காகிதமில்லா மின்கட்டண பட்டியல், பற்றுச்சீட்டு – காஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபையின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 2023 ஜனவரி மாதம் முதல் காகிதமில்லா கட்டண பட்டியல் மற்றும் பற்றுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் பிரதேச பொது முகாமையாளர்கள் மற்றும் ஏனைய பொது முகாமையாளர்களுடன் இணைய வழியில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சர், தனது டுவிட்டரில் இன்று (07) தெரிவித்தார்.

இலங்கை மின்சார சபையின் செலவினங்களைக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இலங்கை மின்சார சபைக்கான புதிய தலைமையகத்தின் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், தெருவிளக்குகள் பொருத்துதல், தெருவிளக்குகளை இயக்குதல் ஆகியவற்றை முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் சபையால் செய்ய முடியாத வெளிச் சேவைகளை உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.