ஏப்ரல் மாதம் வரை போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

ஏப்ரல் மாதம் வரை போதுமான மசகு எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 30,000 பீப்பாய் எரிபொருள் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

800 மில்லியன் ரூபா பெறுமதியான எரிபொருள், இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

குறித்த எரிபொருள் தொகைக்கான கட்டணத்தை இலங்கை மின்சார சபை, எதிர்வரும் நாட்களில் செலுத்தவுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறினார்.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் நெப்டா,  டீசல் மற்றும் பல எரிபொருள் வகைகள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுகின்றன.

உபரியான சுத்திகரிப்பு எரிபொருள் தொகை களஞ்சியப்படுத்தப்படுவதுடன், இவ்வாறு களஞ்சியப்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தொகையானது கப்பல்கள் மூலம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கி வளாகத்திற்கு அனுப்பப்படுவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.