சீனாவுக்கு கறுவா,கடலுணவுகள், இரத்தினக்கற்கள் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான 12ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சில், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் சீன வெளிவிவகார பிரதி அமைச்சர் சன் வெய்டாங் ஆகியோரின் தலைமையில் இந்த ஆலோசனைகள் இடம்பெற்றன.

இருதரப்பு ஒத்துழைப்பு, பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு, தற்போதைய பொருளாதார மீட்பு செயல்முறை, வாழ்வாதார உதவி, நிதியுதவி, மக்களிடையே பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பலதரப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு தசாப்தங்களில் சீனாவின் புதிய அபிவிருத்தி முன்னுதாரணத்திற்கும், நவீனமயமாக்கலுக்கும் சீனாவின் பாதை மற்றும் மில்லியன் கணக்கான சீன குடிமக்களை வறுமையில் இருந்து வெற்றிகரமாக உயர்த்தியதற்கும் இட்டுச் செல்லும் சீனாவின் உயர்மட்ட அபிவிருத்திகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்ததாக சீனாவின் துணை அமைச்சர் சன் வெய்டாங் தெரிவித்தார்.

சவாலான காலக்கட்டத்தில் இலங்கைக்கு சீனா வழங்கிய உதவிகளை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பாராட்டியதுடன், சீனாவுக்கான இலங்கையின் ஏற்றுமதியை குறிப்பாக இலங்கை கறுவா , கடல் உணவு, பழங்கள், காய்கறிகள் மற்றும் இரத்தினக் கற்கள் ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கு சீனாவின் ஆதரவை கோரியிருந்தார்.

மேலும் அவர் இலங்கையின் பொருளாதார மீட்சியை விளக்கியதுடன் சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதை வரவேற்றார்.

இரு நாட்டு மக்களின் பரஸ்பர நன்மைக்காக இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இலங்கையும் சீனாவும் இந்த ஆலோசனைகளின் போது உறுதியளித்தன.