கப்ராலுக்கு எதிரான மனு மீது ஒக்டோபர் 7ல் விசாரணை

அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக கடமையாற்றுவதை தடுத்து ஆணையீட்டு எழுத்தாணையை பிறப்பிக்குமாறு கோரி மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகோனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அடுத்த மாதம் 7 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

மனு தொடர்பிலான ஆட்சேபனைகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு
யோசித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் அறிவித்தது.

மனுதாரர் சமர்ப்பித்துள்ள மனுவின் பிரதி நேற்று (21) தமக்கு கிடைத்ததாகவும் அதனை மதிப்பீடு செய்து விடயங்களை முன்வைக்க தமக்கு கால அவகாசம் தேவையெனவும் அஜித் நிவாட் கப்ரால் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுவின் பிரதிவாதிகளாக அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் ஜயசுந்தர, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ, மத்திய வங்கியின் துணை ஆளுநர் பெர்னாண்டோ, சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.