இலங்கை போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்

இலங்கையில் தமிழ் மக்களை கொன்றொழித்த போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்த பிரித்தானியா அரசாங்கம் செயற்படவேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவரும், தொழிற்கட்சித் தலைருமான சேர் கெயர் ஸ்ராமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று தனது தைப்பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்தியில், இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொடுமைகளைச் செய்த குற்றவாளிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. பிரித்தானிய தொழிற்கட்சி தமிழ் சமூகத்துடன் இணைந்து இருப்போம். இந்த நாளில் தமது எண்ணங்கள் இலங்கையில் இன்னல்களை அனுவித்த மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு ஆளானவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க தொழிற்கட்சி மீண்டும் உறுதியளிக்கிறது.

பிரித்தானிய அரசாங்கம் தமிழர்களுடன் இணைந்து இலங்கையில் கொடுமைகளை செய்த முகங்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பவும், ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளரின் உயர்ஸ்தானிகராலயத்தின் பரிந்துரைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.