கோட்டாபயவை பதவியிலிருந்து விரட்டி ஜனாதிபதியாவதற்கு பஸில் திட்டமிட்டார் – உதய கம்மன்பில

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அந்த நெருக்கடியை மேலும் பெரிதாக்கவே பஸில் ராஜபக்ஷ திட்டம் தீட்டினார். கோட்டாபயவை விரட்டி பாராளுமன்றம் ஊடாக தான் ஜனாதிபதியாகும் திட்டத்திலேயே பஸில் செயல்பட்டார்” – என்று பிவித்திரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், “கோட்டாபயவின் ஆட்சியில் தோன்றிய பொருளாதார நெருக்கடி உக்கிரமடையாமல் தடுப்பதற்குப் போதுமான வாய்ப்பு இருந்தது. ஆனால், பஸில் அதைச் செய்யவில்லை.

நிலைமையைத் தனக்கு சாதகமாக பயன் படுத்துவதற்கு அவர் திட்டம் தீட்டினார். பொருளாதார நெருக்கடி உக்கிர மடைந்து கோட்டாபய பதவியை விட்டு ஓடினால் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாகும் திட்டம் ஒன்றை பஸில் வகுத்திருந்தார்.

அதற்காவே இரசாயன பசளைக்கான தடைக்கு அவர் அனுமதி வழங்கினார். இரசாயனப் பசளைக்கான தடை எந்தளவு விளைவை நாட்டில் ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட பஸில் அதற்கு அனுமதி வழங்கினார். அதேபோல், எரிபொருள் நெருக்கடி வந்தபோது 14 மணி நேர மின்வெட்டுக்கு பஸில் அனுமதி வழங்கினார்.

இவை அனைத்தும் நாட்டில் பெரும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தும். அதனூடாகக் கோட்டாபய பதவியை விட்டு ஓடுவார் என்று பஸில் அறிந்து வைத்திருந்தார். அப்படி நடந்தால் பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாவது தான் பஸிலின் திட்டம். ஆனால், இடையில் வந்து ரணில் விக்கிரமசிங்க புகுந்து கொண்டதால் எல்லாம் பிழைத்துவிட் டது” – என்றார்.