எம்.பியாகின்றார் பஸில் – நிதி அமைச்சுப் பதவியும் ஒப்படைப்பு?

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்வார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதும் பஸில் ராஜபக்சவுக்கு நிதி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது எனவும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்காகப் பதவி துறக்கவுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருடன் இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார் எனவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள பஸில் ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் திகதி நாடு திரும்புகின்றார்.