்லியன் ரூபாவை கல்வி அமைச்சுக்கு மேலதிகமாக வழங்க ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் என சபையில் ஜனாதிபதிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவ.24) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு  மற்றும் தொழில்நுட்ப அமைச்சு  ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை 2009 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வேகமாக அபிவிருத்தி அடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்.

இதற்கு உப்பு, காரமாக என்னால் கருத்து குறிப்பிட முடியும், ஆனால் நேரம் இல்லாத காரணத்தினால்   இன்றைய  நாளுக்கான விடயம் தொடர்பில் கருத்துரைக்கிறேன்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக நான் பதவி வகிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு 280 பில்லியன் அல்லது 285 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால் தற்போது 410 பில்லியன் குறிப்பாக இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் எதிர்ப்பு தெரிவிக்க போவதில்லை, பொலிஸார் பல நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். அத்துடன் பொருளாதார பாதிப்பையும் பொலிஸார் எதிர்க்கொண்டுள்ளார்கள்.

பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கியுள்ள 410 பில்லியன் நிதியில் இருந்து 100 பில்லியன் ரூபாவை குறைத்து அதனை கல்வி அமைச்சுக்கு வழங்குமாறு ஜனாதிபதியிடம் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகிறேன். இலவச கல்வியை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், கல்வியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் 160 ரூபா உணவு கொடுப்பனவு தற்போதைய நிலைக்கு போதுமானதல்ல எற்றார்.