பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கமைவாக இருக்க வேண்டும்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.

எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு விதிகளும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரோஸ் முச்செனா தலைமையிலான குழு மார்ச் 27 முதல் நேற்று வரை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை நிலைநாட்டவும் பாதுகாக்கவும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் கூறியுள்ளது.

மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அமைப்புக்கள், அவர்களின் நீண்ட கால கோரிக்கையான உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றைக் கேட்க அரசு அவசரமாகவும் உண்மையாகவும் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்துடனான விதிமுறைகளும் நிபந்தனைகளும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் மற்றும் பொது ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது